பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பின்லாந்து அதிபரின் அரசுமுறைப் பயணம் குறித்த இந்திய – பின்லாந்து கூட்டறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 8:03PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்லாந்து அதிபர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்டப், 2026 மார்ச் 4-7 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்லாந்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திருமிகு சாரி முல்தாலா, வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மத்தியாஸ் மார்டினென் மற்றும் அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன் வந்துள்ளது.

மார்ச் 5, 2026 அன்று, அதிபர் திரு ஸ்டப்பை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வரவேற்றார். பிரதமர் திரு மோடியும் அதிபரும் இருதரப்பு சந்திப்பின் போது விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். முக்கிய விருந்தினரை கவுரவிக்கும் வகையில் பிரதமர் திரு மோடி மதிய விருந்து அளித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பின்லாந்து அதிபர் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த  மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிச் செயல்படுவது மிக முக்கியம் என்ற கருத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

பரஸ்பர மரியாதை, ஜனநாயக மாண்புகள் மற்றும் சட்டத்தின் விதிகள், உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச சட்டத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நீடித்த நட்பை தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் முக்கியத்துவத்தையும், காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவற்றின் சவால்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

ஜனவரி 27, 2026 அன்று நடைபெற்ற இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை வரவேற்ற தலைவர்கள், இந்திய-பின்லாந்து இருதரப்பு உறவு உட்பட, அதிகரித்த வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான பரஸ்பர நன்மை பயக்கும் மகத்தான வாய்ப்புகளைப்  பாராட்டினர்.

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்டுள்ள பரவலான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்தியப் பிரதமரும் பின்லாந்து அதிபரும், வணிக சமூகத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்தச் சூழலில், இந்திய-பின்லாந்து இடையேயான தற்போதைய வர்த்தகத்தின் மதிப்பை  2030 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

மேம்பட்ட தொழில்நுட்பத் துறையில், விண்வெளி தொழில்நுட்பம் என்பது இந்திய மற்றும் பின்லாந்து நிறுவனங்களுக்கிடையில் தனியார் துறை ஈடுபாட்டின் தீவிரமான மற்றும் கணிசமான எதிர்கால ஆற்றலுடன் கூடிய ஒத்துழைப்பின் வளர்ந்து வரும் பகுதியாகும் என்றும் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

குறைந்த கார்பன் மாற்றம், எரிசக்தி திறன், உயிரி எரிபொருள்கள், நவீன தொகுப்புகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் சுத்தமான எரிசக்தித் தீர்வுகளை முன்னேற்றுவதில் உள்ள பெரும் ஆற்றலை தலைவர்கள்  அடிக்கோடிட்டுக் காட்டினர். கூடுதலாக, சுழற்சிப் பொருளாதாரம், நிலையான நீர் மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையம் அவர்கள் எடுத்துரைத்தனர்.

டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மையில் இந்திய-பின்லாந்து உத்திசார் கூட்டாண்மையின் கீழ் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல, முன்னுரிமைப் பகுதிகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த வரையறை உட்பட, எதிர்காலம் சார்ந்த மற்றும் உறுதியான செயல்திட்டத்தை உருவாக்கி, முன்னேற்றம் குறித்து  இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு அறிக்கை அளிக்குமாறு அந்தந்த டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மை பணிக்குழுக்களைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235725&reg=3&lang=1

***

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235838) வருகையாளர் எண்ணிக்கை : 59