எரிசக்தி அமைச்சகம்

மின்சார சிக்கன நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் ஆண்டில் ரூ.89,122 கோடி அளவுக்கு சேமிப்பு கிடைத்துள்ளது

Posted On: 06 MAY 2020 6:33PM by PIB Chennai

மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கத்த எரிசக்தித் துறை இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் நலத் துறை இணை அமைச்சருமான  திரு ஆர்.கே. சிங், ``மின்சார சிக்கன நடவடிக்கைகளால் 2018-19ல் ஏற்பட்ட தாக்கம்'' குறித்த அறிக்கையை காணொலி காட்சி மூலம் இன்று வெளியிட்டார்.  இணையப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அவர், ``2005 ஆம் ஆண்டில் இருந்த மின் உபயோகத்தைவிட 2030 ஆம் ஆண்டுக்குள் 33 முதல் 35 சதவீதம் வரை குறைத்துவிடுவோம் என்று பாரிஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் உறுதியளித்தோம். இப்போது, நமது சிக்கன நடவடிக்கைகள் காரணமாக, 2005ல் இருந்ததைவிட 20 சதவீதம் அளவுக்கு மின்சார சேமிப்பு செய்திருக்கிறோம். இது உண்மையிலேயே மிகச் சிறப்பான செயல் திறனைக் காட்டுகிறது'' என்று கூறினார்.

வருடாந்திர மின் சேமிப்பு மற்றும் கரியமில வாயு உற்பத்தி நிலவரம் குறித்து சுதந்திரமான மதிப்பீடு செய்வதற்காக எரிசக்தி சிக்கன நிறுவனம் நியமித்த பி.டபிள்யூ.சி. லிமிடெட் என்ற நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. பல்வேறு மின் சிக்கன நடவடிக்கைகளால் 2018-19 ஆம் ஆண்டில் 113.16 பில்லியன் யூனிட்கள் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது என்றும், இது ஒட்டுமொத்த மின்சார பயன்பாட்டில் 9.39 சதவீத சேமிப்பாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த எரிசக்தி சேமிப்பு 23.73 Mtoe  (மில்லியன் டன் கச்சா எண்ணெய்க்கு ஈடான அளவு) ஆக உள்ளது. இது 2018-19ல் ஒட்டுமொத்த எரிசக்தி விநியோகத்தில் (879.23 Mtoe ) 2.69 சதவீத சேமிப்பாகும்.



(Release ID: 1621792) Visitor Counter : 182