பிரதமர் அலுவலகம்

பிரதமரின் விளாடிவோஸ்டாக் பயணத்தின் போது இந்தியாவும் – ரஷ்யாவும் வெளியிட்ட கூட்டறிக்கை

Posted On: 04 SEP 2019 7:59PM by PIB Chennai

``நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு மூலம் ஒத்துழைப்பில் புதிய உச்சங்களை எட்டுதல்''

 

  1. இந்தியக் குடியரசின் பிரதமர் மாண்புமிகு  நரேந்திர மோடி, ரஷிய அதிபர் மாண்புமிகு திரு விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று, அரசு முறைப் பயணமாக 2019 செப்டம்பர் 4-5 தேதிகளில் ரஷியா சென்றிருந்தார். 20வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாடு, விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்றது. மாண்புமிகு திரு. நரேந்திர மோடி 5வது கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் முதன்மை விருந்தினராகவும் பங்கேற்றார்.
  2. 20வது வருடாந்திர உச்சி மாநாட்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் ரஷியா இடையில் சிறப்பு மற்றும் முன்விருப்ப உரிமை, ராணுவ பங்களிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பதிவு செய்தனர். ஒத்துழைப்புக்கு சாத்தியமான அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக, இயல்பான நம்பிக்கை கொண்டதாகவும் பரஸ்பரம் பயன் தருவதாகவும், தனித்துவமானதாகவும் இந்த உறவுகள் உள்ளன. ஒரே மாதிரியான நாகரீக மாண்புகள், காலம் காலமான நட்புணர்வு, பரஸ்பர புரிதல், நம்பகத்தன்மை, பொதுவான அக்கறைகள் மற்றும் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்த அடிப்படை விஷயங்களில் அணுகுமுறைகளைப் பெறுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இவை உள்ளன. பல்வேறு சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களின் போது நடப்பது உள்பட, அவ்வப்போது இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசுவதும், அனைத்து நிலைகளிலும் இருதரப்பு தொடர்புகள் அதிகரித்து வருவதும், இந்த பங்களிப்பின் வெளிப்படையான நிரூபணங்களாக உள்ளன.
  3. கொந்தளிப்பான  தற்கால உலக சூழ்நிலையில், இந்தியா - ரஷியா உறவுகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டு வந்துள்ளன. வெளிப்புற சூழ்நிலைகளால் இந்த உறவுகள் ஒருபோதும் பாதிக்கப்பட்டதில்லை, இனியும் பாதிக்கப்படாது. இரு தரப்பு உறவுகள் முன்னேற்றத்தின் முழுமையான களமும் இரு நாடுகளும் வெளிநாட்டுக் கொள்கைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. நமது முக்கியத்துவமான பங்களிப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை அனைத்து வழிகளிலும் முன்னெடுத்துச் செல்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், ஸ்திரத்தன்மை என்ற அச்சாரத்தின் காரணமாக உருவாகியுள்ள சிறப்பு மற்றும் முன்விருப்ப உரிமை இயல்புகளை வெளிக்காட்டும் வகையில் இதை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
  4. தங்களுடைய நாடாளுமன்றங்களுக்கு இடையில் தீவிரமான ஒத்துழைப்புக்கு இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப் பட்டது. இரு தரப்பு உறவுகளின் மதிப்புமிக்க அம்சமாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. டிசம்பர் 2018ல் ரஷிய நாடாளுமன்றத் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி அவர்கள் குறிப்பிட்டனர். மக்களவை சபாநாயகர் 2019ன் பிற்பகுதியில் ரஷியாவுக்கு வருகை புரிவதை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது.
  5. இந்தியா - ரஷியா உறவுகளை இன்னும் விரிவாக்கம் செய்வதற்கான அடிப்படைகளாக வலுவான, பன்முகத்தன்மை கொண்ட, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளுக்கு இரு தரப்பிலும் முன்னுரிமை தருவது பற்றியும் வலியுறுத்தப்பட்டது.
  6. வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு விஷயங்களில் இந்தியா - ரஷியா அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் செயல்பாடுகளை இரு தலைவர்களும் பாராட்டினர். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புகள் மேம்பாட்டை இந்த ஆணையம் உறுதி செய்கிறது.
  7. இரு தரப்பிலும் சீரான பரஸ்பர வர்த்தக அளவு அதிகரித்து வருவது பற்றி இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். 2025 ஆம் ஆண்டுக்குள் இதை 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்த்துவதற்கு, ஆதார வளங்களை செம்மையாகப் பயன்படுத்துதல், இந்தியா மற்றும் ரஷியாவில் உள்ள மனிதவள ஆற்றலை செம்மையாகப் பயன்படுத்துதல், தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு பங்களிப்பு வாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக, நவீன உயர் தொழில்நுட்பத் துறைகளில் இவற்றைச் செய்தல், ஒத்துழைப்புக்கு உரிய புதிய துறைகளையும், அவற்றின் தன்மைகளையும் கண்டறிதல் ஆகியவையும் வலியுறுத்தப்பட்டன.
  8. `மேக் இன் இந்தியா' திட்டத்தில் ரஷிய தொழில் துறையினரின் பங்கேற்பை விரிவுபடுத்துவதிலும், ரஷியாவில் திட்டங்களில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை விரிவுபடுத்துவதிலும்  தங்களுடைய அக்கறையை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். இந்த விஷயம் தொடர்பாக, பரஸ்பர முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து, இந்தியா - ரஷியா அரசுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான ஆயத்தப் பணிகளை விரைவுபடுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  9. பாதுகாப்பு நடவடிக்கைகள், சுங்கம் மற்றும் நிர்வாகத் தடைகள் உள்பட பரஸ்பர வர்த்தகத்தில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு கூட்டாக முயற்சிகள் மேற்கொள்வதைத் தீவிரப்படுத்தவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப் பட்டது. மேலும் இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் குறைப்பது பற்றி பரிசீலிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. யூரோ ஆசியான் பொருளாதார யூனியன் (EAEU) மற்றும் இந்தியக் குடியரசுக்கு இடையில் உத்தேசிக்கப் பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இது நடைமுறைபடுத்தப்படும்.
  10. சரக்குகள் மற்றும் சேவையில் வர்த்தகம், தொழில்முனைவோர் செயல்பாடுகள் மற்றும் முதலீட்டுக்கான சூழ்நிலை, இணக்கம் காணுதல் மற்றும் உரிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகளை செழுமையாக்குதல், தொழில்நுணுக்க, சானிட்டரி மற்றும் பைட்டோ சானிட்டரி தேவைகளை முறைப்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
  11.   அந்தந்த நாட்டு தேசிய கரன்சிகள் மூலம் பரஸ்பர பட்டுவாடாக்களை நேர் செய்து கொள்வதை மேம்படுத்தும் பணிகள் தொடரும்.
  12. இரு தரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக ரஷிய ஏற்றுமதி மையத்துடன் இணைந்து, மும்பையில் உள்ள இந்தியாவுக்கான ரஷிய வர்த்தக திட்ட வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரஷிய ஏற்றுமதி ஆதரவு குழு அலுவலகத்துக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் ரஷிய முதலீடுகள், இந்தியா முதலீட்டுக்கான ரஷியா பிளஸ் பிரிவு மூலம்  வருவதை ஊக்கப்படுத்தும் அம்சங்கள் பற்றியும் அப்போது குறிப்பிடப்பட்டது.
  13. வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு, இந்த ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பு மற்றும் இந்திய - ரஷிய தொழில் பேச்சுவார்த்தை அமைப்புகளுக்கு இடையில் நடந்த கூட்டத்தின் பங்களிப்பு பற்றி கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
  14.     2019 ஜூலை 10 ஆம் தேதி புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் 2வது கூட்டம் நடத்தப்பட்டது குறித்து இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் திட்டமிடப்பட்ட மற்றும் தொடர்ச்சியான கலந்தாடல் மூலமாக முக்கிய துறைகளில் ஒன்றுபட்ட மற்றும் பரஸ்பரம் பயன் தரக்கூடிய பொருளாதார ஒத்துழைப்புகளை ஊக்குவிக்க இந்த முக்கியத்துவமான பொருளாதார பேச்சுவார்த்தை நம்பிக்கையான நடைமுறையை உருவாக்கும் நிகழ்வாக இருந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருதரப்பு வர்த்தகம் - பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான விரிவான செயல் திட்ட அணுகுமுறை 2018-19ல் உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  15. தூரக் கிழக்குப் பகுதியில் முன்னேற்றம் என்ற வகையில், புதுடெல்லிக்கும் மாஸ்கோவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பல இந்திய நிறுவனங்கள் தூரக் கிழக்குப் பகுதிகளில் தொழில் தொடங்கியுள்ளன. விளாடிவோஸ்டாக்கில் கே.ஜி.கே. நிறுவனம் வைரம் பட்டை தீட்டுதல் நிறுவனத்தையும், காம்ச்சாட்காவில் உள்ள குருட்டோகோரோவோ- ல் டாடா பவர் நிறுவனம் நிலக்கரி சுரங்கத்திலும் முதலீடு செய்துள்ளன. தூரக் கிழக்குப் பகுதியிலும், சைபீரியாவிலும் பொருளாதாரத்தை விரிவுபடுத்தவும், முதலீடு செய்யவும் இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ரஷியாவின் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப் பட்டது.
  16. ரஷிய தூர கிழக்கு பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. முதலாவது கட்டமாக, இந்தியாவில் இருந்து நான்கு மாநிலங்களின் முதல்வர்கள், இந்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் தலைமையில், 2019 ஆகஸ்ட் 12-13 தேதிகளில் விளாடிவோஸ்டாக் பயணம் மேற்கொண்டனர். குறிப்பிட்ட துறைகளில் இருதரப்பு பங்கேற்புகளை பெரிய அளவில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்க அந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் இருந்து தொழில் திறன் பெற்றவர்களை, தற்காலிகமாக ரஷியாவின் தூர கிழக்குப் பிராந்தியங்களில் பணியமர்த்துவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்ய இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  17. ஆர்க்டிக் பகுதியில் ரஷியாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஆர்க்டிக் பகுதியில் முன்னேற்றங்களை அக்கறையுடன் இந்தியா கவனித்து வருகிறது. ஆர்க்டிக் கவுன்சிலில் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.
  18. தனது பங்கிற்கு, இந்தியாவில் முக்கியமான கட்டமைப்பு மற்றும் இதர திட்டங்களில் பங்கேற்க ஆயத்தமாக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. தூரக் கிழக்கு முதலீடு மற்றும் ஏற்றுமதி முகமை அலுவலகத்தை மும்பையில் சமீபத்தில் திறந்தமைக்கு இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப் பட்டது. ரஷியாவில் தூரக் கிழக்குப் பகுதிகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு இதன் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்று கருத்து பதிவு செய்யப்பட்டது.
  19. இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்தாடலில் எப்போதுமே எரிசக்தித் துறை முக்கிய இடம் பெற்று வந்துள்ளது - இந்தியா மற்றும் ரஷிய பொருளாதாரங்கள் இந்தத் துறையில் பரஸ்பரம் பயன் பெற்று வருகின்றன. மக்கள் நலனுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவது இந்தியா மற்றும் ரஷியா உறவில் முக்கிய இடம் பெற்றுள்ளது. கூடங்குளத்தில் மொத்தம் ஆறு அணு உலைகளில், மீதியுள்ள நான்கு அணு உலைகளை அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தரப்பிலும் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. இரண்டாவது களம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் பங்கேற்றனர். வி.வி.ஈ.ஆர். 1200 என்ற ரஷிய வடிவமைப்பு மற்றும் சாதனங்கள் மற்றும் எரிபொருள் கூட்டு  தயாரிப்பு தொடர்பாக தொழில்நுணுக்க பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு பற்றி வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
  20. வங்கதேசத்தில் ரூப்புர் என்.பி.பி. கட்டமைப்பில் வெற்றிகரமான ஒத்துழைப்பு இருப்பது பற்றி இரு தரப்பினரும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். மூன்றாவது நாடுகளில் இதேபோன்ற ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
  21. அணு அல்லாத எரிபொருள் மற்றும் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது பற்றி இரு தலைவர்களும் கருத்துகள் பதிவு செய்தனர். வான்கோர்னெப்ட் மற்றும் டாஸ்-யுர்யக் நெப்டெகாஜோடோபிச்சா திட்டங்களை அமல்படுத்துவதில் ஜே.எஸ்.சி. ரோஸ்நெப்ட் ஆயில் கம்பெனிக்கும், எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டமைப்புக்கும்  இடையிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது பற்றி இந்தியாவும் ரஷியாவும் வரவேற்பு தெரிவித்தன. கடந்த இரு தசாப்தங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை பயன்படுத்துவதில் நயாரா எரிசக்தி லிமிடெட் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பணிகள் பற்றியும், காஸ்புரோம் மற்றும் கெயில் இந்தியா நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் உரிய காலத்தில் சமையல் எரிவாயு அளித்தது பற்றியும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ரஷியாவின் தூர கிழக்குப் பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு கோக்கிங் நிலக்கரி வழங்குவதில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
  22. ரஷியா மற்றும் இந்தியாவில், கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்வது, அவற்றை அமைப்பதில் கூட்டாக ஒத்துழைப்பது என்று இரு தலைவர்களும் தீர்மானித்தனர். ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு எரிபொருள் வளங்களை அளிப்பதற்கான வழிகளை உருவாக்கும் பணிகளைத் தொடருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான நீண்ட கால ஒப்பந்தம், வடக்கு கடல் வழித் தடம் மற்றும் குழாய் அமைப்பு முறையை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் ஆகியவற்றைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டது. வாடினார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் செயல் திறனை நயாரா எரிசக்தி லிமிடெட் நிறுவனம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. நீர்மின் மற்றும் அனல்மின் உற்பத்தி, எரிசக்தி செயல்திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், மரபு சாரா ஆதார வளங்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான வடிவமைப்புகள் மற்றும் கட்டுமானங்களை மேற்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  23. 2019-24 காலக்கட்டத்தில் ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் இந்த மாநாட்டில் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் துறையில் புதிய உச்சங்களை எட்டுவதற்கு இருதரப்பு உறவுகளை இரு தரப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  24. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை இன்னும் மேம்படுத்துவதற்கு, போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பணியாற்ற இரு தரப்பும் உத்தேசித்துள்ளன. சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து நெடுஞ்சாலை திட்டம் (ஐ.என்.எஸ்.டி.சி.) ஒன்றை உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். சரக்குகள் அளவுகளுக்கு உத்தரவாதம் அளித்தல், போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கிடங்குகள் வசதிகளை மேம்படுத்துதல், ஆவணங்கள் நடைமுறைகளை எளிமையாக்குதல் மற்றும் மின்னணு ஆவண முறைக்கு மாறுதல், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் மற்றும் போக்குவரத்து நடைமுறைகளில் செயற்கைக்கோள் வழிகாட்டல் வசதிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
  25. இரயில்வே துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை நிறுவுவதன் மூலம், நல்ல வாய்ப்பிருக்கும் என இரு தரப்பினரும்  எதிர்பார்க்கின்றனர். நாக்பூர் - செகந்திராபாத் பிரிவில் பயண வேகத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு பற்றிய ஆய்வின் முன்னேற்றம் குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். மேலும் அந்த அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்துவதில் ரஷ்ய அரசாங்கத்தின் ஆர்வமும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த விஷயத்தில் இருதரப்பும் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடும்.
  26. இரு நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையே நேரடி பயணிகள் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை பரிசீலிப்பதென்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
  27. கட்டமைப்பிற்கான போக்குவரத்துத் திட்டங்களில் போக்குவரத்துக் கல்வி, தொழில்முறையிலான பயிற்சி, விஞ்ஞானரீதியான ஆதரவு ஆகியவற்றில் மேலும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற நோக்கத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
  28. அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை இருதரப்புமே வலியுறுத்தின. இது போன்ற துறைகளிலும், தொலைத்தொடர்பு, இயந்திரங்களின் மூலமான செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவு, குறுந்தொழில்நுட்பங்கள், மருந்துகள் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் வளர்ச்சியைத் தீவிரப்படுத்தவும் அவை உறுதிபூண்டன. இதற்காக, இந்தியக் குடியரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பொருளாதார வளர்ச்சிக்கான அமைச்சகம் ஆகியவற்றிற்கு இடையே, புதிய கண்டுபிடிப்புகள் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் பாராட்டுதல்களை தெரிவித்தனர்.
  29. புலிகளின் எண்ணிக்கை குறித்த 2018-ம் ஆண்டின் அகில இந்திய மதிப்பீட்டின் முடிவுகளை ருஷ்ய தரப்பு பாராட்டியது. இதன் மூலம் மொத்தம் 2967 புலிகளை இருப்பிடமாகக் கொண்டுள்ள இந்தியா, உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75% புலிகளை கொண்ட பகுதி என உறுதியாகியுள்ளது. 2022-ம் ஆண்டில் புலிகளின் பாதுகாப்பிற்கான அமைப்பின் இரண்டாவது சர்வதேச மாநாட்டை (புலிகளுக்கான இரண்டாவது உச்சிமாநாடு என்றும் இது அழைக்கப்படுகிறது; முதல் உச்சிமாநாடு 2010-ம் ஆண்டில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது) நடத்துவதற்கான ரஷ்யாவின் முன்முயற்சியையும் இந்தியா வரவேற்றது. புலிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் தலைமைப் பங்கினை வகிப்பதை அங்கீகரித்த இரு தரப்பும்,  2020-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தை நடத்தவும் ஒப்புக்கொண்டன. இந்தக் கூட்டத்தில் புலிகள் சரணாலயம் உள்ள நாடுகள், புலிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூட்டாளி நாடுகள் மற்றும் இந்த விஷயத்தில் ஈடுபாடுள்ளவர்கள் ஆகியோரையும் இணைத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
  30. விமானப் போக்குவரத்து, விண்வெளி ஆகிய துறைகளும் கூட ஒத்துழைப்பிற்கான பிரகாசமான பகுதிகளாக அமைந்துள்ளன. பயணிகளுக்கான விமானங்களை இந்தியாவில் வடிவமைப்பது, உற்பத்தி செய்வது ஆகியவற்றுக்கான கூட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகளை கண்டறியவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
  31. மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல பயணத் திட்டங்கள் மற்றும் செயற்கைக் கோள்களை ஒழுங்கமைப்பது உட்பட ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விண்வெளி கழகமான “ரோஸ்காஸ்மாஸ்” மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதையும் இரு தரப்பும் வரவேற்றன. செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான கலங்களை வளர்த்தெடுப்பது; பல்வேறு பயன்பாடுகளுக்கான விண்கலங்களை உருவாக்குவது, பயன்படுத்துவது; அதே போன்று விண்வெளியை, கிரகங்கள் குறித்த ஆய்வு உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது ஆகிய விஷயங்களில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் பெருமளவிலான திறமையைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
  32. இந்தியாவின் மனிதர்கள் பயணிக்கும் முதலாவது விண்கலத்திற்கான திட்டமான “ககன்யான்” திட்டத்திற்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதற்கென கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்புக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர ஏற்பாடுகளை இருதரப்பும் வரவேற்றன.
  33. விண்வெளி செயல்பாடுகளின் நீண்டகால இருப்பை உறுதிப்படுத்துவது; “விண்வெளி 2030” நிகழ்ச்சிநிரலை வளர்த்தெடுப்பது; அதன் அமலாக்கத் திட்டம் உட்பட விண்வெளியை அமைதியான வழிகளில் பயன்படுத்துவதற்கான ஐ.நா. சபையின் குழுவிற்குள் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்  இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  34. வைரத் தொழிலில் ஒத்துழைப்பு குறித்தும் அவை மிக உயரிய முக்கியத்துவம் கொண்டுள்ளன. இந்தியாவில் செயல்பட்டு வரும் அல்ரோசா பொது பங்கு கூட்டு நிறுவனத்தின் வெற்றிகரமான செயல்பாடு குறித்து இருதரப்பும் திருப்தி தெரிவித்தன. பட்டை தீட்டப்படாத வைரங்களை வர்த்தகம் செய்யும் முறையை மேம்படுத்துவதிலும், இயற்கையான வைரங்களின் பங்கை பாதுகாக்கும் நோக்கத்துடன், இத்துறையில் ஒழுங்கமைப்பு சூழலை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளைக் காண்பதிலும் தங்களுக்குள்ள விருப்பத்தையும் அவை வெளிப்படுத்தின.
  35. விவசாயத் துறையில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் இருநாடுகளும் அங்கீகரித்தன. இத்துறையில் சட்டரீதியான கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான குறிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், இறக்குமதி செய்யப்படும் தாவர வகைகளுக்கான தரக்கட்டுப்பாடுகளை ஒழுங்குபடுத்துவதிலும், சரக்குப் போக்குவரத்தை வளர்த்தெடுப்பதிலும், இரு நாடுகளின் சந்தைகளில் விவசாய விளைபொருட்களை விற்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதிலும், ஒவ்வொரு நாட்டின் திறமை மற்றும் தேவைகளை பற்றிய ஆய்வை மேலும் கவனமாக மேற்கொள்வதிலும்  தங்களுக்குள்ள விருப்பத்தையும் அவை வெளிப்படுத்தின. இரண்டு நாடுகளின் சுங்கவரிக்கான  நிர்வாகங்களிடையே சரக்குகள் வந்திறங்குவதற்கு முன்பாகவே தகவல்களை பரிமாறிக் கொள்ள பசுமைப் பாதை ஏற்பாடு வகை செய்கிறது. மேம்படுத்தப்பட்ட அபாய மேலாண்மையின் மூலம் சரக்குகள் மிக விரைவாக வெளியேற அனுமதிக்கும்.  இந்த ஏற்பாடுகள் வர்த்தகத்திற்கான வசதிகளை கணிசமான அளவிற்கு மேம்படுத்தும்.
  36. ராணுவ மற்றும் ராணுவ தொழில்நுட்ப துறைகளில் இந்தியா- ரஷ்யாவின் நெருங்கிய ஒத்துழைப்பு என்பதே இருநாடுகளுக்கு இடையிலான சிறப்பான மற்றும் தனியுரிமை மிக்க ராணுவ ரீதியான கூட்டணியின் தூணாக அமைகிறது. ராணுவ ரீதியான முறையான தொடர்புகள், இருநாடுகளின் ராணுவப் படைகளின் கூட்டுப் பயிற்சிகள் ஆகியவை குறித்தும் இருதரப்பும் தங்களின் திருப்தியை வெளிப்படுத்தின. ராணுவ ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பிற்கான 2011-2020 நீண்ட கால திட்டம் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டுள்ளதையும் அவை வரவேற்றன. இந்தப் பிரிவில் இணைந்த செயல்பாட்டிற்கான புதியதொரு நீண்ட கால திட்டத்தை உருவாக்குவதை விரைவுபடுத்தவும் அவை ஒப்புக் கொண்டன.
  37. இராணுவ உபகரணங்கள், கூறுகள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றின் கூட்டு வளர்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவித்தல், விற்பனைக்குப் பிந்தைய சேவை முறையை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் வழக்கமான கூட்டுப் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இருதரப்பும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.
  38. இந்தியாவில் உற்பத்தி செய்வது என்ற திட்டத்தின் கீழ், தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வதின் மூலமும், கூட்டு முயற்சிகளை நிறுவுவதன் மூலம் ருஷ்யாவில் முதலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பாதுகாப்புக் கருவிகள் ஆகியவற்றை பராமரிக்க உதிரி பாகங்கள், கூறுகள், இதர பொருட்களை இந்தியாவில் கூட்டாக உற்பத்தியை ஊக்குவிக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
  39. தங்களது ராணுவங்களுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்த்தெடுக்க உதவும் சூழ்நிலைகளை உருவாக்க இருதரப்பும் விரும்புகின்றன. மேலும் இரு நாட்டு ராணுவப் படைகளுக்கான போக்குவரத்து உதவி மற்றும் சேவைகள் ஆகியவற்றுக்கான நிறுவன ரீதியான ஏற்பாடுகளின் தேவையையும் அவை அங்கீகரிக்கின்றன. பரஸ்பர போக்குவரத்து உதவிக்கான ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் அவை ஒப்புக் கொண்டன.
  40.   ராணுவ ரீதியான அரசியல் பேச்சுவார்த்தைகள், கூட்டு ராணுவப் பயிற்சிகள், ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள், ஒருவர் மற்றொருவரது ராணுவ பயிற்சி நிலையங்களில் பரஸ்பரம் பயிற்சி மேற்கொள்வது, மேலும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில் ஒத்துழைப்பின் மூலம் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின. முப்படைகளின் இரண்டாவது கூட்டு பயிற்சிகளான இந்திரா-2019 இந்தியாவில் இந்த ஆண்டு நடத்தப்படும் என்பதையும் இருதரப்பும் சுட்டிக் காட்டின.
  41. இரு நாட்டு மக்களையும் ஒன்றிணைப்பதில் நேரடியாக உதவி செய்யும் இருதரப்பு கலாச்சார பரிமாற்ற திட்டத்தை  அமலாக்குவது குறித்தும் இருதரப்பினரும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டனர். ரஷ்ய கலாச்சார விழாக்களை இந்தியாவில் நடத்துவது; இந்திய கலாச்சார விழாக்களை ரஷ்யாவில் நடத்துவது; ரஷ்ய திரைப்பட விழாக்களை இந்தியாவில் நடத்துவது; அதேபோன்று இந்திய திரைப்பட விழாக்களை ரஷ்யாவில் நடத்துவது போன்ற ஏற்பாடுகள் வெற்றிகரமாக செயல்படுத்துவதை தொடர்வது என்றும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. 2019 நவம்பர் 20-28 தேதிகளில் கோவாவில் நடைபெறவுள்ள 50வது சர்வதேச திரைப்பட விழாவின் கூட்டாளி நாடாக ரஷ்யா இருக்கப்போவதையும் இருதரப்பும் வரவேற்றன. இத்தகைய கலாச்சார பரிமாற்றங்களை பூகோள ரீதியாக விரிவுபடுத்துவதன் அவசியம், இவற்றில் இளைஞர்கள், நாட்டுப்புற கலைக்குழுக்களை மேலும் அதிகமான அளவில் ஈடுபடுத்துவது, இந்தியாவில் ரஷ்ய மொழியை வளர்ப்பதற்கான முயற்சிகள், ரஷ்யாவில் இந்தி மொழியை வளர்ப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றை மேலும் வளர்த்தெடுப்பது; இது தொடர்பான கல்வி நிறுவனங்களுக்கு இடையே தொடர்புகளை வளர்த்தெடுப்பது உள்ளிட்டவையும் இருதரப்பினாலும் ஒப்புக்கொள்ளப்பட்டன.
  42. கல்வித் துறையில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதையும் இருதரப்பும் வரவேற்றன. பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான நேரடித் தொடர்புகளை நிறுவுவதும், தொடர்ந்து நடைபெறும். கல்வி தொடர்பான அறிமுக ஆவணங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது குறித்த அரசுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒப்பந்தங்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். இத்தகைய ஒப்பந்தங்களை தயாரிக்கும் வேலையை மேலும் துரிதப்படுத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
  43. இந்திய குடியரசைச் சேர்ந்த மாநிலங்கள்/துணைநிலை மாநிலங்கள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பகுதிகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வளர்த்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் இருதரப்பும் வலியுறுத்தின. இது தொடர்பான அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இவைகளுக்கு இடையிலான ஒரு அமைப்பினை ஏற்படுத்தும் தங்கள் நோக்கத்தையும் அவை தெரிவித்தன. இந்திய மாநிலங்களுக்கும், ரஷ்ய பகுதிகளுக்கும் இடையே கலாச்சார, வர்த்தக தூதுக்குழுக்களை பரிமாறிக் கொள்ளவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இரட்டை நகரங்கள் என்ற வகையில் தற்போதுள்ள உறவுகளுக்கு மேலும் அதிக ஊக்கம் அளிப்பது; புதிய உறவுகளை உருவாக்குவது என்றும் அவை ஒப்புக் கொண்டன.
  44. இந்திய-ரஷ்ய சுற்றுலா உறவுகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதோடு சிறப்பு மற்றும் தனியுரிமை பெற்ற கேந்திர கூட்டணி மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் உறவுகளையும் அது மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதை தொடர்வது என்றும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
  45. ரஷ்ய குடிமக்கள் உள்ளிட்ட வர்த்தகம் மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்கான பயணத்திற்கான இணைய வழி விசா வசதியின் காலத்தை ஓராண்டு அளவிற்கு மேலும் விரிவுபடுத்துவது;  கலினின்க்ராட், வ்ளாடிவாஸ்டாக் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய குடிமக்களுக்கான இலவச இணையவழி விசாவை அறிமுகப்படுத்துவது என விசா ஏற்பாடுகளை மேலும் படிப்படியாக எளிமைப்படுத்துவதை இருதரப்பும் வரவேற்றன.
  46. ஐ.நா. சபையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை இருதரப்பும் சுட்டிக் காட்டியதோடு, இதை மேலும் ஆழப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது என்றும் ஒப்புக் கொண்டன.
  47. உலக விவகாரங்களில் ஐ.நா. சபையின் மைய ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பலதரப்பு பண்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் இரு நாடுகளும் வலியுறுத்தின. சர்வதேச சட்டத்தின் முதன்மைத் தன்மையையும் இருதரப்பும் சுட்டிக் காட்டியதோடு உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்கமுடியாத நிலை உள்ளிட்ட ஐ.நா. சபையின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றின் மீதுள்ள தங்களது உறுதிப்பாட்டையும் அவை வலியுறுத்தின.
  48. இருவேறு வகையான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பது அல்லது ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளின் மீது தங்களின் விருப்பத்தை திணிப்பது போன்றவற்றை தவிர்த்து உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்ட குறிக்கோள்கள், சர்வதேச சட்டத்தின் விதிகள் ஆகியவற்றின் மீது உண்மையான நம்பிக்கை வைத்து அமல்படுத்துவது என்ற கண்ணோட்டத்தையே இருதரப்பும் பகிர்ந்து கொள்கின்றன. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் தன்னிச்சையாக வற்புறுத்தல் நடவடிக்கைகளை திணிக்க முற்படுவதும் இதுபோன்ற செயல்களுக்கான ஓர் உதாரணமே ஆகும்.
  49. தற்போதைய உலக யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமைப்பை மேலும் பிரதிநிதித்துவம் மிக்கதாக, சிறப்பானதாக, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் சிறப்பானதாக மாற்றும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் இருதரப்பும் கோருகின்றன.
  50. இவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட ஒரு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் கோரிக்கையை ரஷ்யா தொடர்ந்து ஆதரிக்கும்.
  51. பிரிக்ஸ் அமைப்பிற்குள் பன்முகப்பட்ட கூட்டணியை வலுப்படுத்துவதில் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டை இருதரப்பும் மீண்டும் வலியுறுத்தியதோடு, 2019 நவம்பரில் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள 11வது பிரிக்ஸ் அமைப்பின் உச்சிமாநாட்டின் வெற்றிக்கும் முழுமையான ஆதரவு தரவும் ஒப்புக் கொண்டன.
  52. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்பான திறனையும் உள்ளாற்றலையும் இந்தியாவும் ரஷ்யாவும் ஏகமனதாக அங்கீகரிக்கின்றன. 2019-20 காலகட்டத்தில் இந்த அமைப்பில் ரஷ்யாவின் தலைமைப்பொறுப்பு உள்ளிட்ட சமமான, பிரிக்கப்பட முடியாத பாதுகாப்பின் அடிப்படையிலான பன்முகத் தன்மை கொண்டதாக உருவாகி வரும் உலக ஏற்பாட்டின் முக்கியமானதொரு தூணாக இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் ரஷ்யாவும்  தங்களது இணைந்த செயல்பாட்டை மேலும் அதிகரிக்கும்.
  53. குறிப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பகுதி வாரியான பயங்கரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம், பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், எல்லைகளைக் கடந்து சென்று குற்றங்களை நிகழ்த்துதல், தகவல் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் போன்றவற்றை சிறப்பான வகையில் எதிர்த்துப் போராடுவதில், இருதரப்பும் தங்களது கவனத்தை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளன.
  54. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை, குறிப்பாக போக்குவரத்து, சரக்குப் பரிமாற்ற ஏற்பாடுகள், கட்டமைப்பு, அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் சமமான, வெளிப்படையான, பரஸ்பரம் பயனளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை யூரேஷிய பகுதியில் உருவாக்க இருதரப்பும் முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற வடிவத்திற்குள் கலாச்சார ரீதியான, மனிதத்   தன்மைமிக்க உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
  55. சர்வதேச விவகாரங்களில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்கு அதிகரிக்கவும், ஐநா மற்றும் அதன் சிறப்பு முகமைகள், கூட்டான பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு, இணையப் பாதுகாப்பிற்கான மையம், ஏஷியன் கூட்டமைப்பு மற்றும் இதர  பன்னாட்டு அமைப்புகள், கழகங்கள் ஆகியவற்றோடு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தொடர்புகளை முழுமையான வகையில் வளர்த்தெடுக்கவும் பாடுபடும். இந்தப் பின்னணியில் யூரேஷிய பொருளாதார ஒன்றியத்திற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரபூர்வ உறவுகளை ஏற்படுத்துவதையும் ஆதரிக்கின்றன.
  56. ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கொண்ட ஆர்ஐசி கட்டமைப்பிற்குள் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும், சர்வதேச சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டும், தன்னளவிலான பொருளாதார பாதுகாப்புக் கொள்கையை விரிவுபடுத்துவது, தன்னிச்சையாக தடைகளை விதிப்பது ஆகியவற்றுக்கு எதிராகவும் உலகளாவிய, பகுதிவாரியான நிகழ்ச்சிநிரலின் மீதான முக்கிய விஷயங்களை, பொதுவாக அணுகுவதை மேலும் தொடர்ந்து தீவிரப்படுத்தவும்  இருதரப்பும் திட்டமிட்டுள்ளன. இந்தக் கட்டமைப்பில் அரசுத் தலைவர்களின் கூட்டங்கள், வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோரின் முறையான கூட்டங்கள்,  தேவைப்படுமானால் இதர முகமைகளின் தலைவர்களுக்கு இடையேயான கூட்டங்கள் ஆகியவை தொடரும்.
  57. முக்கியமான சர்வதேச பிரச்சனைகளை விரைவாகத் தீர்த்து வைப்பதற்கு உதவும் வகையில் ஜி-20 மற்றும் இதர சர்வதேச அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. ஜி-20 அமைப்பிலும் சர்வதேச அமைப்புகளிலும் உலகளாவிய மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்த விஷயங்களில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்த தங்களின் உறுதிப்பாட்டையும் இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
  58. அனைத்துவகையான வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கர வாதத்தை இரு நாட்டுத் தலைவர்களும் கண்டித்ததோடு, இந்த தீய சக்தியை எதிர்க்கும் போராட்டத்தில் ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்க முன்வர வேண்டுமென்றும் சர்வதேச சமூகத்திற்கு அறைகூவல் விடுத்தனர். பயங்கரவாதத்தை தடுக்கவும், எதிர்த்துப் போராடவுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான தங்களின் உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் கூட்டத்தின் பிஷ்கேக் அறைகூவலையும் அவர்கள் வரவேற்றனர். பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்துப்போராடுவதில் இரட்டை வேடம் போடுவதையும்,  அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதக் குழுக்களை பயன்படுத்திக் கொள்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பயங்கரவாத நோக்கங்களுக்காக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட சர்வதேச அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பிற்கு உட்பட்ட வகையில் இருநாடுகளின் முயற்சிகளில் ஒருங்கிணைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் இரு நாடுகளின் தலைவர்களும் அறைகூவல் விடுத்தனர். இரு நாடுகளுக்கு இடையிலும், பல நாடுகளுக்கு இடையிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். சர்வதேச பயங்கரவாதம் மீதான முழுமையானதொரு சிறப்பு மாநாடு குறித்து விரைவாக இறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு ஒப்பான ஐநா தீர்மானங்களின் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள நாடுகளுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஏற்பாட்டை மேலும் வலுப்படுத்த தங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டையும் இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின. இன்று பயங்கரவாதத்தின்  நிழல் படாத நாடு என்று எதுவுமே இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது முயற்சிகளில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அவசியம் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கருத்துரையையும் ரஷ்யா கவனத்தில் கொண்டுள்ளது.
  59. பல நாடுகளையும் உள்ளடக்கிய சிறப்பு பேச்சுவார்த்தை மேடைகள், குறிப்பாக ஐநா உள்ளிட்ட, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்களையும் இருதரப்பும் பாராட்டின. ஐநா பொதுச்சபையின் 73வது கூட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட நாடுகளின் பொறுப்பான நடத்தைக்கான வழிமுறைகள், குறிக்கோள்கள்  ஆகியவை குறித்த சர்வதேச விதிமுறைகளின் தொகுப்பு 2018 டிசம்பரில் நடைபெற்ற ஐநா பொதுச் சபை கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றங்களை நிகழ்த்தும் நோக்கத்துடன் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதை எதிர்க்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு குறித்த விரிவான விவாதமும் மேற்கொள்ளப்பட்டது.
  60. உறுப்பு நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது உள்ளிட்ட தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு விஷயத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இருதரப்பும் வலியுறுத்தின. 
  61. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான பொதுவான அணுகுமுறையை இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின. மேலும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு குறித்த இந்திய- ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான அரசுத்தரப்பு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதன் மூலம் இருநாடுகளின் முகமைகளும் நடைமுறையில் ஒத்துழைப்பது வலுப்படும் என்ற விருப்பத்தையும் அவை வெளிப்படுத்தின.
  62.    2019-20-ம் ஆண்டிற்கான தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு குறித்த இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய திசைவழிகளை அமலாக்கும் திட்டத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவை முடிவு செய்தன. சர்வதேச பாதுகாப்புச் சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இருதரப்பும் வலியுறுத்தின. மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையின் அளவை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படுவது என்றும் அனைத்து வகையிலும் உலகளாவிய, பகுதியளவிலான நிலைத்தன்மையை வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து நாடுகளின் நலன்களையும் கவலைகளையும் மதிக்கும் அதே நேரத்தில், அனைவருக்குமான, சமமான,  பிரிக்கப்படமுடியாத, பாதுகாப்பு என்ற குறிக்கோளின் அடிப்படையில் நிலைத்து நிற்கும் அமைதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் இருதரப்பும் வலியுறுத்தின.
  63. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் மூலம் அனைத்து வகையான பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும் தீவிரமான தொடர்புகளை மேற்கொள்வது என்றும் அவை ஒப்புக் கொண்டன.
  64. புற விண்வெளியில் ஓர் ஆயுதப் போட்டிக்கான வாய்ப்பு நிலவுவது குறித்தும், ராணுவ ரீதியான மோதல்களுக்கான ஒரு களமாக புற விண்வெளி மாறி வருவது குறித்தும் இருதரப்பும் கவலை தெரிவித்தன. புற விண்வெளியில் ஆயுதப் போட்டியை தவிர்ப்பது என்பது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான மிகப்பெரும் அபாயத்தை தவிர்ப்பதாக அமையும் என்றும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தவகையில் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச அமைதி, நிலைத்தன்மை, சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தெடுப்பது, பரஸ்பர புரிதல் ஆகியவற்றுக்கு உதவி செய்யும் வகையில் தற்போதுள்ள சர்வதேச சட்டரீதியான ஒப்பந்தங்களை கறாராக கடைப்பிடிப்பதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
  65. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் எந்தவிதமான ஆயுதங்களையும் வைக்காமல் இருப்பதற்கான  நம்பகமான உத்தரவாதத்தை ஏற்படுத்த, சட்டரீதியாக கட்டுப்படுத்தும்படியான, பல நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு ஏற்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை இருதரப்பும் ஆதரித்தன. ஆயுத ஒழிப்பிற்கான மாநாடு மட்டுமே அனைத்து வகையில் புற விண்வெளியில் ஓர் ஆயுதப் போட்டியைத் தடுக்க பல நாடுகளையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளுக்கும், சர்வதேச அளவிலான ஒப்பந்தங்களுக்குமான ஒரே மேடையாக அமையும் என்பதையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
  66. விண்வெளியில் ஆயுதப் போரைத் தடுக்கும் விவகாரத்தில் (PAROS) சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில், பொதுவான, பாகுபாடு இல்லாத மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் வெளிப்படையான மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
  67. சர்வதேச, பாகுபாடற்ற மற்றும் வலுவான உறுதிப்படுத்தும் வழிமுறைகளை ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட உயிரியியல் மற்றும் நச்சு ஆயுதங்களுக்கான தீர்மானத்தை (BTWC) வலுப்படுத்துவதற்கு இருதரப்பும் ஆதரவு தெரிவித்தன. உயிரியியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் தீர்மானத்தின் மற்ற வழிமுறைகளில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தொடர்பானவை உள்ளிட்டவை இருக்கக் கூடாது என்பதை அவர்கள் உறுதிசெய்தனர்.
  68. ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்புக்கு இருதரப்பும் ஆதரவு தெரிவிப்பது என்பதை மறுஉறுதி செய்தனர். இது, ரசாயன ஆயுதங்கள் தீர்மான விதிமுறைகளை சிறப்பான முறையில் செயல்படுத்த பங்களிப்பை செய்யும். ரசாயன ஆயுதங்கள் தீர்மான செயல்பாடுகளை பாதுகாக்கவும், ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பின் செயல்பாடுகளை அரசியலாக்குவதைத் தடுக்கும் வகையிலான முயற்சிகளுக்கும் ஆதரவை தெரிவித்தனர். ரசாயன ஆயுதங்கள் தீர்மானத்தின் நோக்கத்தை பாதுகாப்பதற்காக, ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பின் ஒருமித்த முடிவுகளை மீட்டெடுக்கும் நோக்கில், ரசாயன ஆயுதங்கள் தீர்மானத்தில் தொடர்புடைய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
  69. ரசாயன மற்றும் உயிரியியல் தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும். இதற்காக, ஆயுத ஒழிப்புக்காக, ரசாயன மற்றும் உயிரியியல் தீவிரவாத செயல்பாடுகளை முறியடிப்பதற்கான சர்வதேச கருத்தரங்கில், பல நாடுகளை உள்ளடக்கிய  பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டியது அவசியம் என்று இருதரப்பும் வலியுறுத்தின.
  70. சர்வதேச அளவில் அணுஆயுத பரவலை தடுப்பதை மேலும் வலுப்படுத்தும் தங்களது தீர்மானத்தை இருதரப்பும் வலியுறுத்தினர். அணு விநியோக குழுவில் உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கு, தனது முழு ஆதரவை ரஷ்யா தெரிவித்தது.
  71. ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படவும், ஆப்கானிஸ்தான் தலைமையிலான மற்றும் ஆப்கானிஸ்தானே வழிநடத்தும் வகையிலான மறுஅமைப்பை உருவாக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் இந்தியாவும், ரஷ்யாவும் ஆதரவை தெரிவித்தன. ஆப்கானிஸ்தானில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை இரு நாடுகளும் வெளிப்படுத்தின. இதனை நிறைவேற்ற, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு-ஆப்கானிஸ்தான் தொடர்பு குழு மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்ற குழுக்களில் தங்களது ஒத்துழைப்பை தொடர்வது என்ற உறுதியை வெளிப்படுத்தினர். மேலும், மாஸ்கோவில் பிப்ரவரி 2019-ல் தொடங்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கான பேச்சுவார்த்தைக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் குறித்து இருதரப்பும் தீவிர ஆலோசனையை தொடர்ந்து மேற்கொள்ளும். ஆப்கானிஸ்தானில் விரிவான அளவில் அமைதி நடவடிக்கை மேற்கொள்ளப்படவும், அரசியலமைப்பு தன்மையைப் பாதுகாக்கவும், அமைதியை கொண்டுவரவும், அமைதியான, பாதுகாப்பான, நிலையான, சுதந்திரமான ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்கவும் தாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு ஆதரவு அளித்துவரும் அனைத்து நாடுகளையும் இருதரப்பும் ஊக்குவிக்கின்றன. வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்தன.
  72. சிரியாவில் நிலைமை சீரடைவதற்கு இருதரப்பும் வரவேற்பு தெரிவித்தன. சிரியாவின் இறையாண்மை மற்றும் எல்லை நல்லிணக்கத்தை வலியுறுத்தின. சிரியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலமே தீர்வுகாண வேண்டும் என்று அழைப்பு விடுத்தன.
  73. ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் வரையறுக்கப்பட்ட தீவிரவாத குழுக்களை, சிரியாவில் முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். அகதிகள் மற்றும் தற்காலிகமாக இடம்பெயர்ந்த மக்கள் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்துவது உள்ளிட்ட மறுகட்டுமான நடவடிக்கைகளுக்காக சிரியாவுக்கு தொடர்ந்து உதவியை அதிகரிப்பது என இருதரப்பும் ஒப்புக் கொண்டன. ஐநா பொதுச்சபை தீர்மானம் 46/182-ல் குறிப்பிட்டுள்ளபடி, சர்வதேச மனிதநேய உதவிக்கான கொள்கைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று இருதரப்பும் வலியுறுத்தின. இந்த தீர்மானம், பாதிக்கப்பட்ட நாடுகளின் தேசிய இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட நாட்டின் அரசுக்கு மனிதநேய உதவிகள் வழங்குவதற்கான அளவீடுகளை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  74. பிராந்திய மற்றும் சர்வதேச அமைதியை உறுதிப்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ஈரானின் அணுஆயுத திட்டத்துக்கான விரிவான கூட்டு செயல் திட்டத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ஐ முழுமையாக செயல்படுத்த உறுதிபூண்டன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு அமைதியாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்வுகாணப்பட வேண்டும். ஈரானுடன் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை தொடர்வது என்ற உறுதியை இரு நாடுகளும் வெளிப்படுத்தின.
  75. அணுஆயுதம் இல்லாத கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து நாடுகளுக்கு இடையேயும் அமைதிப் பேச்சு தொடர வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்தின. இந்த விவகாரத்தில், இலக்கை எட்டுவதற்காக அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
  76. மூன்றாவது நாடுகளில், குறிப்பாக, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில், பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய மற்றும் பயனளிக்கக் கூடிய பகுதிகளை கண்டறிவது என ஒப்புக் கொள்ளப்பட்டது.
  77. நாடுகளுக்கு இடையே வெளிப்படையான, பாகுபாடு இல்லாத வர்த்தக அமைப்பை உறுதிப்படுத்த உலக வர்த்தக அமைப்பின் பங்கை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் ஒப்புக் கொண்டன. வெளிப்படையான மற்றும் நேர்மையான சர்வதேச பொருளாதாரத்தை வடிவமைப்பதற்காக, இணைந்து பணியாற்ற இருதரப்பும் விருப்பம் தெரிவித்தன. 
  78. நீடித்த சமூக-பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்தவும், 2030-ம் ஆண்டுக்கான திட்டத்தை செயல்படுத்தவும், பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்தின. இதில், போக்குவரத்து, எரிசக்தி, வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணைய வழிமுறைகளுக்குள் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
  79. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் சமமான மற்றும் பிரிக்க முடியாத வகையிலான பாதுகாப்பு கட்டமைப்பை வடிவமைக்க வேண்டும் என்று தங்களது உறுதியை வெளிப்படுத்தினர். கிழக்கு ஆசிய மாநாடுகள் மற்றும் பிற பிராந்திய அமைப்புகளின் கட்டமைப்புகளுக்குள் சர்வதேச பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஆதரவு தெரிவித்தன. பிராந்திய நிலைத்தன்மையை வலுப்படுத்துவது என்பது பல நாடுகளைக் கொண்டது, திறந்த நிலையிலானது, அனைவருக்குமானது மற்றும் பரஸ்பரம் மதிப்பளிக்கக் கூடியது என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த நாட்டுக்கு எதிராகவும் இருக்கக் கூடாது என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். யுரேஷிய பகுதிகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்தியங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக பரஸ்பரம் ஆலோசனையை தீவிரப்படுத்துவது என இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்புக் கொண்டன.
  80. தங்களது வெளியுறவுக் கொள்கையில் முன்னுரிமை அளிக்கும் விவகாரங்களில் ஒத்த தன்மை இருப்பதற்கு இருதரப்பும் திருப்தி தெரிவித்தன. தற்போதைய இருதரப்பு நல்லுறவுகள் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்களுக்கு தீர்வுகாண்பதில், இந்தியா-ரஷ்யா இடையே சிறப்பு மற்றும் முன்னுரிமை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இந்தியா மற்றும் ரஷ்யா மக்கள் பயன்பெறும் வகையில், தங்களது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது என்ற பரஸ்பர நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
  81. விளாடிவோஸ்டோக் நகரில் தம்மையும், தனது குழுவினரையும் சிறப்பான  முறையில் உபசரித்த வழங்கிய அதிபர் விளாதிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். அடுத்த ஆண்டில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா இடையேயான 21-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருமாறு அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

***



(Release ID: 1584274) Visitor Counter : 541