PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்

प्रविष्टि तिथि: 06 JUL 2026 11:35AM by PIB Chennai

இந்தியாவில் மருத்துவ காப்பீடு, மருத்துவ ஆலோசனைகள் போன்ற அனைத்துச் சேவைகளையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கம், காகிதப் பயன்பாடற்ற முறையில், மருத்துவச் சேவைகளை பொதுமக்களுக்கு விரைவா வழங்குவதில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. தற்போது வரை சுமார் 93 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகளுடன் 104 கோடிக்கும் மேற்பட்ட மருத்துவ ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்பு:

ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான மருத்துவச் சேவைகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு அவசியமாகிறது. இதற்காக 2021 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசால் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 14 இலக்க தனித்துவ அடையாள எண் மூலம் நோயாளிகள் தங்களின் மருத்துவ வரலாறு, பரிசோதனை அறிக்கைகள், மருந்துச் சீட்டுகள், காப்பீட்டு விவரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். நாடெங்கிலும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள் இந்த ஒற்றை தளத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன. நோயாளிகளின் முன் அனுமதியுடன் மட்டுமே அவர்களின் மருத்துவ ஆவணங்கள் பிற மருத்துவமனைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்பதால் தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 

ஆரோக்கிய சேது 2.0:

கோவிட்-19 பாதிப்பு கண்காணிப்புச் செயலியாக இருந்த ஆரோக்கிய சேது, தற்போது முழுமையான பொது சுகாதாரச் செயலியாக மேம்படுத்தப்பட்டு ஜூன் 29, 2026 அன்று மத்திய சுகாதார அமைச்சரால் ஆரோக்கிய சேது 2.0 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய செயலியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனர்கள் தங்களின் உடல்நலம் சார்ந்த நடவடிக்கைகள், விவரங்களைக் கண்காணிக்க முடியும். அத்துடன், அருகில் உள்ள மருத்துவமனைகளைக் கண்டறிதல், ரத்த வங்கிகளில் உள்ள ரத்தக் கையிருப்பு விவரங்களை உடனுக்குடன் அறிதல், தொலைதூர மருத்துவ ஆலோசனைகளைப் பெறுதல் போன்ற வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட கியூஆர் கோடு அடிப்படையிலான வசதி மூலம் பதிவுக்கான காத்திருப்பு நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து வெறும் 2 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. 

தேசிய சுகாதாரக் காப்பீட்டு கோரிக்கைகள் பரிமாற்றக் கட்டமைப்பு:

மருத்துவக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்க்க தேசிய சுகாதாரக் கோரிக்கைகள் பரிமாற்றத் தளம் டிஜிட்டல் இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது. காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், பயனாளிகள் ஆகியோரை இணைக்கும் இத்தளத்தின் மூலம் காப்பீட்டு ஒப்புதல் பெறுதல், மருத்துவமனை நடைமுறைகளை நிறைவு செய்வதற்கான நேரம் ஆகியன பெருமளவில் குறைகின்றன. தற்போது இத்தளத்தில் 44,000 மருத்துவமனைகளும் 83 காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்துள்ளன. 

டிஜிட்டல் சுகாதார ஊக்குவிப்புத் திட்டம்:

அரசு, தனியார் துறையைச் சேர்ந்த சிறிய மருத்துவமனைகள், ஆய்வகங்கள், டிஜிட்டல் தீர்வு வழங்கும் நிறுவனங்கள் இக்கட்டமைப்பில் இணைவதை ஊக்குவிக்க மத்திய அரசு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. மருத்துவ ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இதுவரை மருத்துவமனைகளுக்கு 107 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய கிளினிக்குகள் தங்களின் செயல்பாடுகளை எளிதாக்க ஏதுவாக சி-டாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இ-சுஷ்ருத் மருத்துவமனை மேலாண்மைத் தகவல் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் பொது சுகாதாரத் திட்டங்களைச் சிறப்பாக வடிவமைக்கவும், காகிதமில்லா டிஜிட்டல் முறைகளின் மூலம் எளிதான மருத்துவ வசதிகளை சாமானியர்களுக்கும் கொண்டு சேர்க்கவும் இத்தகு டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்பு பெரிதும் துணை நிற்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281466&reg=3&lang=1

***

SS/PD/RJ


(रिलीज़ आईडी: 2281638) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati