மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடைப் பராமரிப்பில் புதிய தொழில் முனைவுக்கான விருதுகள்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2020 8:05PM by PIB Chennai
கால்நடைப் பராமரிப்புத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கான பல்வேறு விருதுகளை மத்திய கால்நடைப் பராமரிப்பு, மீன் வளம் மற்றும் பால் வளத் துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் இன்று (மே 8) தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் வழங்கினார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் திரு. சஞ்சீவ் குமார் பல்யான், கால்நடைப் பராமரிப்புத் துறைச் செயலர் திரு. அதுல் சதுர்வேதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கால்நடைப் பராமரிப்புத் துறையிலும் பால்வளத் துறையிலும் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய முறைகள், வணிக ரீதியிலான தீர்வுகளைக் கண்டறிவதை ஊக்குவிப்பதற்காக ‘கால்நடைப் பராமரிப்பு எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறையும் தொடங்குக இந்தியா திட்டமும் இணைந்து இதை உருவாக்கியுள்ள இத்திட்டத்தை பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மதுரா நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடைபெற்ற கால்நடை நோய்க் கட்டுப்பாடு குறித்த தேசிய திட்ட நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஆறு வகையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உரிய தீர்வுகளுடன் பங்கேற்க இந்தச் சவால் திட்டம் வகை செய்கிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அடைகாப்பு காலமாக மூன்று மாத காலம் அளிக்கப்படும். தவிர, அவர்களது கருத்தியலை நிரூபிப்பதற்கான ஆய்வக வசதி, பரிசோதனை வசதி, வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும். இத்தொழிலில் முதலீடு செய்வோருக்கான பயிலரங்கும் நடத்தப்படும். திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஒன்பது ஆண்டுகளுக்கு அவர்களது செயல்பாடுகளை அவ்வப்போது பார்வையிடுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1622423)
வருகையாளர் எண்ணிக்கை : 162