பிரதமர் அலுவலகம்

அணுசக்தி மூவினைத் திறனை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக ஐஎன்எஸ் அரிஹன்ட் பணியாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 05 NOV 2018 2:20PM by PIB Chennai

போர் திறன் சார்ந்த, தாக்குதல் திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹன்ட் பணியாளர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (05.11.2018) வரவேற்றார். இந்த நீர்மூழ்கிக் கப்பல்,  நாட்டின் மூவினை அணுசக்தித் திறனை வெற்றிகரமாக நிறைவேற்றி, முதல் ரோந்துப் பணியை நிறைவுச் செய்து அண்மையில் திரும்பியுள்ளது.

இந்தியாவின் அணுசக்தி மூவினைத் திறனை வெற்றிகரமாக செயல்படுத்திய ஐஎன்எஸ் அரிஹன்ட்-டின்  முக்கியத்துவத்தை     சுட்டிக்காட்டிய பிரதமர், அதன் பணியாளர்களையும், அதன் சாதனையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார். அவர்களின் இந்த சாதனை இந்தியாவின் போர்த் திறன் சார்ந்த தாக்குதல் திறன் கொண்ட, வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் இயக்கத்துடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவையும் சேர்த்திருப்பதை,  அவர் வெகுவாக புகழ்ந்தார்.

உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட போர்த்திறன் சார்ந்த தாக்குதல் திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அதன் இயக்கம் நாட்டின் தொழில்நுட்பத்திறனுக்கும், சக்திக்கும், ஒருங்கிணைப்புக்கும்  சான்றாக அமைந்துள்ளது என்று திரு.மோடி குறிப்பிட்டார். நீர்மூழ்கிக் கப்பல் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, உறுதி, நாட்டின் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் விஞ்ஞானிகளின் அயராத உழைப்புக்கு திரு.மோடி நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் தைரியமிக்க ராணுவ வீரர்களின் திறன், அவர்களது அயராத உழைப்பு, பாராட்டுக்குரியது என்ற பிரதமர், மூவினைத் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் இத்துறையில் எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

 உறுதியான இந்தியா – புதிய இந்தியாவை  உருவாக்குவதில் இந்திய மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இப்பாதையில் எழுந்த சவால்களை அவர்கள் அயராது எதிர்கொண்டதையும் குறிப்பிட்டார். கோடானுகோடி இந்திய மக்களின் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் உறுதியான இந்தியா நிறைவேற்றும் என்றும் உலக அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் குறிப்பாக உலக அளவில் நிலவும் முழுமையான ஸ்திரத்தன்மையற்ற நிலைமை மற்றும் கவலைகளுக்கு இது நம்பிக்கையளிக்கும்  முக்கிய தூணாக விளங்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஒளிகளின் திருவிழாவான தீபாவளியை முன்னிட்டு, இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இருளையும், எல்லாவிதமான பயத்தையும், ஒளி நீக்குவதுபோல, ஐஎன்எஸ் அரிஹண்ட் நாட்டின் தைரியத்திற்கு கட்டியம் கூறுவதுபோல் அமைந்துள்ளது என்றும் திரு.மோடி பாராட்டினார்.

                        ******



(Release ID: 1551911) Visitor Counter : 214