• Sitemap
  • Advance Search
Social Welfare

அழிந்துவரும் இந்திய மொழிகளை ஆவணப்படுத்துதல்

Posted On: 12 AUG 2025 11:31AM

"எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் ஊரான போலிவோவில் ஒரு கோயில் உள்ளது," என்று ஊட்டிக்கு அருகிலுள்ள நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் 66 வயதான குர்தாஸ் வாசமல்லி கூறினார். "அந்தக் கோயிலிலிருந்துதான் எங்கள் கிராமங்களுக்கு தெய்வீக சக்தி வருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்... இங்கு சிலை வழிபாடு இல்லை."

தேயிலை மற்றும் காபித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்ற இந்த மலைகள், அங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வரும் தோடர் பழங்குடியினரால் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. கால்நடைகளை வளர்க்கும் அந்தச் சமூகம், ஒரு காலத்தில் தங்கள் தெய்வங்களும் தேவதைகளும் தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து, காலப்போக்கில் இந்தப் புனித சூழலின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாக நம்புகிறது.

வாசமல்லி, தனது தாய்மொழியான தோதர் மூலம் தனது வாய்மொழி மரபுகளை அறிந்திருக்கிறார். தோடா என்பது கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென் திராவிட மொழிகளிலிருந்து பிரிந்து தனித்து உருவான, அழிந்துவரும் ஒரு ஆதார தென் திராவிட மொழியாகும். தோடர் மக்களின் எண்ணிக்கை தற்போது சில ஆயிரங்களாக உள்ளது. வாசமல்லி, தனது பாரம்பரிய வாய்மொழி மரபைப் பாதுகாக்கப் பாடுபடும் அச்சமூகத்தின் மூத்தவர்களில் ஒருவர் ஆவார்.

வாசமல்லி சமீபத்தில், கல்வி அமைச்சகத்தின் கீழ் மைசூரைத் தளமாகக் கொண்ட மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தால் (CIIL) செயல்படுத்தப்படும், அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் பேணுதல் திட்டத்தின் (SPPEL) குழுவுடன் இணைந்துப் பணியாற்றினார். எஸ்பிபிஇஎல் அமைப்பு, நாட்டில் அழிந்துவரும் மொழிகள் என்று அழைக்கப்படும் மொழிகளை (அதாவது, 10,000க்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழிகள் அல்லது இதற்கு முன்னர் மொழியியல் ரீதியாக ஆய்வு செய்யப்படாத மொழிகள்) ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்கிறது.

இந்த அமைப்பு, களப்பணி மேற்கொண்டு மொழிகளின் இலக்கணம் மற்றும் சொற்களை ஆவணப்படுத்துதல், ஆவணப்படங்கள், இருமொழி/மும்மொழி அகராதிகள், பட விளக்க அகராதிகள் மற்றும் இன-மொழியியல் விவரக்குறிப்புகளை உருவாக்குதல், மேலும் ஒலி கோப்புகள் உட்பட அந்த ஆவணப் பணிகளை உலகளாவிய அணுகலுக்காக இணையக் களஞ்சியங்களில் பதிவேற்றுதல் ஆகியவற்றின் மூலம், அழிந்துவரும் மொழிகளை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எஸ்பிபிஇஎல், தற்போது 117 அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அதிகம் அறியப்படாத சுமார் 500 மொழிகளை ஆவணப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், பழங்குடியினர் மற்றும் அழிந்துவரும் கலாச்சாரங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் செயல்படுகின்றன. இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்கை 2020, உள்ளூர் மொழிகளைப் பாதுகாப்பதற்காகப் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறது.

இந்த உள்ளூர் முயற்சி ஒரு உலகளாவிய அக்கறையைப் பிரதிபலிக்கிறது. அழிந்துவரும் மொழிகளும் கலாச்சாரங்களும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின்படி, உலகளவில் உள்ள 7,000 மொழிகளில் கிட்டத்தட்ட 50% மொழிகள் அழிந்துவரும் நிலையில் உள்ளன. பல்வேறு பழங்குடி மொழிகளின் கடினமான சூழல் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காகவும், அவற்றைப் பாதுகாத்து, புத்துயிர் அளித்து, மேம்படுத்துவதற்காகப் பங்குதாரர்களையும் வளங்களையும் திரட்டுவதற்காகவும், யுனெஸ்கோ, 2022 முதல் 2032 வரையிலான காலகட்டத்தைப் பழங்குடி மொழிகளுக்கான சர்வதேச தசாப்தமாக அறிவித்துள்ளது.

90 நாடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகளின் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக, ஆகஸ்ட் 9 அன்று உலகப் பழங்குடி மக்கள் சர்வதேச தினத்தை அனுசரிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது.

செயற்கை நுண்ணறிவும் பழங்குடியினர் உரிமைகளும்

இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் பழங்குடியினர் சர்வதேச தினம் (ஆகஸ்ட் 9), "பழங்குடியினரும் செயற்கை நுண்ணறிவும்: உரிமைகளைப் பாதுகாத்தல், எதிர்காலத்தை வடிவமைத்தல்" என்ற கருப்பொருளில், பழங்குடி சமூகங்களுக்கு செயற்கை நுண்ணறிவின் நன்மைகளும் தீமைகளும் ஒருங்கே இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

சவால்

பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில், பழங்குடியினரின் பிரதிநிதித்துவமும், அது குறித்த அவர்களின் ஞானமும் மிகக் குறைவாகவே உள்ளன. முறையான அனுமதியின்றி செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியில் பயன்படுத்தப்படும் இவ்வகை, காலனித்துவப் போக்குகளை நிலைநிறுத்தி, டிஜிட்டல் இடைவெளிகளை விரிவுபடுத்துகிறது.

பழங்குடியினரிடையே புதுமை

  • பவளப்பாறைப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் பாலினேசிய சமூகங்கள்
  • மவோரி மொழிப் புத்துயிர்ப்புக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நியூசிலாந்தின் தேஹிகு மீடியா

இந்தியப் பழங்குடி மொழிகளின் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்பமும்

இந்தியாவின் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், பழங்குடியினர் ஆராய்ச்சி, தகவல், கல்வி, தொடர்பு மற்றும் நிகழ்வுகள் (TRI-ECE) திட்டத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழிப் பாதுகாப்பிற்கு நிதியுதவி அளிக்கிறது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள் பின்வருமாறு:

  • பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம், வதோதரா: ஆதிவாசி மொழிகள், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைத்திறன்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் ரூ. 58.70 லட்சம் (2019-20) வழங்கப்பட்டுள்ளது.
  • பிட்ஸ் பிலானி, ஐஐடி-கள் மற்றும் பாஷினியின் கூட்டு முயற்சி: ஆங்கிலம்/இந்தி உரை/பேச்சைப் பழங்குடி மொழிகளுக்கும், எதிர்மாறாகவும் மாற்றும் செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்புக் கருவிகளை உருவாக்குவதற்காக ரூ. 3.122 கோடி (2024-25) அளிக்கப்பட்டுள்ளது.

அழியும் தருவாயில் உள்ள இந்திய மொழிகள்

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் முயற்சிக்கு ஆழமான வரலாற்று வேர்கள் உள்ளன. இந்திய மொழிகளின் முதல் மொழியியல் ஆய்வு 1894-ல் ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சனால் தொடங்கப்பட்டது. அவரே 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான மொழி ஆய்வு அறிக்கையையும் தயாரித்தார். 1903 முதல் 1928 வரையிலான 25 ஆண்டு காலப்பகுதியில் இந்திய மொழியியல் ஆய்வு வெளியிடப்பட்டது. இது 11 தொகுதிகளைக் (19 பாகங்களில்) கொண்டுள்ளது. இதில் 8,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. இவை ஆங்கிலேய காலத்து இந்தியாவின் பெரும் பகுதிகளின் மொழிகளையும் வட்டார மொழிகளையும் விவரிக்கின்றன. இது மொத்தம் 179 மொழிகளையும் 544 வட்டார வழக்குகளையும் பட்டியலிட்டது.

 

அதன் பின்னரான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் நாட்டின் மொழியியல் சூழலைத் தொடர்ந்து விவரணையாக்கம் செய்து வருகின்றன. 1961 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 1,652 மொழிகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 117 மொழிகளை எஸ்பிபிஇஎல் அமைப்பு அழிந்துவரும் மொழிகளாக அடையாளம் கண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டளவில், இந்த பன்முகத்தன்மை கணிசமாக விரிவடைந்தது, அப்போது மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 2,843 வெவ்வேறு மொழிகள் பதிவு செய்யப்பட்டன. மொழியியல் பகுப்பாய்விற்குப் பிறகு, வல்லுநர்களால் சரியாக அடையாளம் காணக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1,369 மொழிகள் வகைப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் 1,474 மொழிகள் வகைப்படுத்தப்படாமல் இருந்தன. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 10,000-க்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் அனைத்து தாய்மொழிகளையும் நிறுவப்பட்ட மொழிப் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தியது. 10,000-க்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழிகள் அழிந்துவரும் மொழிகளாகக் கருதப்படுகின்றன.

கலாச்சார அமைச்சகத்தின் முயற்சியின் கீழ் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட யுனெஸ்கோ அறிக்கை ஒன்று, இந்தியாவின் பழங்குடி மற்றும் உள்ளூர் மொழிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது. ஒரு மொழி அழிந்துபோகும்போது, ​​அது ஈடுசெய்ய முடியாத கலாச்சார பாரம்பரியத்தையும், மரபுசார் அறிவு அமைப்புகளையும் தன்னுடன் அழித்துவிடுகிறது என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவின் அழிந்துவரும் மொழிகள், நாட்டின் பல்வேறு மொழிக் குடும்பங்களில் பரவி, நாடு முழுவதும் காணப்படுகின்றன:

 

மண்டலம்

 

உள்ளடக்கப்பட்டுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்

 

மொழிகளின் எண்ணிக்கை

 

ஒரு சில மொழிகள்

 

வடக்கு

சண்டிகர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட்

25

ஸ்பிதி, ஜாட், தர்மியா, கஹ்ரி, கனாஷி

வட கிழக்கு

அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா

43

ஐமோல், தங்கம், ஷெர்டுக்பென், சிங்போ, தாராவ்

மத்திய கிழக்கு

உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம்

15

புஞ்சியா, பிர்ஹோர், போண்டோ, டோட்டோ, கோரம்

மத்திய மேற்கு

குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டாமன், டையூ, தாத்ரா நாகர் ஹவேலி, கோவா

5

நிஹாலி, பரடி, பர்வாத், திவேஹி, பாலா

தெற்கு

தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா

20

தோடா, சோலிகா, ஜேனுகுறும்பா, சித்தி, உரலி

அந்தமான் & நிக்கோபார்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

9

சென்டினலீஸ், ஓங்கே, ஷோம்பென், லாமோங்சே, லூரோ

 

இந்தியாவில் உள்ள மொழிக் குடும்பங்கள்

இந்தியாவின் பல்வேறு மொழிகள், இலக்கணப் பண்புகளின் அடிப்படையில் ஐந்து மொழிக்குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 22 பட்டியலிடப்பட்ட மொழிகள் மற்றும் 99 பட்டியலிடப்படாத மொழிகளின் (99) குடும்ப வாரியான வகைப்பாடு பின்வருமாறு:

மொழிக் குடும்பங்கள்

மொழிகளின் எண்ணிக்கை

 

அதை தாய்மொழியாகப் பேசுபவர்கள்

மொத்த மக்கள் தொகையில் சதவீதம்

1. இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம்

24

79,08,76,283

76.89%

2. திராவிட மொழிக் குடும்பம்

17

21,41,72,874

20.82%

3. ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிக் குடும்பம்

14

1,14,42,029

1.11%

4. திபெத்தோ-பர்மன் மொழிக் குடும்பம்

 

66

1,03,05,026

1%

5. ஆஃப்ரோ-ஆசிய மொழிக் குடும்பம் 

1

51,728

0.01%

 

பழங்குடியினரால் பேசப்படும் மொழிகள்: வடக்கு மற்றும் வடகிழக்கில் திபெத்தோ-பர்மிய மொழிகள், மத்திய/கிழக்குப் பகுதிகளில் ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிகள், தெற்கில் திராவிடம், மற்றும் பிற இடங்களில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள். இதில் 21 இந்தோ-ஆரிய மொழிகள், ஈரானிய (2) மற்றும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பன்மொழித் தன்மையும் அழிந்துவரும் மொழிகளும்

வாசமல்லி, பள்ளியில் தமிழ் கற்று, ஆங்கிலத்திலும் புலமை பெற்ற போதிலும், தோதர் மொழியில் பல்வேறு கதைகளைக் கேட்டு வளர்ந்தார். அவர் எப்போதும் தனது கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினார். "தோதர் மொழியில் இருந்த சில புத்தகங்களின் பிரதிகள் எனக்குத் தற்செயலாகக் கிடைத்தன, அதில் ஒலிப்பு எழுத்துக்களைக் கண்டறிந்தேன்." என்று அவர் கூறினார்.

தோதர் மொழியைப் பற்றி அறிந்துகொள்வதிலும் அதைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் கொண்டு, தனது சமூகத்தினரை சந்தித்த பல்வேறு மொழியியலாளர்களுடன் வாசமல்லி பணியாற்றியுள்ளார். மிக அண்மையில், தமிழ் எழுத்துமுறையில் தோதர்  தொடக்கப்பாடத்தை உருவாக்குவதற்காக அவர் எஸ்பிபிஇஎல் குழுவுடன் இணைந்து பணியாற்றினார்.

வாசமல்லியின் பன்மொழிப் பயணம், இந்தியா முழுவதும் காணப்படும் ஒரு பரந்த போக்கைப் பிரதிபலிக்கிறது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 121.09 கோடி மொத்த மக்கள் தொகையில், சுமார் 89.59 கோடி பேர் ஒருமொழி பேசுபவர்களாகவும், 22.90 கோடி பேர் இருமொழி பேசுபவர்களாகவும், 8.60 கோடி பேர் மூன்று மொழிகளைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

இருப்பினும், பன்மொழிப் பயன்பாடு என்பது பெரும்பாலும் ஆதிக்க மொழிகளையே சார்ந்துள்ளது. ஒருமொழி பேசுபவர்களில் மிகப் பெரிய எண்ணிக்கையிலானோர் இந்தி (46.74 கோடி) பேசுகிறார்கள். அதனைத் தொடர்ந்து வங்காளம்(7.98 கோடி) மற்றும் மராத்தி (4.39 கோடி) ஆகிய முக்கிய பட்டியலிடப்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

தோதர் போன்ற அழிந்துவரும் பழங்குடி மொழிகளுக்கு இது ஒரு சவாலாக அமைகிறது: பேசுபவர்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மொழியைப் பாதுகாப்பதா அல்லது ஆதிக்க மொழிகளில் கல்வி மற்றும் வாய்ப்புகளைப் பெறுவதா என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், பழங்குடியின மாணவர்கள் தங்கள் பாரம்பரியத்தைப் பேணிக்காத்து, அதே நேரத்தில் பரந்த மொழித்திறன்களைப் பெற உதவும் வகையில், 2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையின் மும்மொழி சூத்திரத்தை ஆதரிக்கும் விதமாக, இருமொழி அகராதிகள் மற்றும் மும்மொழிக் கல்வித் தொகுதிகள் மூலம் இந்தச் சவாலை எதிர்கொள்கிறது. தாய்மொழி எழுத்துமுறை இல்லாத தோதர் மொழியை எஸ்பிபிஇஎல் ஆவணப்படுத்தியுள்ளதுடன், குழந்தைகளிடையே பரப்புவதற்காக, தொடக்க நிலையாளர்களுக்கான ஒரு அறிமுகப் புத்தகமான தோடா தொடக்கப் புத்தகத்தை தமிழ் எழுத்து முறையில் வெளியிட உள்ளது.

இதுபோன்ற எழுத்துப்பூர்வமான ஆவணங்களின் முக்கியத்துவத்தை வாசமல்லி உணர்ந்திருக்கிறார். “முன்பு போல பெரியவர்கள் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் கற்பிப்பதில்லை, மேலும் இந்த மொழியில் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. எழுத்துப்பூர்வமான பதிவுகள் இருப்பது நல்லது.” என்று அவர் கூறுகிறார். பல தோடர் இளைஞர்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதை அவர் காண்கிறார், இது அந்த மொழியின் எதிர்காலம் குறித்து அவருக்கு நம்பிக்கையை அளிக்கிறது. “அவர்களை அவர்களின் வேர்கள் மற்றும் மூகத்துடன் மீண்டும் இணைக்கும் சூழல்களை நாம் உருவாக்க வேண்டும், அதே நேரத்தில் அவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் உதவ வேண்டும்.” என்கிறார்.

அழிந்துவரும் மொழிகளை ஆவணப்படுத்துதல்

"தெய்வீக சக்தி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். நிலம், மரங்கள் மற்றும் இயற்கையைப் பாதுகாத்தால், கடவுளின் ஆசிகளைப் பெறுவோம். அதுதான் தோடர் சமூகத்தின் அடிப்படைக் கொள்கை," என்று வாசமல்லி கூறினார். ஒரு மலையை 'கோட்டாஜென்' என்று அழைப்பதாகவும், அதே பெயரைக் கொண்ட தங்கள் கடவுள் அங்கு வசிப்பதாக தோடர் மக்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

எஸ்பிபிஇஎல் -இன் விரிவான பணிகளின் மூலம் தோடரின் மொழிப் பாரம்பரியம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதில் பின்வரும் ஆவணப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு முயற்சிகள் அடங்கும்:

பதிவு செய்யும் கட்டம்: சொற்கள், வாக்கியங்கள், பாடல்கள் மற்றும் கதைகளைப் பதிவு செய்தல்.

எழுதுமுறை மற்றும் பகுப்பாய்வு: பதிவுகளை எழுத்து வடிவத்திற்கு மாற்றுதல்; மொழியின் இலக்கணம், ஒலி அமைப்புகள் மற்றும் சொல் உருவாக்கச் செயல்முறையை ஆராய்தல்; மற்றும் சொற்களஞ்சியங்களை உருவாக்குதல்.

இலக்கண உருவாக்கம்: வாக்கிய அமைப்பு விதிகள் உட்பட, மொழியின் விதிகளை விளக்கி இலக்கணத்தை எழுதுதல்.

கலாச்சார ஆவணப்படுத்தல்: வாழ்வாதாரப் பழக்கவழக்கங்களைப் பதிவு செய்தல், சடங்குகளை ஆவணப்படுத்துதல், திருவிழாக்கள் மற்றும் சமூக மரபுகளைப் பதிவு செய்தல்.

டிஜிட்டல் காப்பகப்படுத்தல்: பதிவுசெய்யப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் மெட்டாதரவை  உருவாக்கி, உலகளாவிய அணுகல் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பிற்காக அவற்றை களஞ்சியங்களில் பதிவேற்றுவதன் மூலம் மொழியின் பதிவுகளை டிஜிட்டல் முறையில் பாதுகாத்தல்.

புத்துயிரூட்டுதல்: ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கு ஆதரவளிக்கவும், மொழியில் எழுத்தறிவை ஊக்குவிக்கவும் சமூகத்தால் இயக்கப்படும் தொடக்கப் பாடநூல்களை உருவாக்குதல்.

மொழிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்

மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் (சிஐஐஎல்) இதுவரை பல்வேறு அழிந்துவரும் மொழிகளுக்காக 8 டிஜிட்டல் அகராதிகளை வெளியிட்டுள்ளது. அதன் ஆவணப்படுத்தும் பணிகளுக்காக, எஸ்பிபிஇஎல் கீழ்க்காணும் பல்வேறு வகையான மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகிறது:

  • ஒலியைப் பதிவு செய்வதற்கான உயர்தர ஒலிப்பதிவு வசதிகள்
  • காட்சி ஆவணப்படுத்தலுக்கான காணொலிப் பதிவு உபகரணங்கள்
  • மெட்டா தரவுகளை உருவாக்குவதற்கான சிறப்பு மென்பொருள்
  • பல்வேறு மொழியியல் பகுப்பாய்வு மென்பொருள்

 

டிஜிட்டல் உள்கட்டமைப்பில், தரவுகளைச் சேமித்து ஒழுங்கமைப்பதற்கான டிஜிட்டல் களஞ்சியங்களும், பதிவுசெய்யப்பட்ட பொருட்களைப் பட்டியலிடும் மெட்டாதரவை உருவாக்கும் அமைப்புகளும் அடங்கும். ஜூலை 17, 2025 அன்று தொடங்கப்பட்ட சஞ்சிகா ( https://sanchika.ciil.org/home ) என்ற இணையதளத்தில், பல்வேறு சொற்களை வெளிக்கொணர்வதற்கான ஒலி கோப்புகள் உட்பட, எஸ்பிபிஇஎல் -இன் ஆவணப்படுத்தும் பணிகள் இடம்பெற்றுள்ளன. சஞ்சிகாவில், அழிந்துவரும் பல்வேறு மொழிகளின் நூற்றுக்கணக்கான மொழி மாதிரிகளும் ஒலி கோப்புகளும் உள்ளன.

எஸ்பிபிஇஎல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள சௌரா தீவில் வசிக்கும் சனென்யோ பழங்குடியினரால் கொண்டாடப்படும் பன்றித் திருவிழாவைப் பற்றிய "பனுஹா நாட்: தி பிக் ஃபெஸ்டிவல் சௌரா" போன்ற குறும்பட மற்றும் நீண்ட ஆவணப்படங்களையும் உருவாக்குகிறது.

பழங்குடியினரின் கலாச்சாரங்களையும் மொழிகளையும் பாதுகாத்து, மேம்படுத்த இதர அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்களும், செயல்படுத்தப்படுகின்றன.

அமைச்சகம்/நிறுவனம்

திட்டம்/முன்முயற்சி

கவனம் செலுத்தப்படும் விஷயங்கள்

கலாச்சார அமைச்சகம்

நாட்டுப்புற, பழங்குடி கலைகளின்

ஆவணமயமாக்கம்

 

ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் வெளியீடுகள் மூலம் நாட்டுப்புற மற்றும் பழங்குடிக் கலைகளை ஆவணப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்.

 

தேசிய சுவடியியல் இயக்கம் (என்எம்எம்)

தேசிய சுவடியியல்  இயக்கத்தின் கீழ் சுவடியியல்கள், அரிய புத்தகங்கள் மற்றும் ஆவணக் காப்பகப் பொருட்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாதுகாத்தல்.

 

தேசிய கலாச்சார விவரணையாக்கல் திட்டம் (என்.எம்.சி.எம்)

இந்தியாவின் 4.5 லட்சம் கிராமங்கள் தொடர்பான கலைஞர்கள், கலை வடிவங்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் ஆகியவற்றின் கலாச்சாரச் சொத்துக்களை விவரணையாக்கம் செய்வதை  உள்ளடக்கிய தேசிய கலாச்சார விவரணையாக்கல் திட்டத்தைச் செயல்படுத்துதல்.

 

ஜனபதா  சம்பதா பிரிவு

ஜனபதா  சம்பதா பிரிவு, அழிந்துவரும் மரபுகள், சடங்குகள், நிகழ்த்துக் கலைகள் மற்றும் வாய்மொழி வரலாறுகள் குறித்து விரிவான களப்பணியையும், ஒலி-ஒளி ஆவணப்படுத்தலையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 

தேசிய கலாச்சார விழாக்கள்

கலாச்சார அமைச்சகம் தேசிய அளவில் கலாச்சார விழாக்களையும் ஏற்பாடு செய்கிறது. இதில், நாட்டின் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே வளமான கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, இந்தியா முழுவதிலுமிருந்து பல நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள் .

 

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின்  திட்டங்கள்

அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திரா காந்தி தேசிய கலை மையம், பாரம்பரிய நடைமுறைகளையும் மொழிகளையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு பயிலரங்குகளையும் பிராந்திய கலாச்சார நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கிறது.

சாகித்ய அகாடமி

சர்வதேச பழங்குடி மக்கள் தினம்

 அகில இந்திய பழங்குடி எழுத்தாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று உலகப் பழங்குடி மக்கள் சர்வதேச தினத்தை அகாடமி  கொண்டாடுகிறது.

 

அர்ப்பணிக்கப்பட்ட பழங்குடியினர் மையங்கள்

வாய்மொழி மற்றும் பழங்குடி இலக்கியங்களை மேலும் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக, அது அகர்தலா மற்றும் தில்லியில் பிரத்யேக மையங்களை நிறுவியுள்ளது.

 

உன்மேஷா இலக்கிய விழா

உன்மேஷா – சர்வதேச இலக்கிய விழாவின் முதல் பதிப்பில் (சிம்லா, 16-18 ஜூன் 2022), 25க்கும் மேற்பட்ட பழங்குடி மொழிகளைச் சேர்ந்த சுமார் 30-35 பழங்குடி எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

 

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவால் தொடங்கி வைக்கப்பட்ட இரண்டாவது பதிப்பில் (போபால், ஆகஸ்ட் 3-6, 2023), இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 575-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கேற்றனர்; 85 இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன; மேலும், ஏறக்குறைய 103 மொழிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன.

பழங்குடியினர் விவகாரங்கள்  அமைச்சகம்

பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவு

வளமான பழங்குடி கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவது குறித்த ஆராய்ச்சி ஆய்வுகள்/புத்தக வெளியீடுகள்/ஒலி-ஒளி ஆவணப்படங்கள் உள்ளிட்டவற்றின்  ஆவணமயமாக்கல்.

 

 

பழங்குடி வைத்தியர்களின் பழக்கவழக்கங்கள், மருத்துவத் தாவரங்கள், ஆதிவாசி மொழிகள், விவசாய முறை, நடனங்கள் மற்றும் ஓவியங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்துதல்.

 

 

பழங்குடியினர் கலாச்சார பரிமாற்ற திட்டங்கள்

 

 

பழங்குடியின மக்களின் வீரமிக்க மற்றும் தேசபக்திச் செயல்களை அங்கீகரிக்கும் வகையில், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் 10  அருங்காட்சியகங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அருங்காட்சியகங்கள், அப்பகுதியின் வளமான பழங்குடியின கலாச்சார பாரம்பரியத்தையும் காட்சிப்படுத்தும்.

 

 

பழங்குடியின மாணவர்களிடையே கற்றல் நிலையை மேம்படுத்துதல்

 

****

BR/PD/KR

 

(Features ID: 158070) आगंतुक पटल : 18
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी