விவசாயத்துறை அமைச்சகம்
உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரிப்பு: மக்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தகவல்
Posted On:
15 SEP 2020 4:04PM by PIB Chennai
மத்திய வேளாண் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான பட்ஜெட் கடந்த 2014-15-ம் ஆண்டில் ரூ.115.44 பில்லியனாக இருந்தது. இது 2017-18ல் ரூ.173.60 பில்லியனாக உயர்த்தப்பட்டது.
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்தி, வேளாண்துறையில் நாட்டை தற்சார்புடையதாக்க, 103 வேளாண் ஆராய்ச்சி மையங்கள், 75 வேளாண் பல்கலைக்கழகங்கள், 3 மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள், 11 வோளாண் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மாவட்ட அளவில் வேளாண் விஞ்ஞான மையங்கள் (KVKs) என்ற நெட்வொர்க்கை DARE/ICAR உருவாக்கியுள்ளது. இந்த மையங்கள், அதிக மகசூல் தரும், பயிர் வகைகளை வழங்கி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கின்றன.
இதன் காரணமாக 2019-20ம் ஆண்டில், உணவு தானியம், பருப்புகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, தோட்டக்கலை உற்பத்தி,பால் மற்றும் மீன் ஆகியவற்றின் ஆண்டு மொத்த உற்பத்தி முறையே 295.67, 23.01, 33.50, 358.14, 313.35, 187.70 மற்றும் 13.42 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளன. இவற்றின் மூலம் நாடு தன்னிறைவு பெறுவதுடன் பெரும்பாலான பொருட்கள் தேவைக்கு அதிகமாக உள்ளன.
வேளாண் உட்பட அனைத்து அறிவியல் துறைகளிலும், ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு வெளிநாட்டு ஆராய்ச்சி மையங்கள்/பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
அசாமில் வேளாண் ஆராய்ச்சி மையம் :
அசாமில் ஐசிஏஆர் -இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் திரு.நரேந்திர மோடி கடந்த 2017ம் ஆண்டு நாட்டினார். மொத்தம் உள்ள 587 ஏக்கர் நிலத்தில், 45 ஏக்கர் பரப்பில் ஆராய்ச்சி மையத்துக்கான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
கடந்த 2015-16ம் கல்வியாண்டில் இருந்து, ஐஏஆர்ஐ-அசாம் மாணவர்கள், எம்.எஸ்.சி படிப்புக்காக ஐஏஆர்ஐ-தில்லியில் சேர்க்கப்படுகின்றனர். இதுவரை, 55 மாணர்வகள் எம்.எஸ்.சி படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேர் பட்டம் பெற்று விட்டனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறித்து ஆய்வு:
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை பயிரிட மத்திய அரசு கடந்த 2002ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இது பற்றி ஐசிஏஆர் நீண்ட கால ஆய்வு மேற்கொண்டதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியால் நிலத்துக்கோ, விலங்குகளுக்கோ எந்த தீவிர பாதிப்பும் ஏற்படுவதாக கண்டறியப்படவில்லை. ஆனாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில், நீண்ட ஆய்வுக்கு பின்பே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிகாய்க்கு கடந்த 2009ம் ஆண்டே ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் நியமித்த தொழில்நுட்ப நிபுணர் குழு, மரபணு மாற்ற பயிர்களுக்கு விதித்த 10 ஆண்டு தடையால், இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
விவசாயிகளின் நலனை காப்பதற்காக, மரபணு மாற்றப் பயிர்களை பரிசோதனை செய்ய மத்திய அரசு கடுமையான வழிகாட்டுதல் விதிமுறைகளை வகுத்துள்ளது.
ஒட்டக ஆராய்ச்சி மையம்:
தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்துக்கான கிளையை குஜராத் மாநிலத்தின் பிகானிரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கராய் இன ஒட்டகங்களை பாதுகாக்க, தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையம், குஜராத்தின் காமதேனு பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒட்டக வளர்ப்புக்காக விவசாயிகளுக்கு பயிற்சி, ஒட்டகப் பாலை விற்பனையை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
விரிவான தகவல்களுக்கு கீழ்க் காணும் ஆங்கில செய்திக் குறிப்புக்களைப் பார்க்கவும் :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654492
------
(Release ID: 1654961)