குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
திரிபுரா பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்
நாட்டின் நலனுக்காக தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் : மாணவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் அறிவுரை
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2026 3:02PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (08.03.2026) அகர்தலாவில் உள்ள திரிபுரா பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். இளைஞர்கள் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் போதைப்பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், நாட்டின் நலனுக்காக தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி வேகமாக முன்னேறி வரும் தருணத்தில் இன்றைய இளைஞர்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துரைத்த அவர், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு அது அவசியம் என்றும் ஆனால், அதை நேர்மறையாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை நிறைந்த மாநிலம் திரிபுரா என்று அவர் கூறினார். திரிபுர சுந்தரி கோயிலுக்கு தாம் சென்றதைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், இப்பகுதியின் ஆழமான ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவத்தைக் எடுத்துரைத்தார். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை அவர் பாராட்டினார்.
வடகிழக்கு பகுதியை நாட்டின் பிற பகுதிகளுடன் ஒருங்கிணைப்பதில் போக்குவரத்து இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த துணைத் தலைவர், கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் ரயில், சாலை, விமான இணைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பில் வடகிழக்குப் பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறினார். இந்த முன்னேற்றங்கள், "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்ற உண்மையான உணர்வில், இப்பகுதி மக்களை நாட்டின் பிற பகுதிகளுடன் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி நல்லு, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா, திரிபுராவின் தலைமைச் செயலாளர் திரு ஜிதேந்திர குமார் சின்ஹா, திரிபுரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு ஷியாமல் தாஸ், பல்கலைக்கழக பதிவாளர் திரு சமீர் குமார் சில், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர், பட்டம் பெறும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236568®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2236623)
வருகையாளர் எண்ணிக்கை : 17