பிரதமர் அலுவலகம்

கான்பூரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்

Posted On: 08 MAR 2019 4:36PM by PIB Chennai

   உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  பயணம் செய்தார்.  லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் ஆக்ரா மெட்ரோ ரயில்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பங்க்கி அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், கான்பூரில் நிரலா நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததைக் குறிக்கும் வகையில்,  கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

      அங்கு திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், நாட்டுக்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்த தீரமிக்க  பல தலைவர்களின் பிறப்பிடம் கான்பூர் என்று குறிப்பிட்டார். இங்கு தொடங்கிவைக்கப்பட்ட  இந்தத் திட்டங்கள் கான்பூர் மற்றும் உத்தரப்பிரதேச மக்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.

      கான்பூருக்கு மின்சாரத் தேவையை  மேம்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் கடுமையாக பாடுபட்டு வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.  இந்நிலையில், பங்க்கி அனல் மின் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர்,  கான்பூரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நிலவுகின்ற மின்சார பற்றாக்குறையை இது எவ்வாறு மாற்றியமைக்கும் என்பது பற்றியும் கூறினார்.  உத்தரப்பிரதேசத்தில் சவுபாக்யா திட்டத்தின் கீழ் 76 லட்சத்துக்கும் அதிகமாக இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

      புல்வாமா தாக்குதலின் போதும், பட்காம்  விமான விபத்திலும் உயிரிழந்த கான்பூரைச் சேர்ந்த தீரமிக்க ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார் . பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் ஒற்றுமையான சூழ்நிலையைப் பராமரிப்பது முக்கியமானது என்று பிரதமர் கூறினார். அண்மையில் காஷ்மீரிகளைத் தாக்கியவர்களுக்கு எதிராக  உத்தரப்பிரதேச அரசு எடுத்த விரைவான நடவடிக்கைக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.  இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

----

 



(Release ID: 1568424) Visitor Counter : 131