Social Welfare
வனங்களில் இருந்து நவீன நாகரிகம் வரை
உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இணையும் பழங்குடியின இந்தியா
Posted On:
27 MAR 2026 10:37AM

இந்திய பழங்குடி மக்கள் வசிக்கும் மையப் பகுதிகளில் ஒரு நிகழ்ந்து வரும் புரட்சி
இந்தியாவின் பழங்குடி சமூகங்கள், உலகப் பொருளாதாரத்தில் தங்களின் இடத்தை மறுவரையறை செய்து, காடுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரங்களை, நவீன நுகர்வோரைக் கவரும் நீடித்த, உயர் மதிப்புள்ள பொருட்களாக மாற்றி வருகின்றன. தன்னிறைவிலிருந்து தொழில்முனைவை நோக்கிய இந்த மாற்றம், பழங்குடிப் பொருளாதாரங்களின் ஒரு பரந்த மறுசிந்தனையைப் பிரதிபலிக்கிறது; இதில் பாரம்பரியம் இனி தனித்து நிற்காமல், தேசிய மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில், 2026 மார்ச் 18 முதல் 30 வரை நடைபெறும் பாரத் பழங்குடியினர் விழா 2026-ல் இந்த மாற்றம் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பால் (TRIFED), பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த விழா, இந்தியாவின் பழங்குடியினரின் பாரம்பரியம், அதன் மிகவும் ஆற்றல்மிக்க வடிவத்தில் உயிர்ப்புடன் வெளிப்படும் ஒரு தேசிய தளமாக விளங்குகிறது. கைவினைக்கலை, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் வாழ்வாதாரங்களைக் கொண்டாடும் இது, பழங்குடியினர் மரபுகளை நாட்டின் கலாச்சார மற்றும் பொருளாதாரச் சூழலில் முன்னிறுத்துகிறது.
வன் தன் யோஜனா மற்றும் டிரைப்ஸ் இந்தியா வலையமைப்பு போன்ற திட்டங்களுடன், 'ரிசா: ஒரு உயர்தர பழங்குடியினர் பிராண்ட்' உள்ளிட்ட இலக்கு சார்ந்த கொள்கைத் தலையீடுகளால் இந்த மாற்றம் இயக்கப்படுகிறது. பழங்குடியின கைவினைஞர்கள், காடுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரப் பொருளாதாரங்களிலிருந்து, உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தீவிரமாகப் பங்கேற்கும் நிலைக்கு மாறி வருகின்றனர். இதன் விளைவாக, பாரம்பரியமும் லட்சியமும் சரிசமமாக இணைந்த ஒரு வரலாறு உருவாகிறது. இங்கு வனப் பகுதிகள், நவீனத்துவத்துடன் இணைவதுடன், தொன்மையான திறன்கள் அவற்றின் உண்மையான சந்தை மதிப்பைக் கண்டறிகின்றன.

பழங்குடியினர் இந்தியா முன்மாதிரி: வன் தன் முதல் மதிப்புச் சங்கிலி வரை

வாழ்வாதாரப் பாதுகாப்பையும் சந்தை அணுகலையும் இணைக்கும் நிறுவனக் கட்டமைப்புகள் மூலம் இந்தியாவின் பழங்குடியினரின் பொருளாதாரம் முறையாக மறுவடிவம் பெற்று வருகிறது. நாட்டின் மிகவும் திறமையான கைவினைக்கலைஞர்களான பழங்குடியின சமூகங்களுக்கு ஆதரவை விட மேலான ஒன்று தேவை என்பதை அரசு உணர்ந்துள்ளது; அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியமாகிறது. அதாவது, வெறும் மூலப்பொருட்களை வழங்குபவர்கள் என்ற நிலையிலிருந்து, உலகளாவிய சந்தைகளில் உயர் விலையைப் பெறக்கூடிய வர்த்தக முத்திரைகளை உருவாக்குபவர்களாகவும் உரிமையாளர்களாகவும் மாறும் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவது என்று பொருள்படுகிறது.
டிரைஃபெட் தலைமையிலான 'டிரைப்ஸ் இந்தியா' வலையமைப்பு, பழங்குடி உற்பத்தியாளர்களை நகர்ப்புற நுகர்வோருடன் நேரடியாக இணைத்து, இடைத்தரகர் சங்கிலிகளை நீக்குகிறது. பழங்குடி சேகரிப்பாளர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமும், டிரைஃபெட்-ம் இணைந்து வன் தன் விகாஸ் மையங்கள் என்ற மையங்களைத் தொடங்கின. அவை பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக, சிறிய வனப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டல், பதப்படுத்துதல் மற்றும் வர்த்தகக்குறியிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. ஒவ்வொரு வன் தன் விகாஸ் மைய குழுமமும், வன் தன் மையங்கள் என்றும் அழைக்கப்படும் 15 பழங்குடி சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுய உதவிக் குழுவிலும் அதிகபட்சமாக 20 பழங்குடி மரத்தால் ஆன பொருட்கள் தவிர்த்த பிற வனம் சார்ந்த பொருள் சேகரிப்பாளர்கள் அல்லது கைவினைக்கலைஞர்கள் உள்ளனர். இது ஒரே குழுமத்திற்குள் கிட்டத்தட்ட 300 பயனாளிகளை ஒன்றிணைத்து, கூட்டுத் தொழில் மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
இந்த மாதிரி, கூட்டு கொள்முதல், பகிரப்பட்ட பதப்படுத்தும் உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் வலுவான சந்தை இணைப்புகளைச் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் செயல்திறனையும் பேரம் பேசும் சக்தியையும் மேம்படுத்துகிறது. பஸ்தாரில் மஹுவா அல்லது புளியைப் பதப்படுத்தும் பெண்கள் இனி வெறும் பயிரிடுபவர்கள் மட்டுமல்ல, அவர்கள் முறைசார்ந்த மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட குறு தொழில்முனைவோராகவும் உருவாகி வருகின்றனர். அதே நேரத்தில், ரிசா பழங்குடியினரின் கைவினைத்திறனை உயர்த்தி, அதனை உலகளாவிய சந்தையில் ஒரு உயர்தரப் பொருளாக நிலைநிறுத்துகிறது.
பழங்குடி உற்பத்தியாளர்கள், பதப்படுத்தப்படாத வனப் பொருட்கள், சிறு வனப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை இந்த வன் தன் விகாஸ் மையங்களுக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கு தரம் பிரித்தல், மதிப்புக்கூட்டல், பேக் செய்தல் மற்றும் ஆவணப்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கிருந்து, அந்தப் பொருட்கள் டிரைப்ஸ் இந்தியாவின் சில்லறை விற்பனை வலையமைப்பான, முக்கிய விமான நிலையங்கள் மற்றும் உயர்தர வணிக வளாகங்களில் உள்ள கடைகள், மின் வணிகத் தளங்கள் வழியாகச் சென்று, இறுதியாக சர்வதேச வாங்குபவர்களையும் வர்த்தகச் சந்தைகளையும் சென்றடைகின்றன.
பாரம்பரிய கைவினை வடிவங்களின் கலாச்சாரத் தன்மையைச் சிதைக்காமல், அவற்றைச் சமகால நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதை உறுதி செய்வதற்காக, டிரைஃபெட் அமைப்பு, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் உள்ளிட்ட வடிவமைப்பு நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் உள்ளூர் இடைத்தரகருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு டோக்ரா பதக்கம், இப்போது அதன் சொந்த சான்றளிக்கப்பட்ட அடையாளத்தின் கீழ் அதை விடப் பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
ரிசா: காலத்தால் அழியாத பழங்குடி – ஒரு உயர்தர பழங்குடி பிராண்ட்

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் தலைமையில் இயங்கும் ரிசா, பழங்குடி கைவினைப் பொருட்களை உயர்தர உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் நிலைநிறுத்துவதற்கான ஒரு முதன்மையான முன்முயற்சியாகும். திரிபுராவின் பாரம்பரிய ரிசா துணியால் ஈர்க்கப்பட்ட இது, பாரம்பரியத்தை சமகால வடிவமைப்பு மற்றும் பிராண்டிங்குடன் ஒன்றிணைக்கிறது.
முக்கிய அம்சங்கள்
நவீன, சந்தைக்குத் தயாரான தொகுப்புகளுக்கான வடிவமைப்பாளர்-கைவினைக்கலைஞர் ஒருங்கிணைப்புகள்
புதுமை, தரம் மற்றும் உலகளாவிய நிலைப்படுத்தல் ஆகியவற்றில் வலுவான கவனம்
பழங்குடியின கைவினைக் குழுமங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றை வலுப்படுத்துதல்
சிறப்பு கைவினைப் பொருட்கள்
எரி மற்றும் முகா பட்டு – அசாம்
கோட்பாட் பருத்தி – ஒடிசா
சாங்பா பஷ்மினா – லடாக்
தோடா எம்பிராய்டரி – தமிழ்நாடு
லாங்பி மண்பாண்டம் – மணிப்பூர்
துர்டுக் பித்தளை கரண்டி வகைகள் – லடாக்
டோக்ரா கலை – சத்தீஸ்கர்
பழங்குடியினர் பொருளாதாரத்தை வழிநடத்தும் பெண்கள்

இந்தக் கதையில் மிகுந்த மாற்றத்தை உருவாக்கும் அம்சம் பாலினம் ஆகும். பெண்கள் செயலற்ற பயனாளிகள் அல்ல, அவர்கள் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் உற்பத்தியாளர்கள், தலைவர்கள் மற்றும் தரத்தின் பாதுகாவலர்கள். பெண்களால் வழிநடத்தப்படும் கூட்டுறவு சங்கங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கான மையங்களாக மாறியுள்ளன; அவை கூட்டுச் சேமிப்பு, சிறு கடன் வழங்குதல் மற்றும் மூலப்பொருட்களில் பகிரப்பட்ட முதலீடு ஆகியவற்றைச் சாத்தியமாக்குகின்றன. பலருக்கும், டிரைஃபெட் முதல் முறையான பொருளாதார அடையாளத்தை வழங்கியுள்ளது; இது முன்னர் அங்கீகரிக்கப்படாத வாழ்வாதாரப் பணியை ஆவணப்படுத்தப்பட்ட உழைப்பாக மாற்றியுள்ளது.

பாரத் டிரைப்ஸ் ஃபெஸ்ட் 2026-ல், இந்த மாற்றங்கள் அளவிடக்கூடிய விளைவுகளில் புலப்படுவது மட்டுமின்றி, பெண்களின் வாழ்வியல் யதார்த்தங்களிலும் கதைகளிலும் பிரதிபலிக்கின்றன; இது அவர்களின் குரல்களுக்கும் அனுபவங்களுக்கும் ஒரு ஈர்க்கக்கூடிய சாளரத்தை வழங்குகிறது.
பாரம்பரியத்தை நாளைய தினத்துடன் இணைக்கும் மாற்றத்தை உருவாக்குபவர்கள்
மிசோரம் மாநிலத்தின் லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள கமலாநகரைச் சேர்ந்த, சக்மா பழங்குடியினத்தைச் சேர்ந்த 24 வயது இளம் தொழில்முனைவோரான தேபோங்ஷி சக்மா, பாரம்பரியத்தைப் பின்னுக்குத் தள்ளாமல், உலகளாவிய சந்தைக்கு முன்னோக்கிக் கொண்டு செல்லும் ஒரு சக்திவாய்ந்த கதையை உருவாக்கி வருகிறார். சக்மா கலாச்சாரப் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய அவர், பழங்குடி அறிவுசார் அமைப்புகளை கண்ணியம், அடையாளம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான பாதைகளாக மறுவடிவமைத்து வருகிறார்.
போதிப்ளூம் சொசைட்டியின் நிறுவனராக, தேபோங்ஷி 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு துடிப்பான கூட்டமைப்பை வழிநடத்துகிறார். இந்தக்கூட்டமைப்பு, பெண்களை, குறிப்பாக விவாகரத்து பெற்ற பெண்கள் உட்பட சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடியவர்களை மேம்படுத்துவதில் வலுவான மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய கவனத்தைச் செலுத்துகிறது. அவரது முயற்சி ஒரு குறிப்பிட்ட கைவினைத் தொழிலையும் தாண்டி, வாழ்வாதாரத்தை உருவாக்கும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட, சமூகத்தால் இயக்கப்படும் மாதிரியை உள்ளடக்கியுள்ளது. கைத்தறி நெசவுத் துணிகள் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் முதல் ஜும் (இடமாற்று) சாகுபடி மற்றும் மூங்கில் சார்ந்த பொருட்கள் வரை, அவரது பணி சூழலியல், கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றைச் சீராக ஒருங்கிணைக்கிறது.
“எந்தவொரு பெண்ணும் துன்பப்படுவதையோ, வேலையில்லாமல் இருப்பதையோ நான் காண விரும்பவில்லை. என் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடனும் ஆற்றலுடனும் திகழ வாய்ப்புகளை உருவாக்குவதே எனது தொலைநோக்குப் பார்வை. நமது பாரம்பரியங்களைப் பாதுகாத்து, உலக அரங்கில் நமது கலாச்சாரத்தைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன்.”
இயந்திரமயமாக்கப்பட்ட உள்கட்டமைப்பு உள்ள ஒரு பிராந்தியத்தில் இயங்கும் டெபோங்ஷியின் பயணம், பழங்குடி சமூகங்களின் மீள்திறனையும் புத்திசாலித்தனத்தையும் எடுத்துக்காட்டுகிறது. டிரைஃபெட் உடனான ஒத்துழைப்பின் மூலம், அவரது தயாரிப்புகள் இப்போது உள்ளூர் சந்தைகளுக்கு அப்பால் உள்ள மக்களையும் சென்றடைகின்றன; இது பாரம்பரிய நடைமுறைகளை நிலையான வருமானமாக மாற்றுவதுடன், கலாச்சாரத்தின் தனித்தன்மையையும் பாதுகாக்கிறது. கையால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் உலகளாவிய நுகர்வோர் ஈர்க்கப்படுவதால், அவரது பணி, நிலைத்தன்மை மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டின் சங்கமத்தில் அமைகிறது.
கைத்தறியின் மூலம் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்லுதல்

ஜார்க்கண்டின் கஜ்ரி கிராமத்தைச் சேர்ந்த சந்தால் கைவினைக்கலைஞரான 23 வயது உர்மிளா சோன்வர், தனது கலாச்சார மற்றும் சூழலியலால் ஈர்க்கப்பட்டு ஒரு இளம் வடிவமைப்பாளராக உருவெடுத்து வருகிறார். அவரது படைப்புகள், 'பாரா கண்ட்' எனப்படும் புனிதமான உள்ளூர் சடங்கு மற்றும் அவரது கிராமத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு, கண்ணைக் கவரும் வகையிலும், அடையாளத்தில் ஆழமாக வேரூன்றியதாகவும் இருக்கும் கைத்தறி புடவைகளாக மாறுகின்றன.
12 ஆம் வகுப்பு வரை தனது பள்ளிப் படிப்பை முடித்த உர்மிளா, பழங்குடி பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே, பாரம்பரியத்தை வாழ்வாதாரமாக மாற்றும் நெசவுத் தொழிலில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது வடிவமைப்புகள் அவருக்குப் பொருளாதார ரீதியாக உதவுவது மட்டுமல்லாமல், சந்தால் கலாச்சாரத்திற்கு பரந்த அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகின்றன. மேலும், உள்ளூர் கைவினைப் பொருட்களை விரிவான தேசிய மற்றும் உலகளாவிய சந்தைகளில் நிலைநிறுத்துகின்றன. தனது படைப்புகளின் மூலம், அவர் கலாச்சாரத் தூதுவர்களாக விளங்கும் ஒரு புதிய தலைமுறை கைவினைக்கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறார். அவர்கள் தங்கள் சமூகத்தின் பாரம்பரியத்தை படைப்பாற்றலுடனும் குறிக்கோளுடனும் முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்.
“எனது படைப்புகளின் மூலம் நமது கிராமமும் அதன் பாரம்பரியங்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். என் புடவையைப் பார்ப்பவர், அது கஜ்ரியிலிருந்து வந்தது என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். கைத்தறி மூலம், நமது பழங்குடி கலாச்சாரத்திற்கு ஓர் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்க விரும்புகிறேன்.”
வயதில் மூத்தோரும் தொடரும் கைத்தறி பாரம்பரியம்

தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதியைச் சேர்ந்த, 42 வயதான தோடர் இனக் கைவினைக்கலைஞரான சங்கீதாவைப் பொறுத்தவரை, எம்பிராய்டரி என்பது கற்றுக்கொண்ட ஒரு திறமையல்ல. மாறாக அது வாழ்நாள் முழுவதும் கைவசம் உள்ள ஒரு பாரம்பரியம். சொரசொரப்பான வெள்ளைப் பருத்தித் துணியில் சிவப்பு மற்றும் கருப்பு நூல்களைக் கொண்டு, தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த சிக்கலான வடிவியல் கோலங்களை அவர் உருவாக்குகிறார்.
தோடர் சமூகத்தின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பதால், இந்தப் பாரம்பரியம் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. நீலகிரிக்கு அப்பால் காணப்படும் பெரும்பாலான கலைப்படைப்புகள், இளமைப் பருவத்திலேயே தொடங்கப்பட்ட, பல தசாப்த காலப் பயிற்சியின் விளைவாகும். சங்கீதா, இந்தக் கலையை ஒரு பயிற்சியாளராகவும் பாலமாகவும் இருந்து, அதனைத் முன்னெடுத்துச் செல்லும் பெண்களுக்கு அங்கீகாரமும் வருமானமும் சென்றடைவதை உறுதிசெய்கிறார்.
கழிவிலிருந்து வளம்: ஒரு நிலையான கைவினைக்கலைப் பயணம்

உத்தராகண்டின் உதம் சிங் நகரில் வசிக்கும் தாரு பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 வயதான அனிதா ராணா, பாரம்பரிய சூழலியல் சார்ந்த ஞானம் எவ்வாறு நிலையான வாழ்வாதாரங்களுக்கு வலு சேர்க்கும் என்பதை நிரூபிக்கிறார். தற்போது 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மகளிர் கூட்டமைப்பின் அங்கமாக இருப்பதால், அவர் சிறந்த சந்தை அணுகல், நியாயமான விலை நிர்ணயம், மற்றும் சாரஸ் கண்காட்சி, பழங்குடியினர் விழாக்கள் போன்ற தளங்களில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.
அவரது கைவினைத்தொழில், பருவகால மற்றும் மக்கும் தன்மையுடைய முஞ்சா புல் நெசவை மையமாகக் கொண்டது. இந்தப் புல்லைக் கொண்டு, நெகிழிக்கு ஒரு மாற்றாக ரொட்டி சூடேற்றும் பெட்டிகள் போன்ற பயன்பாட்டுப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இளம் பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம், அனிதா இந்தப் பழங்குடிப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், தனது சமூகத்திற்கு கண்ணியமான வாழ்வாதாரத்தையும் சாத்தியமாக்குகிறார். நிலைத்தன்மை, பாரம்பரியம் மற்றும் தொழில்முனைவு ஆகியவை எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு நீடித்த தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதை அவரது பயணம் பிரதிபலிக்கிறது.
“முஞ்சா புல் நெசவு எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது சுற்றுச்சூழலுக்கு ஒரு நல்ல தீர்வும் ஆகும். நாங்கள் தயாரிப்பவை முற்றிலும் இயற்கையானவை, இயற்கைக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. இளைய தலைமுறையினர் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் எங்கள் பாரம்பரியம் தொடரும், பல பெண்கள் கண்ணியத்துடன் சம்பாதிக்க முடியும்.”

அடையாளத்தில் வேரூன்றிய வளர்ச்சி
இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் நுழைவதன் மூலம், ஒரு விஷயம் தெளிவாகிறது. பழங்குடி கைவினைக்கலைஞர்கள் உருவாக்கும் பொருட்களை இயந்திரங்களால் பிரதியெடுக்க முடியாது. அந்தத் தனித்துவமே பெருமளவு உற்பத்தி செய்யப்படும் இந்தக் காலகட்டத்தில் அவர்களின் மிக வலிமையான சாதகமாக மாறியுள்ளது. டிரைஃபெட் மற்றும் ரிசா போன்ற முன்முயற்சிகள், இந்த வலிமையை நிலையான வருமானமாகவும், கண்ணியமாகவும் மாற்றுவதற்கு உதவுகின்றன.
வன் தன் விகாஸ் மையங்களின் விரிவாக்கம், டிரைப்ஸ் இந்தியாவின் மின்னணு வர்த்தக இருப்பின் வளர்ச்சி, மற்றும் பாரத் டிரைப்ஸ் ஃபெஸ்ட் 2026 போன்ற தளங்களில் அதிகரித்து வரும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மூலம், பிராந்தியங்களைக் கடந்த கைவினைக்கலைஞர்கள் பயனாளிகளாக அல்லாமல் படைப்பாளர்களாக, தங்களின் சொந்த நிபந்தனைகளின்படி சந்தையுடன் ஈடுபட முடிகிறது.
வனப் பொருட்கள் முதல் உலகளாவிய வடிவமைப்புத் தளங்கள் வரை, இந்தியாவின் பழங்குடி சமூகம் வெறும் பொருட்களை உற்பத்தி செய்வதுடன் நின்றுவிடவில்லை; அது நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய, ஆழமாக வேரூன்றிய ஒரு வளர்ச்சி மாதிரியையும் வடிவமைத்து வருகிறது.
***
PD/BR/PD
(Features ID: 158471)
आगंतुक पटल : 26
Provide suggestions / comments