மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரிக்ஸ் வேளாண் பணிக்குழுவில் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாடு குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 7:26PM by PIB Chennai
இந்தியாவின் தலைமையில், பிரிக்ஸ் வேளாண் பணிக்குழுவின் கீழ், 'மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாடு' குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்தியா, பிரேசில், சீனா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உலகளாவிய மீன்வளர்ப்பு உற்பத்தியில் 70 சதவீதமும், மீன் பிடித்தலில் சுமார் 30 சதவீதமும் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பாக உள்ளது. எனவே, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய, தொழில்நுட்ப பரிமாற்றம், இனப்பெருக்க முறைகள், கடல்பாசி வளர்ப்பு மற்றும் மரபணு மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் சார்பாகப் பேசிய அதிகாரிகள், நவீன தொழில்நுட்பங்களான ஏஐ, ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் மீன்வளத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் குறித்து விளக்கினர். மீன்வளத் துறையில் நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம், மேற்கத்திய நாடுகளின் சான்றிதழ் முறைகளைச் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266779®=3&lang=1
***
TV/VK/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266854)
வருகையாளர் எண்ணிக்கை : 13