வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் திரு பியூஸ் கோயல் சந்திப்பு;

கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடும் திறனை உருவாக்க முடக்க காலத்தை நாடு பயன்படுத்திக் கொண்டது

Posted On: 29 MAY 2020 9:59AM by PIB Chennai

வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். முடக்க காலத்தில் கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையில் நாடு இறங்கி, அதற்கான கொள்திறனை உருவாக்கியது. முக கவசம், கிருமிநாசினிகள், கையுறைகள், பிபிஇ பாதுகாப்பு உடைகள் போன்றவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வது அதிகரித்தது, சுகாதார கட்டமைப்புகள் மேம்பட்டது மற்றும் மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதற்குமுன் ஏற்படாத நெருக்கடியைச் சந்திக்க அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளைப் பின்பற்ற நாம் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் விடுத்த அழைப்பை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என அவர் கூறினார். முடக்க காலத்தில் உருவாக்கப்பட்ட ஆரோக்ய சேது செயலி பாதுகாப்பு கவசமாகவும், நண்பனாகவும், நெருக்கடி நேரத்தில் தகவல் அளிப்பதாகவும் உள்ளது. மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, சூழலுக்கு ஏற்ப வாழவும், சிந்தித்து செயல்படவும், விரைவாக பழகிக் கொண்டனர். பிரதமர் சரியான நேரத்தில் எடுத்த முடிவும், அதை மக்கள் பின்பற்றியதும் நாட்டுக்கு உதவியது. நல்ல வளங்களுடனும், குறைவான மக்கள் தொகையும் உடைய பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் நல்ல நிலையில் உள்ளோம் என திரு பியூஸ் கோயல் கூறினார்.

விதிமுறைகள் தளர்வுக்குப் பிறகும், சில்லரை வியாபாரிகள் சந்தித்த சில பிரச்னைகள் தொடர்பாக அமைச்சர் கூறுகையில், அத்தியாவசியம், அத்தியாவசியமற்றது என்ற பாகுபாடு இல்லாமல் பெரும்பாலான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்றார். சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு விதிமுறைகளை ஆய்வுசெய்தபின்பு, வணிகவளாகங்களில் கடைகள் திறக்கும் முடிவும் விரைவில் எடுக்கப்படும். கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட, மத்திய நிதியமைச்சர் அறிவித்த சுயசார்பு இந்தியா நிதியுதவித் திட்டம், சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.3 லட்சம் கடன் உத்திரவாதமும், வர்த்தகர்களுக்கு பாதுகாப்பும் வழங்கியுள்ளது.  சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும், வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

பொருளாதார நடவடிக்கைகள் மீண்டு வருவதை, பல அளவீடுகள் காட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த மாதத்தின் மின் உபயோகம், கிட்டத்தட்ட கடந்தாண்டு இதே காலத்தில் இருந்த அளவுக்கு இணையாக உள்ளது, ஆக்சிஜன் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 60 சதவீத அளவுக்கு குறைந்த ஏற்றுமதி, தற்போது முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ளது. இந்தமாதம் ஏற்றுமதி குறைவு சிறிதளவே இருக்கும் என ஆரம்பக்கட்ட புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. சேவை ஏற்றுமதிகள் கடந்த மாதம் அதிகரித்துள்ளன. வணிக ஏற்றுமதி குறைந்ததைவிட, கடந்த மாதம் இறக்குமதி அளவும் அதிகளவில் குறைந்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை குறைவதாக அவர் குறிப்பிட்டார்.



(Release ID: 1627633) Visitor Counter : 295