பிரதமர் அலுவலகம்

பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றும், இது ஏழைகளுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார்

அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்
ஊழலுக்கும், இடைத்தரகர்களுக்கும் எதிரான அரசின் இயக்கம் தொடரும்: பிரதமர்
புதிய என்எச்-52-ன் 4 வழி பிரிவான சோலாப்பூர் – துல்ஜாபூர் – உஸ்மானாபாத் நெடுஞ்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
துல்ஜாபூர் வழியாக சோலாப்பூர் – உஸ்மானாபாத் ரெயில் பாதைக்கு ஒப்புதல்: பிரதமர்
சோலாப்பூரில் ஏழைகளுக்கான பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 30,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன

Posted On: 09 JAN 2019 4:00PM by PIB Chennai

பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதா ஏழைகளை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றும், அனைவரும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம் என்ற அரசின் உறுதிப்பாட்டுக்கான பிரதிபலிப்பு இது என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் இன்று (09.01.2019) பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இது சம்பந்தமாக தவறான பிரச்சாரத்தை பரவச் செய்தவர்களுக்கு மக்களவையில் மசோதா நிறைவேற்றம் வலுவான பதிலடியாக இருக்கும் என்றார். மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். “பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை மக்களவையில் நேற்று நாம் நிறைவேற்றியிருக்கிறோம். அனைவரும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம் என்ற நமது உறுதியை இது வலுப்படுத்துவதாகும்”.

குடியுரிமை திருத்த மசோதா பற்றி குறிப்பிட்ட பிரதமர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளும், வாய்ப்புகளும் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார். “பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் குடியிருக்கும் அன்னை இந்தியாவின் புதல்வர்களுக்கும், புதல்விகளுக்கும் இந்திய குடியுரிமையை வழங்குவதற்கான தடைகளை இந்த மசோதா அகற்றியிருக்கிறது. வரலாற்றில் ஏற்ற இறக்கங்களை பார்த்த பின் நமது சகோதர, சகோதரிகள் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

தமக்கு எதிராக கட்டற்ற அவதூறுகள் கூறப்பட்ட போதும் ஊழலுக்கும், இடைத்தரகர்களுக்கும் எதிரான தமது அரசின் இயக்கம் தொடரும் என்று பிரதமர் தெரிவித்தார். மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் ஊழலுக்கும், இடைத்தரகர்களுக்கும் எதிரான போராட்டத்தில் தமது கடமையை துணிச்சலுடன் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

சோலாப்பூர் பகுதிக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பல திட்டங்களைத் தொடங்கி வைத்த பின் அங்குள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 30,000 வீடுகள் கட்டுவதற்கு அவர் அடிக்கல் நாட்டினார். ரூ.1811.33 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த வீடுகள் முதன்மையாக குப்பை பொறுக்குவோர், ரிக்ஷா ஓட்டுனர்கள், ஜவுளித் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள் போன்ற வீடற்ற மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும். “ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்திற்காக 30,000 வீடுகள் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் ரிக்ஷா இழுப்போர், ஆட்டோ ஓட்டுனர் போன்றோர் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவர். வெகு விரைவில் உங்களது வீட்டின் சாவிகள் உங்களுக்கு கிடைக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றும் பிரதமர் தெரிவித்தார். நடுத்தரப் பிரிவு குடும்பங்களுக்கும் குறைந்த செலவில் வீட்டு வசதி கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். தற்போது 20 ஆண்டு கால வீட்டுக்கடனில் அவர்கள் ரூ.6 லட்சம் வரை சேமிக்க முடியும். இது வாழ்க்கையை எளிதாக்குவதற்கு தமது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகும்.

அவரால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டைக் காப்பாற்றும் வகையில் புதிய என்எச்-52 பிரிவில் 98.717 கிலோ மீட்டர் தூர சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மகாராஷ்டிராவில் உள்ள முக்கியமான மராத்வாடா பகுதியை சோலாப்பூருடன் இணைப்பதற்கு இது உதவியாக இருக்கும். ரூ.972.50 கோடி செலவில் என்எச்-52 பிரிவில் 4 வழி கொண்டதாக சோலாப்பூர்-துல்ஜாபூர்-உஸ்மானாபாத் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு 2014-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவியாக துல்ஜாபூரில் அமைக்கப்பட்டுள்ள 3.4 கிலோ மீட்டர் தூர பைபாஸ் எனும் பக்கச் சாலை தவிர 2 பெரிய மற்றும் 17 சிறிய பாலங்கள், 4 வாகன சுரங்கப் பாதைகள், 10 பாதசாரி சுரங்கப்பாதைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை இந்த சாலை கொண்டுள்ளது.

சிறந்த போக்குவரத்து தொடர்புக்காகவும், எளிதான வாழ்க்கைக்காகவும் நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் அரசின் திட்டங்களை எடுத்துரைத்த பிரதமர், “கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 40,000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், சுமார் 5.5 லட்சம் கோடி செலவில் 52 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன” என்றும் கூறினார்.

இந்தப் பகுதியில் ரெயில் போக்குவரத்துக்கு ஊக்கமளிக்கும் அறிவிப்பைச் செய்த பிரதமர் ரூ.1000 கோடி மதிப்பில் துல்ஜாபூர் வழியாக சோலாப்பூர்-உஸ்மானாபாத் ரெயில் பாதைக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்றார். மண்டல விமான போக்குவரத்துக்கான உடான் திட்டத்தின் கீழ் சோலாப்பூரில் இருந்து விமானச் சேவைகளை தொடங்குவதற்கான முயற்சிகள் இருப்பதாக அவர் கூறினார்.

தூய்மை இந்தியா, தூய்மையே இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக சோலாப்பூரில் பாதாள சாக்கடை திட்டத்தையும் 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நகரின் கழிவுநீர் வெளியேற்றத்தை இது அதிகரிப்பதோடு சுகாதாரத்தை மேம்படுத்தும்.

சோலாப்பூர் பொலிவுறு நகருக்கு பகுதி அடிப்படையிலான மேம்பாட்டின் ஒரு பகுதியாக சோலாப்பூர் நகருக்கு உஜைனி அணையிலிருந்து குடிநீர் வழங்கவும், கழிவுநீரை வெளியேற்றவுமான இணைவுத் திட்டத்திற்கும் அம்ருத் இயக்கத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். குடிமக்களுக்கு சிறந்த பயன்களை உருவாக்கும் வகையிலான தொழில்நுட்பம் காரணமாக பொது சுகாதாரம் மேம்படுவதோடு சேவை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை இது கொண்டு வரும்.

இத்தகைய நடவடிக்கைகள் சோலாப்பூர் மற்றும் அருகே உள்ள பகுதிகளின் மக்களுக்கு சாலை மற்றும் போக்குவரத்து தொடர்பு, குடிநீர் விநியோகம், சுகாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற மிக முக்கியமான முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

*****



(Release ID: 1559270) Visitor Counter : 318