மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
‘உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில்’ இறுதிக் கூட்டத்தொடரில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உரையாற்றினார்.
Posted On:
07 AUG 2020 7:09PM by PIB Chennai
‘தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில்’இன்று, இறுதிக் கூட்டத்தொடரில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ரமேஷ்பொக்ரியால் ‘நிஷாங்க்’, காணொளி மாநாடு மூலமாக உரையாற்றினார். மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
உயர்கல்வித் துறை செயலர் திரு.அமித் காரே, பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் திரு.டி.பி. சிங் மற்றும் அமைச்சகத்தின், பல்கலைக்கழக மானியக் குழுவின், மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
இந்த மாநாட்டின் இறுதிக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், பிரதமரின் எதிர்பார்ப்புகளையும், கருத்துக்களையும் மீண்டும் எடுத்துரைத்தார். தேசிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து உயர்கல்வி அமைப்புகளும், தங்களது கல்வி அமைப்புகளில் இணையவழிக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அனைத்து அறிவுசார் விஷயங்களையும் பாராட்டிய அவர், அவற்றை ஒரு தொகுப்பாகப் பாதுகாத்து வைக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார். வேலை வாய்ப்பை உருவாக்குவது, வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று கூறிய அவர், இதைத்தான் தேசிய கல்விக் கொள்கை 2020 பிரதிபலிக்கிறது என்றார்.
பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை அறிமுகப்படுத்திய திரு.பொக்ரியால் 2030 ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே மிக அதிக அளவில், பணி செய்யக்கூடிய வயதிலான மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று கூறினார். இந்தியாவின் பரந்த மக்கள் தொகையை, திறனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கு கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய அளவில் அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாநாட்டில் பங்கேற்றவர்களிடையே பேசிய திரு.தோத்ரே, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பிரதமர் விவரித்தது போல மிகச் சிறந்த முறையில், இந்த தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கொள்கை, தேசிய கல்வி முறையில் பரிணாம வளர்ச்சியுடன் கூடிய மாற்றங்களைக் கொண்டுவர வல்லதாக இருக்கும் என்றார். இந்த கொள்கைக்கான திட்ட வரைவை இயற்றிய திரு.கே.கஸ்தூரிரங்கன், அவரது குழுவினர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மாநாட்டில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய திரு.காரே, தேசிய கல்விக் கொள்கை, மாணவர்களது அறிவியல் கண்ணோட்டத்துடனான ஒட்டுமொத்த வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிறது என்று கூறினார். ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத் என்ற பாதையை தேசிய கல்விக் கொள்கை உருவாக்கும் என்றும், அனைவருக்கும் கல்வி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
(Release ID: 1644643)