PIB Backgrounder
மிகச்சிறந்த உணவு இனிப்பூட்டி
இந்தியாவில் வெல்ல உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAY 2026 10:48AM by PIB Chennai
உலக அளவில் உற்பத்தியில் முதலிடம் வகித்து இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் மிகச்சிறந்த உணவு இனிப்பூட்டியாக வெல்லம் திகழ்கிறது.
கரும்புச் சாற்றைக் காய்ச்சி, எந்தவித ரசாயனங்களும் சேர்க்காமல் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் வெல்லம், உலகளவில் ஒரு சிறந்த இயற்கை இனிப்பூட்டியாக உருவெடுத்துள்ளது. இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது "மருத்துவச் சர்க்கரை" என்றும், ஊட்டச்சத்துக்களில் தேனுக்கு இணையானதாகவும் போற்றப்படுகிறது. உலகளாவிய வெல்ல உற்பத்தியில் இந்தியா 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டு, உலகளவில் முதன்மை உற்பத்தியாளராகத் திகழ்கிறது.
இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தில் வெல்லம் உற்பத்தித் துறை ஒரு முக்கியத் தூணாக விளங்குகிறது. நாட்டின் மொத்த கரும்பு உற்பத்தியில் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை வெல்லம் தயாரிப்பிற்காகவே பயன்படுத்தப்படுகிறது. பரவலாக்கப்பட்ட செயலாக்கம், குறைந்த போக்குவரத்துச் செலவு மற்றும் சிறு அளவிலான குடிசைத் தொழில்களைக் கொண்ட இத்துறை, நேரடியாக சுமார் 25 லட்சம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரித்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2024-25 ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கரும்பு உற்பத்தி 444.9 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசம் 48.5 சதவீத பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 24.1 சதவீதத்துடனும், கர்நாடகா 10.5 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவை தவிர குஜராத், தமிழ்நாடு, பீகார், உத்தராகண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களும் கரும்பு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலகளவில் ரசாயனங்கள் இல்லாத ஆரோக்கியமான இயற்கை இனிப்பூட்டிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் வெல்லம் மற்றும் அது சார்ந்த இனிப்புப் பண்டங்களின் ஏற்றுமதி மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு தசாப்த கால வளர்ச்சியைப் பார்க்கும்போது, 2015-16 -ம் ஆண்டில் 197 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பு, 2024-25- ம் ஆண்டில் 406.8 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து 106.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதி அளவு 292.8 மில்லியன் டன்னிலிருந்து 471.9 மில்லியன் டன்னாக, அதாவது 61.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய வெல்லத்தை பெருமளவில் இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாக இந்தோனேசியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, நேபாளம் ஆகிய நாடுகள் விளங்குகின்றன.
இந்த ஏற்றுமதி வளர்ச்சி நடப்பு 2025-26 நிதியாண்டிலும் மிக வலுவாகத் தொடர்ந்து வருகிறது. முந்தைய ஆண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் ஏற்றுமதி அளவு 386.2 மில்லியன் டன்னிலிருந்து 450.1 மில்லியன் டன்னாக, அதாவது 16.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், இதன் ஏற்றுமதி மதிப்பும் 331.4 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 384.4 மில்லியன் அமெரிக்க டாலராக, சுமார் 15.9 சதவீதம் உயர்ந்து சாதனை படைத்துள்ளது. நுகர்வோரின் மாறிவரும் ஆரோக்கியமான வாழ்வியல் தேர்வுகள் காரணமாக, இந்திய வெல்லத்திற்கான உலகளாவிய சந்தை வரும் காலங்களில் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261676®=3&lang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261690)
வருகையாளர் எண்ணிக்கை : 14