புவி அறிவியல் அமைச்சகம்
தெற்கு கடற்கரையோர ஓமான், அதையொட்டியுள்ள ஏமன் ஆகிய பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
Posted On:
30 MAY 2020 1:03PM by PIB Chennai
இந்திய வானியல் ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ புயல் முன்னறிவிப்புப் பிரிவு கூறியுள்ளதாவது:
தெற்குக் கடலோர ஓமனிலும், அதையொட்டியுள்ள ஏமனிலும் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நிலையாக உள்ளது. 30 மே 2020 இன்று காலை எட்டரை மணி நிலவரப்படி அட்சரேகை 17.3°வடக்கு, தீர்க்கரேகை 54.2° கிழக்கில், சலாலாவிலிருந்து (ஓமன்) வடக்கு வடகிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், அல்காயிதாவிலிருந்து (ஏமன்) கிழக்கு வடகிழக்கு சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரங்களில் இது மேலும் தீவிரமடைந்து மிக ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அடுத்த 12 மணி நேரங்களில், இது மேற்கு வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து, அதன் பிறகு மேற்கு தென்மேற்கு திசையில் நகரக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
- அடுத்த 48 மணி நேரங்களில் தெற்கு ஓமன் - ஏமன் கடலோரப் பகுதிகளிலும், மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளிலும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தென்கிழக்கு, அதையொட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் இரண்டாவது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு உள்ளதால், 31 மே 2020 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(Release ID: 1627878)
Visitor Counter : 179