பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இத்தாலியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட பத்திரிகை செய்தி

प्रविष्टि तिथि: 20 MAY 2026 7:37PM by PIB Chennai

மதிப்பிற்குரிய பிரதமர் திருமதி மெலோனி அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடகத் துறை நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்!

போன்ஜியோர்னோ!

எனக்கும் எனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்காகப் பிரதமர் திருமதி மெலோனி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரோம் நகரம் உலகம் முழுவதும் 'நிலையான நகரம்'  என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில், எனது மக்களவைத் தொகுதியான வாரணாசியும் ஒரு நிலையான மற்றும் காலத்தால் அழியாத நகரமாகக் கருதப்படுகிறது. இரு பழம்பெரும் நாகரிகங்கள் ஒன்றிணையும் போது, அவற்றுக்கு இடையேயான உரையாடல் வெறும் நிகழ்ச்சி நிரலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது வரலாற்றின் ஆழத்தையும், எதிர்காலத்திற்கான பார்வையையும், நட்பின் இயல்பான நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கிறது.

நண்பர்களே,

கடந்த சுமார் மூன்றரை ஆண்டுகளில், பிரதமர் திருமதி மெலோனி அவர்களைச் சந்திக்க எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இது இந்தியா மற்றும் இத்தாலிக்கு இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பையும் புரிதலையும் காட்டுகிறது. அவரது தலைமையின் கீழ், நமது உறவுகள் ஒரு புதிய வேகத்தையும், புதிய திசையையும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் பெற்றுள்ளன. நமது உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு 'சிறப்பு உத்திசார் ஓத்துழைப்பை' அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

இன்றைய கூட்டத்தில், நமது எதிர்காலக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டோம். இந்தியா-இத்தாலி கூட்டு உத்திசார் செயல் திட்டம் 2025-29 நமது கூட்டாண்மைக்கு ஒரு நடைமுறை மற்றும் எதிர்கால நோக்குடன் கூடிய கட்டமைப்பை வழங்குகிறது, மேலும் இதில் நாம் காலக்கெடுவுக்குள் முன்னேறி வருகிறோம். நமது கூட்டு முயற்சிகள் மூலம், இருதரப்பு வர்த்தகம் 20 பில்லியன் யூரோக்கள் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் 800க்கும் மேற்பட்ட இத்தாலிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தீவிர பங்காளிகளாக மாறி வருகின்றன. இன்று நடைபெறும் வணிக மன்றம், இரு நாட்டு வணிகத் தலைவர்களிடையே உள்ள ஒரு புதிய உற்சாகம், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் பெரிய லட்சியத்தை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

இத்தாலி வடிவமைப்பு மற்றும் துல்லியமான தயாரிப்புகளுக்கு உலகளவில் அறியப்படுகிறது. இந்தியா அதன் பிரம்மாண்டம், திறமை மற்றும் குறைந்த விலை கண்டுபிடிப்புகளுக்கான மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, "இந்தியா மற்றும் இத்தாலியில் வடிவமைத்து உருவாக்குவோம், உலகிற்கு வழங்குவோம்" என்ற கொள்கையின் அடிப்படையில் நாம் முன்னோக்கிச் செல்வோம். ஆடை வடிவமைப்பு முதல் நிதித் தொழில்நுட்பம் வரையும், தோல் பொருட்கள் முதல் தளவாடங்கள் வரையும், மற்றும் போக்குவரத்து முதல் உற்பத்தித் துறை வரையும், ஒவ்வொரு துறையிலும் நமது பலத்தை ஒன்றிணைத்து ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக உழைப்போம்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைவதற்காக இத்தாலி வழங்கிய ஆதரவிற்குப் பிரதமர் திருமதி மெலோனி அவர்களுக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு தரப்பு வணிகச் சமூகங்களும் இதிலிருந்து முழுமையாகப் பயன்பெறும் வகையில், இந்த ஒப்பந்தத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செயல்படுத்துவதை நோக்கி நாம் இணைந்து செயல்படுவோம்.

நண்பர்களே,

தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும்தான் நமது கூட்டு செயல்பாடுகளின் உந்துசக்தி ஆகும். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், விண்வெளி மற்றும் சிவில் அணுசக்தி போன்ற துறைகளில் நமக்கிடையே ஒத்துழைப்பதற்கான அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. இரு நாடுகளின் புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில்துறைகளை இணைப்பதற்காக, இந்தியா-இத்தாலி கண்டுபிடிப்பு மையத்தை நிறுவுவதற்கான பணிகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

நண்பர்களே,

பாதுகாப்புத் துறைகளில் உள்ள நெருக்கமான ஒத்துழைப்பு, நமக்கிடையே உள்ள ஆழமான பரஸ்பர நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். நமது ஆயுதப் படைகளுக்கு இடையே மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையேயும் ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது. நமது பாதுகாப்புத் தொழில்முறை வழிகாட்டி வரைபடம், கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது. கடல்சார் வல்லரசுகள் என்ற முறையில், போக்குவரத்து இணைப்புத் துறையில் இந்தியா மற்றும் இத்தாலி இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பது மிகவும் இயல்பானதாகும். கப்பல் போக்குவரத்து, துறைமுக நவீனமயமாக்கல், தளவாடங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றில் நாம் இணைந்து செயல்படுவோம்.

மூன்றாம் தரப்பு நாடுகளுக்கும் இருதரப்பிற்கும் பயனளிக்கும் நமது கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த திசையில் முன்னோக்கிச் செல்லும் வகையில், ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட திட்டங்களில் இணைந்து பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

நண்பர்களே,

பயங்கரவாதம் என்பது மனிதகுலத்திற்கு ஒரு கடுமையான சவால் என்பதில் இந்தியாவும் இத்தாலியும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. பயங்கரவாத நிதி உதவிக்கு எதிரான நமது கூட்டு முயற்சிகள் உலகிற்கு ஒரு முக்கியமான முன்மாதிரியை அமைத்துக் கொடுத்துள்ளன. பொறுப்புள்ள ஜனநாயக நாடுகள் பயங்கரவாதத்தை வெறுமனே கண்டிப்பதுடன் நின்றுவிடாமல், அதன் நிதிப் பிணையங்களை தகர்ப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கின்றன என்ற தெளிவான செய்தியை இந்தியாவும் இத்தாலியும் தெரிவித்துள்ளன. உக்ரைன், மேற்கு ஆசியா மற்றும் பிற உலகளாவிய பதற்றங்கள் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அனைத்துப் பிரச்சினைகளும் உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

நண்பர்களே,

நமது வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளின் பிரதிபலிப்பை இரு நாடுகளிலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் காண முடியும். இந்தியக் கலை, யோகா, ஆயுர்வேதம் மற்றும் உணவு வகைகள் மீதான ஆர்வம் இத்தாலியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமஸ்கிருதம் மற்றும் லத்தீன் போன்ற பழமையான மொழிகள் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். நமது உறவு என்பது வெறும் ராஜதந்திர உறவு மட்டுமல்ல, அது ஒரு பொதுவான பாரம்பரியத்தைக் கொண்டது என்பதையும் இது காட்டுகிறது.

அடுத்த ஆண்டு, இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான உறவுகளின் 80-வது ஆண்டையொட்டி, கலாச்சார ஆண்டு கொண்டாடப்படும். இது நமது கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இத்தாலியில் வாழும் ஏராளமான இந்திய வம்சாவளி மக்கள், நமது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு துடிப்பான இணைப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் மீது காட்டும் அக்கறை மற்றும் ஆதரவிற்காகப் பிரதமர் திருமதி மெலோனி அவர்களுக்கும் இத்தாலி மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான 'குடிபெயர்வு மற்றும் எளிதான பயணத்திற்கான கூட்டாண்மை ஒப்பந்தம்', இரு நாடுகளுக்கும் இடையேயான மக்கள் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது.

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே,

இன்றைய மிகச் சிறந்த பயனுள்ள கூட்டத்திற்காகவும் உங்களது நட்பிற்காகவும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பில், உங்களுக்கு மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

மிக்க நன்றி.

கிராட்ஸியே மில்லே!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் ஆற்றப்பட்டது.

 

(Release ID:2263407)

 

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2280695) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam