PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இ-ஷ்ரம் இணையதளத்தின் ஐந்தாண்டுகள்

அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 2:38PM by PIB Chennai

இந்தியாவின் அமைப்புசாராதுறை தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இ-ஷ்ரம் இணையதளம் ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இத்தளம் நாட்டின் முதல் தேசிய அளவிலான தொழிலாளர் தரவுத்தளமாகச் செயல்படுகிறது. பதிவு செய்யும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் தனித்துவமான கணக்கு எண் வழங்கப்படுவதோடு, நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு, ஓய்வூதிய சேவைகள் ஆகிய அனைத்தும் ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 31 கோடிக்கும் அதிகமானோர் இத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அரசு நலத்திட்டங்கள் பயனாளிகளைத் தடையின்றிச் சென்றடைவதுடன் கொள்கை வகுப்பதற்கான தரவுகளும் எளிதாகக் கிடைக்கின்றன.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி நாடு பயணிக்கும் வேளையில் பெருவாரியான உழைக்கும் மக்கள் முன்னேறவேண்டியது மிகவும் அவசியமாகும். விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட இ-ஷ்ரம் இணையதளம் பல்வேறு நலத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட இத்தளத்தின் மூலம் தொழிலாளர்களின் தரவுகள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுவதுடன், அவசர காலங்களில் துரிதமான உதவிகளையும் வழங்க முடிகிறது.

இணையதளத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் ஒரே இடத்தில் அனைத்துச் சேவைகளும் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களில் தொழிலாளர்கள் எளிதில் இணைய முடியும். தேசியப் வேலைவாய்ப்பு சேவை மையம் மூலம் வேலைவாய்ப்புகளும், திறன் மேம்பாட்டுத் தளங்கள் மூலமாகப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப விவரங்கள் பதிவு செய்யப்படுவதுடன், மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உரிய நலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

16 வயதுக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் இத்தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். குறிப்பாகப் பெண் தொழிலாளர்களின் பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. விவசாயம், கட்டுமானம், வீட்டு வேலைகள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பயனடைந்துள்ளனர். பொது சேவை மையங்கள் மூலமாகவும் தங்களது கைபேசிகள் மூலமாகவும் எளிதாகப் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசின் இத்தகைய தொடர்ச்சியான முன்னெடுப்புகள், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வலிமை சேர்க்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303053&reg=3&lang=1

***

SS/PD/SH   

 


(வெளியீட்டு அடையாள எண்: 2303252) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali , Gujarati