PIB Backgrounder
நாட்டின் உயர்கல்வித் துறையில் வளர்ச்சி நிறைந்த பத்து ஆண்டுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2026 10:15AM by PIB Chennai
உயர்கல்வி என்பது அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாகவும், 2020-ம் ஆண்டின் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத் தூணாகவும் விளங்குகிறது. இக்கொள்கையானது முழுமையான, பல்துறை சார்ந்த கற்றலை ஊக்குவித்து, நிலையான வளர்ச்சி இலக்கு 4-ன் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் கல்வி முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்கு 4 என்பது, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான தரமான கல்வியை உறுதி செய்வதிலும், அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்கும் வாய்ப்புகளை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
மத்தியக் கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் அகில இந்திய உயர்கல்விக் கணக்கெடுப்பு, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த ஒரு விரிவான தகவல் தொகுப்பை வழங்குகிறது. இந்தத் தரவுகள், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் மேற்கொள்ளப்படும் உயர்கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவுகின்றன.
இந்த அறிக்கைகளின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் உயர்கல்விக் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது:
நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2014–15-ல் 760 ஆக இருந்தது, 2023–24-ல் 1,289 ஆக உயர்ந்துள்ளது. இது 69.6% வளர்ச்சியாகும்.
கல்லூரிகளின் எண்ணிக்கை 38,498-லிருந்து 48,246 ஆக உயர்ந்துள்ளது. இது 25.3% அதிகரிப்பாகும்.
தனித்தியங்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 12,276-லிருந்து 15,221 ஆக அதிகரித்து, சுமார் 24% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சி, விரிவடைந்து வரும் கல்வி நிறுவன அடித்தளத்தையும், நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் மேம்பட்ட வாய்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. இது உயர்கல்வியின் பரவலை வலுப்படுத்தி, பரந்த பங்கேற்பை ஊக்குவித்து, இந்தியாவின் எதிர்காலத்திற்காக மேலும் சிறந்த அறிவுச் சூழலைக் கட்டமைக்கப் பங்களித்துள்ளது.
உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை கடந்த பத்து ஆண்டுகளில் சீராக உயர்ந்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் 3.42 கோடியாக இருந்த மாணவர் எண்ணிக்கை, 2023-24-ம் ஆண்டில் 4.50 கோடியாக (31.5% வளர்ச்சி) உயர்ந்துள்ளது.
2014-15 முதல் 2023-24 வரை, படிப்பு வாரியான மாணவர் சேர்க்கை விவரம்:
பிஎச்.டி (Ph.D.): 1.17 லட்சத்திலிருந்து 3.43 லட்சம் வரை (192.89% உயர்வு)
முதுகலை: 38.53 லட்சத்திலிருந்து 57.85 லட்சம் வரை (50.15% உயர்வு)
இளங்கலை: 2.71 கோடியிலிருந்து 3.45 கோடி வரை (27.27% உயர்வு)
டிப்ளமோ: 25.08 லட்சத்திலிருந்து 33.15 லட்சம் வரை (32.22% உயர்வு)
சான்றிதழ் படிப்புகள்: 1.70 லட்சத்திலிருந்து 2.08 லட்சம் வரை (22.55% உயர்வு)
ஒருங்கிணைந்த படிப்புகள்: 1.41 லட்சத்திலிருந்து 5.69 லட்சம் வரை (301.36% உயர்வு)
கடந்த பத்து ஆண்டுகளில் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 42.2% வளர்ச்சி பெற்று, 2014-15-ல் 1.57 கோடியிலிருந்து 2023-24-ல் 2.24 கோடியாக உயர்ந்துள்ளது.
உயர்கல்வியில் பாலின சமத்துவக் குறியீடு 2014-15-ம் ஆண்டில் 0.92 ஆக இருந்து, 2023-24-ம் ஆண்டில் 1.08 ஆகக் கணிசமாக மேம்பட்டுள்ளது. உயர்ந்து வரும் பாலின சமத்துவக் குறியீடு, பெண்களுக்குச் சாதகமான சமத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கை, பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் வருகை ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியுடன், இந்தியாவின் உயர்கல்வித் துறை குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், பெண்களின் பங்கேற்பு, பாலின சமத்துவம், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என அனைவரையும் உள்ளடக்கிய வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், உயர்கல்வியில் சமத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவுகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பது, இந்தியாவின் அறிவுசார் சூழல் வலுப்பெறுவதைக் காட்டுகிறது. இந்தச் சாதனைகள் அனைத்தும் தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304606®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304679)
வருகையாளர் எண்ணிக்கை : 6