பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேலோ இந்தியா கலந்துரையாடலில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு

கேலோ இந்தியா, நாடு முழுவதும் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு அற்புதமான தளமாக உருவெடுத்துள்ளது : பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 2:01PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.08.2026) காணொலிக் காட்சி மூலம் கேலோ இந்தியா கலந்துரையாடலில் பங்கேற்றார். இத்தகைய மகத்தான நிகழ்வை ஒருங்கிணைத்த அமைப்பாளர்கள், மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள், முதலமைச்சர்கள், லட்சக்கணக்கான 'மை பாரத்' தன்னார்வலர்கள் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். வரவிருக்கும் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டு சமூகத்திற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நாள், இந்தியாவின் ஒரு சிறந்த வீரரான மேஜர் தியான் சந்த்தை நினைவுகூரும் நாளாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்திய ராணுவத்தின் ஹாக்கி அணி நியூசிலாந்துக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இருதரப்பு விளையாட்டு உறவுகளை நிறுவுவதில் மேஜர் தியான் சந்தின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.

 

சமீபத்தில் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து வெளியிட்ட விளையாட்டுத் தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்ந்த பிரதமர், விளையாட்டின் மதிப்பு வெறும் பதக்கங்களை வெல்வதையும் தாண்டியது என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி, நாட்டின் இளைஞர் சக்தியை தடையின்றி ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியப் இயக்கமாக விளையாட்டை அவர் குறிப்பிட்டார்.

 

ஒலிம்பிக்கில் பல பிரிவுகளில் இந்தியா பங்கேற்காததால் நாடு பதக்க எண்ணிக்கையின் பெரும் பகுதியை இழக்கிறது என்று அவர் கூறினார். நமது பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க, எல்லா விளையாட்டுகளிலும் நாம் நிச்சயமாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

 

 அலைச்சறுக்கு, மலையேற்றம், குளிர்கால விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமான பரந்த கடற்கரைகளையும் மலைப் பகுதிகளையும் கொண்டிருந்த போதிலும், இந்தத் துறைகளில் இந்தியா உலக அளவில் இதுவரை பெரிய அளவில் பங்கேற்காமல் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் உள்ள  2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான நீண்டகால வியூகத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் தகுதிபெறக்கூடிய வீரர்களை உடனடியாக அடையாளம் கண்டு தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்ட ஒரு மாபெரும் தேசிய திறன் தேடல் தொடங்கப்படுவதை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார். கேலோ இந்தியா, நாடு முழுவதும் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு அற்புதமான தளமாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

 சிறப்பு விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள், மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை நிறுவப்பட்டு வருவதை அவர் விவரித்தார். விளையாட்டு அறிவியல், பயிற்சி, வழிகாட்டுதல் ஆகியவற்றில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக, அரசு சர்வதேச ஒத்துழைப்பைத் தீவிரமாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

இந்திய இளைஞர்களின் திறனில் முழு நம்பிக்கை தெரிவித்த பிரதமர், விளையாட்டுத் துறையிலோ அல்லது சமூகத்திலோ அவர்களின் தீவிரப் பங்களிப்பே த

நாட்டின் உண்மையான பலம் என்று கூறினார். புதிய விளையாட்டு உபகரண வடிவமைப்புகள், மேம்பட்ட விளையாட்டுத் தொழில்நுட்பம், விளையாட்டு மருத்துவம், ஊட்டச்சத்து, உளவியல் ஆலோசனை, பகுப்பாய்வு ஆகியவற்றால் விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள வாய்ப்புகளின் பெரும் விரிவாக்கத்தை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் தவறவிடக்கூடாது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303701&reg=3&lang=1

(Release ID: 2303701)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303954) வருகையாளர் எண்ணிக்கை : 10