பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

சிறைவாசிகள் செய்யும் கலைப்பொருட்களை விற்கும் டிரைஃபெட்

Posted On: 16 NOV 2020 4:54PM by PIB Chennai

தான் விற்பனை செய்யும் பொருட்களின் எண்ணிக்கையை சமீப வாரங்களில் விரிவாக்கிக் கொண்டே போகும் டிரைப்ஸ் இந்தியா, ஜக்தல்பூர் மத்திய சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களை தற்போது தனது பட்டியலில் இணைத்துள்ளது.

இது குறித்து பேசிய இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பின் (டிரைஃபெட்) நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா, "பழங்குடியினரின் வாழ்வை மாற்றியமைக்கவும், அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. ஜக்தல்பூர் மத்திய சிறையுடனான எங்களது கூட்டணி, பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் மற்றும் இதர தயாரிப்புகளுக்கு பெரியதொரு சந்தையை வழங்கும் எங்களது மற்றுமொரு முயற்சியாகும்," என்றார்.

இந்த முயற்சி அவர்களை சுயசார்படைய செய்வதோடு, தற்சார்பு இந்தியாவையும் கட்டமைக்க உதவும் என்று கூறிய அவர், தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், பரிசுகளை வழங்குவதற்கு மின்-வணிக சந்தையில் நல்லதொரு வாய்ப்பை வழங்குவதோடு, சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினரின் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கும் என்றார்.

சத்தீஸ்கரின் உள்ள ஜக்தல்பூர் சிறையில் இருக்கும் பழங்குடியினர் செய்த அழகான சாமி சிலைகள், கேட்கி கூடைகள் ஆகியவை இன்று டிரைப்ஸ் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விநாயகர், லட்சுமி, துர்கா ஆகிய கடவுளர்களின் கண்கவர் சிலைகள் பரிசுப் பொருட்களாக வழங்குவதற்கு உகந்தது.

இவை 125 டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிக தளமான tribesindia.com-லும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673190

                               **********************



(Release ID: 1673215) Visitor Counter : 183