சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சீனாவில் புதிய கரோனோவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது: சீனா செல்லும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குறிப்பு
Posted On:
17 JAN 2020 2:54PM by PIB Chennai
சீனாவில் புதிய வகை கரோனோவைரஸ் நுண்கிருமி தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11.01.2020 நிலவரப்படி 41 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் உயிரிழந்தார். சீனாவுக்குப் பயணமாக சென்ற தாய்லாந்து நாட்டவர் ஒருவரும். ஜப்பான் நாட்டவர் ஒருவரும் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தொற்றின் முக்கிய அறிகுறி காய்ச்சல் ஆகும். ஒருசிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
இந்தத் தொற்று எவ்வாறு பரவுகிறது என்பது தற்போதைக்கு தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு இது தொற்றுகிறது என்பதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரம் ஏதுமில்லை.
உலகச் சுகாதார நிறுவனத்தின் அபாய மதிப்பீட்டின்படி இந்தத் தொற்று உலக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனத் தெரியவருகிறது. எனினும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுக்கு பயணம் செல்பவர்கள் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சீனாவுக்கு பயணம் செல்பவர்கள் கீழ்கண்ட எளிமையான பொதுச் சுகாதார நடவடிக்கைகள் அனைத்துச் சமயங்களிலும் மேற்கொள்ள வேண்டும்:
- சிறந்த தனிநபர் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்
- அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுதல்
- மூச்சுவிடுகையில் மரியாதை நிமித்த நடவடிக்கைகளை பின்பற்றுதல் – இருமும்போதும். தும்மும்போதும் வாயைத் துணியால் மறைத்துக் கொள்ளுதல்
- உடல்நலக் குறைவு, இருமல் மற்றும் சளி போன்ற காய்ச்சல் அடையாளம் உள்ளோருடன், நெருங்கிய தொடர்புகளைத் தவிர்த்தல்
- விலங்குகளுடன் நேரடித் தொடர்பை தவிர்த்தல், சரியாக வேகவைக்காத அல்லது பச்சையான இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்தல்
- பண்ணைகள், கால்நடைச் சந்தைகள், கால்நடை வெட்டும் இடங்கள் ஆகியவற்றுக்கு செல்வதைத் தவிர்த்தல்
- இருமல் அல்லது அது போன்ற சுவாச நோய் அறிகுறிகள் இருந்தால் துணிக்கவசங்களை அணிதல்
சீனாவுக்கு, குறிப்பாக ஊஹான் நகருக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளும் தங்களது உடல்நலத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்
- உடல்நலக்குறைவு மற்றும் காய்ச்சல், இருமல் இருந்தால் இருமும்போதும், தும்மும்போதும் வாயைத் துணியால் மூடவேண்டும், பயணம் செல்லக் கூடாது, உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.
- இந்தியா திரும்பும்போது விமானத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், விமான ஊழியர்களிடம் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும், முகத்துக்கு முகமூடியைக் கேட்டுப் பெறவேண்டும். சகபயணியருடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும், இறங்கும்போது விமானப் பணியாளர்கள் கூறும் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.
- விமானப் பயணம் முடித்து வெளியேறும்போது, விமான நிலைய சுகாதார அதிகாரிகள் / குடிவரவு அதிகாரிகளிடம் தகவல் அளிக்க வேண்டும், விமான நிலைய சுகாதார அதிகாரியின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.
- சீனாவிலிருந்து திரும்பிய பின் ஒருமாத காலத்திற்குள் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதார அமைப்பில் தகவல் தெரிவிக்க வேண்டும், சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் உங்கள் பயண வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும்.
----
(Release ID: 1599666)
(Release ID: 1599695)