Others
இந்திய உருக்குத் துறை: வளர்ச்சி மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தின் கதை!
Posted On:
18 OCT 2024 9:34AM
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் உருக்குத் துறை, சர்வதேச அளவில் ஒரு மாபெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் உருக்கு உற்பத்தியில் மிதமான நிலையில் இருந்த இந்தியா, தற்போது ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இந்த அபார வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், "வளர்ச்சியடைந்த இந்தியா" என்ற இலக்கை நோக்கி நாம் பயணிக்கும் வேளையில், நாட்டின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உருக்குத் துறை மிக முக்கியப் பங்காற்றும் என்று தெரிவித்துள்ளார். நவீனமயமாக்கல், சுயசார்பு மற்றும் நிலையான தொழில்மயமாக்கல் ஆகியவற்றை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு இந்தத் துறை ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 6% என்ற ஈர்க்கக்கூடிய அளவில் வளர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி வெறும் 1% ஆகவும், ஒட்டுமொத்த உலக உருக்கு உற்பத்தி 1% சரிவையும் சந்தித்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த வளர்ச்சி தனித்துத் தெரிகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் உருக்கு உற்பத்தித் திறன் சுமார் 62 மில்லியன் டன்கள் அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 6% ஆகும். ஆசியாவின் உருக்கு உற்பத்தித் திறன் விரிவாக்கத்தில், ஆசியான் நாடுகளும் இந்தியாவும் இணைந்து சுமார் 89% பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் அரசின் ஊக்கத் திட்டங்கள் காரணமாக, உலக உருக்குச் சந்தையில் இந்தியா தொடர்ந்து தனது மேலாதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
இந்தச் சிறப்பான செயல்பாடு, 'தற்சார்பு இந்தியா' போன்ற உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்களின் மூலம் உலகச் சந்தையில் நாட்டின் உத்திசார் நிலையை எடுத்துக் காட்டுகிறது. இந்தியா உருக்கை உற்பத்தி செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், இறக்குமதிச் சார்ந்து இருப்பதை குறைப்பதற்கும், ஏற்றுமதிப் போட்டியை அதிகரிப்பதற்கும் ஒரு தெளிவான வழிகாட்டியை வடிவமைத்து வருகிறது.
இந்த வெற்றியின் பின்னணியில் 2017-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய உருக்குக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கொள்கையின்படி, வரும் 2030-31 நிதியாண்டிற்குள் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தித் திறனை 300 மில்லியன் டன்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 255 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தியையும், 230 மில்லியன் டன் முடிக்கப்பட்ட உருக்கு உற்பத்தியையும் எட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. உருக்கு உற்பத்தியில் இந்தியாவைத் தற்சார்பு கொண்ட நாடாக மாற்றுவதே இக்கொள்கையின் நோக்கமாகும். அதே வேளையில், உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தித் திறனை அதிகரித்தல், தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான, ஆற்றல் திறன் கொண்ட நடைமுறைகளைக் கையாளுவதற்கும் இது முக்கியத்துவம் அளிக்கிறது.
நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தியானது 2019-20 நிதியாண்டில் 109.137 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், 2023-24-ல் 144.299 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் (2022-23-ல் 127.197 மெ.ட) உற்பத்தியை விட 13.4% வலுவான வளர்ச்சியாகும். உள்நாட்டு உருக்குத் துறையின் உற்பத்தித் திறன் 2019-20-ல் ஆண்டுக்கு 142.299 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், 2023-24-ல் 179.515 மில்லியன் டன்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி வளர்ச்சிக்குத் துணையாக உள்ளது. இதே காலகட்டத்தில் உற்பத்தித் திறன் பயன்பாடு 81% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் உருக்குத் துறை என்பது வெறும் உற்பத்தித் திறன் விரிவாக்கம் சார்ந்தது மட்டுமல்ல—அதே அளவிற்கு நாட்டின் உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பதையும் இது குறிக்கிறது. ஒட்டுமொத்த முடிக்கப்பட்ட உருக்கு நுகர்வானது 2019-20 நிதியாண்டில் 100.171 மில்லியன் டன்களாக (மெ.ட) இருந்த நிலையில், 2023-24-ல் 136.291 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.7% வளர்ச்சியுடன், வலுவான உள்நாட்டுத் தேவையைக் காட்டுகிறது. 2027 நிதியாண்டு வரை உருக்குத் தேவையில் 6% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் இருக்கும் என்ற தொழில் துறை கணிப்புகள், இந்தியாவின் உருக்குத் துறை தேவையைப் பூர்த்தி செய்யவும், ஒருவேளை அதை விடவும் அதிகரிக்கவும் தயாராக இருப்பதை உணர்த்துகின்றன. இந்த வளர்ச்சியானது, உற்பத்தித் திறன் விரிவாக்கம் மற்றும் உயர்தர உருக்கு தயாரிப்புகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் உத்தி ரீதியான கொள்கைகள் மற்றும் தொழில் துறை சார்ந்த முயற்சிகளுக்குச் சான்றாகும்.
இங்கு உருக்குத் துறையானது ஒரு கட்டுப்பாடற்ற துறை என்பதைக் குறிப்பிட வேண்டும். உருக்குத் துறையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கை சூழலை உருவாக்குவதன் மூலம் அரசு ஒரு எளிமையான பாதையை அமைத்துத் தந்துள்ளது. உருக்குத் துறையை அனைத்து கோணங்களிலும் புத்துயிர் பெறச் செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உருக்கு உற்பத்தியை அதிகரிக்க, மூலதன முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இறக்குமதியைக் குறைப்பதற்கும் நோக்கமாகக் கொண்டு 'உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத்' திட்டம் ஒரு முக்கிய முயற்சியாகும். இதன் மூலம் ரூ.29,500 கோடி முதலீடு மற்றும் சிறப்பு வகை உருக்கிற்காக கூடுதலாக 25 மில்லியன் டன் உற்பத்தித் திறனை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய உருக்குத் துறையை உலக அளவில் போட்டியிடச் செய்ய, மத்திய அரசின் 2024 பட்ஜெட்டில் மூலப்பொருளான ஃபெரோ நிக்கல் மீதான அடிப்படைச் சுங்க வரியை அரசு குறைத்துள்ளதுடன், இரும்புக் கழிவுகள் மீதான வரி விலக்கை 2026 மார்ச் வரை நீட்டித்துள்ளது. மற்றொரு முக்கிய முயற்சியாக, அரசு கொள்முதலில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' உருக்கை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் உருக்கு தயாரிப்புகள் கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிதிச் சலுகைகளுடன் கூடுதலாக, உருக்குத் துறையின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்' பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதிலும் பயன்படுத்துவதிலும் உருக்குத் துறையை ஒருங்கிணைக்கிறது. இது உருக்கு உற்பத்தியில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க பங்களிக்கிறது. மேலும், 'உருக்கு கழிவு மறுசுழற்சி கொள்கை' உள்நாட்டிலேயே கிடைக்கும் கழிவு இரும்புப் பொருட்களின் இருப்பை அதிகரிப்பதன் மூலம் வளத் திறனை மேம்படுத்தி, இந்த முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
இன்று, இந்தியாவின் உருக்குத் துறையானது நிலைத்தன்மையைப் பேணுவதோடு, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவதற்குத் தயாராக இருக்கும் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. 'இந்தியாவில் தயாரிப்போம்' மற்றும் 'பிரதமரின் விரைவு சக்தி' தேசியப் பெருந்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள், உருக்குக்கான தேவையைத் தூண்டி அதன் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்கின்றன. அரசு மற்றும் தனியார் துறையிடமிருந்து வரும் உத்தி ரீதியான முதலீடுகள், உற்பத்தித் திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரித்து, 2017-ஆம் ஆண்டின் தேசிய உருக்குக் கொள்கை நிர்ணயித்த இலக்குகளைத் தாண்ட உருக்குத் துறைக்கு உதவும். இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற உழைக்கும் வேளையில், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவற்றில் உருக்குத் துறை மிக முக்கியப் பங்காற்றி, நிலையான மற்றும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான உலகளாவிய அளவுகோலை அமைக்கும்
***
PKV/SV/KR
(Features ID: 158273)
आगंतुक पटल : 4
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English