குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வந்து மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்

Posted On: 27 NOV 2020 1:59PM by PIB Chennai

"பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்," என்று குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஆதிசங்கரர் பிறந்த இடமான காலடியில் ஆதி சங்கரா டிஜிட்டல் அகாடமியைகாணொலி காட்சி மூலம் திரு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கு மிகப் பெரிய இயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்களும் முக்கிய பங்காற்ற வேண்டும். இன்றைய அறிவுசார் சமுதாயத்தில், தகவல் முக்கிய விஷயமாக உள்ளது. தகவல்களை விரைவாக அணுகக்கூடியவரே பயன் அடைவர். அது போன்ற தகவலை பெறுவதற்கு டிஜிட்டல் மயம்தான் ஒரே வழி.

கொவிட்-19 பெருந்தொற்று பள்ளிகளை மூட வைத்து கோடிக்கணக்கான மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றிவிட்டது. இந்த சவாலுக்கு ஆன்லைன் கல்வி மூலம் தீர்வு காண உலக சமுதாயம் முயற்சிக்கிறது.

கற்பித்தலையும், கற்றலையும் மாற்றுவதற்கான வாய்ப்பை தொழில்நுட்பம் வழங்குகிறது. தொழில்நுட்பம் வேகமாக மாறுவதால், புதிய யுகத்தின் தேவைக்கேற்ப கல்வி முறைகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தொலைதூர பகுதிகளிக்கும் தரமான கல்வி, குறைந்த செலவில் கிடைக்க ஆன்லைன் கல்வி உதவுகிறது. இது தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஆன்லைன் கல்வி, கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத இல்லத்தரசிகள் மற்றும் பணியாளர்களுக்கும் உதவியாக உள்ளது. கொவிட் தொற்றுக்குப் பின்பும், ஆன்லைன் கல்வி விருப்பத் தேர்வாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. கொவிட்-19 தொற்று கல்வி அமைப்பை மாற்றிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கொவிட்-19 தொற்றுக்கு முன்பே கல்வியில் தொழில்நுட்பம் வேகம் எடுக்கத் தொடங்கியது. உலகளாவிய கல்வி தொழில்நுட்பத் துறை கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்து வருகிறது. இது கல்வி கற்பவர்களுக்கு மட்டும் அல்ல, கல்வி தொழில் முனைவோர்களுக்கும் மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இத்துறை வழங்கும் திறன்களை பெற்று, புதுமைகள் படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

நெருக்கடி காலங்களில், சமூக-பொருளாதார நடைமுறையை எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதை கொவிட்-19 தொற்று நம்மை அறிய வைத்துள்ளது. டிஜிட்டல் வழியில் வாழ, எவ்வளவு பேர் தயாராக உள்ளனர் என்ற கேள்வியை இந்த கொவிட் அனுபவம் எழுப்பியுள்ளது. இதற்கு தேவையான கட்டமைப்பு விஷயங்கள், கணினிகள், திறன் பேசிகள் போன்ற உபகரணங்கள், வேகமான இணைய இணைப்பு போன்ற விஷயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். 

ஆன்லைன் வகுப்புகள் ஆசிரியர்-மாணவர்கள் இடையே நல்ல கலந்துரையாடலை ஏற்படுத்தலாம். ஆனால், அது வகுப்பறையில் கிடைக்கும் தொடர்புக்கு ஈடாகாது. ஆன்லைன் கல்வி, போதிய அளவு தீவிரமாக இல்லை என பெற்றோர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கொவிட்-19 தொற்று காரணமாக அவசரத்தில் ஆன்லைன் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதால், இந்த கருத்து ஏற்பட்டிருக்கலாம். 

வகுப்பறையில் நடத்தப்படம் நேரடி பாடம், விளையாட்டு, உடற்பயிற்சி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியமான விஷயங்கள். இவற்றை ஆன்லைன் கல்வியால் அளித்துவிட முடியாது.

மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஆன்லைன் மற்றும் வகுப்பறை கல்வி இணைந்த கல்வி மாதிரியை உருவாக்க வேண்டும். பாடங்களை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்யும் கல்விக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேக சிந்தனை, கற்பனை, புதுமையை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676422

 

*******************



(Release ID: 1676464) Visitor Counter : 245