PIB Backgrounder
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி
2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியுடன் வலுவான தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 2:42PM by PIB Chennai
இந்தியப் பொருளாதாரம் 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தி, சேவைத் துறைகளின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதலீடுகள் 11.9 சதவீத வளர்ச்சியையும், குடும்பங்களின் நுகர்வுச் செலவினம் 7.1 சதவீத வளர்ச்சியையும், ஏற்றுமதி 12 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளன. உலக அளவில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவியபோதிலும், உள்நாட்டுத் தேவையின் வலுவான ஆதரவுடன் இந்தியா இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியமும் இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.
2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நிலையான விலையின் அடிப்படையிலான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு விலைகளின் அடிப்படையிலான பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.88.27 லட்சம் கோடியாக உயர்ந்து 10.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சேவைத் துறை 10 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் 12.1 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இரண்டாம் நிலைத் துறை 8.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், உற்பத்தித் துறை 9.2 சதவீதம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
முதல் காலாண்டைத் தாண்டியும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து நீடிக்கிறது. 2026 ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 6.7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மூலதனப் பொருட்கள் உற்பத்தி 16.1 சதவீதமும், உள்கட்டமைப்பு பொருட்கள் உற்பத்தி 6.9 சதவீதமும் உயர்ந்துள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள், சேவைகள் ஏற்றுமதி 2026 ஜூலையில் சுமார் 80.14 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. 2026 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி 316.42 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டி, 13.16 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வங்கிகளின் கடன் வழங்கல் விகிதமும் விரிவடைந்து, வேளாண் துறைக்கான கடன் 17 சதவீதமும், தொழில்துறைக்கான கடன் 20 சதவீதமும், சேவைத் துறைக்கான கடன் 22.9 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளன.
நாட்டின் தொழில் வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கைபேசி உற்பத்தித் திட்டம், சிப் உற்பத்தி, செமிகான் 2.0 திட்டம், ரசாயனப் பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டம் போன்றவை உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய கடல்சார் ஆய்வுத் திட்டம், உயிரி எரிசக்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் நலனுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டம் (பிரதமரின் கிசான் திட்டம்) நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் பயணிக்க உதவுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305422®=3&lang=1
***
SS/PD/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2305528)
வருகையாளர் எண்ணிக்கை : 9