குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைக்க அச்சமின்றி உண்மையை எழுதுங்கள் இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தின் 57-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 8:32PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தின் (ஐஐஎம்சி) 57வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பேனாவின் சக்தியை வலியுறுத்தி, கருத்து உருவாக்குபவர்கள் உண்மையை அடிப்படையாகக் கொண்டு சரியான மற்றும் நேர்மறையான கருத்தை வடிவமைப்பதன் மூலம் தேசத்தை வழிநடத்த முடியும் என்று கூறினார். "அச்சமின்றி உண்மையை எழுதுங்கள், வளர்ச்சியடைந்த பாரதத்தை உங்களால் உருவாக்க முடியும்" என்று மாணவர்களிடம் அவர் கூறினார். மதிப்பீடுகள் குறுக்குவழிகளால் ஈர்க்கப்படாமல், அவர்களது எழுத்தின் சரியான தன்மை மற்றும் நேர்மையால் இயங்க வேண்டும் என்று அவர் மாணவர்களை வலியுறுத்தினார். தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான திரு ஏ.என். சிவராமன் மீதான தனது அபிமானத்தை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், சமூக உணர்வுள்ள மற்றும் அறிவார்ந்த தகவல்களை வழங்கும் பத்திரிகைத் துறையால் தலைவர்களை வடிவமைக்கவும், உருவாக்கவும் முடியும் என்றார்.
டிஜிட்டல் சகாப்தத்தின் சவால்களை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், சமூக ஊடகங்கள் வெளிப்பாடுகளின் வழிகளை விரிவுபடுத்தியுள்ள நிலையில், சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தவறான தகவல்களையும் பெருக்கியுள்ளன என்று குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூரை மேற்கோள் காட்டி, அடிப்படையில் தேசிய நலன்களைப் பாதுகாப்பதுடன், டிஜிட்டல் தளங்களில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் புனையப்பட்ட கதைகளுக்கு எதிராகவும் முக்கியமான போராட்டம் நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். பத்திரிகையாளர்கள் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தின் முகவர்களாகச் செயல்பட வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது ஆயுதப்படைகளின் மன உறுதியை அவர்களின் எழுத்துக்கள் ஆதரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதையும், டிஜிட்டல் சூழலியல் விரிவடைந்து வருவதையும், உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், பிளவுகளைக் குறைப்பதிலும், அறிவார்ந்த குடியுரிமையை வளர்ப்பதிலும் தொடர்பாளர்கள் ஒரு வரையறுக்கும் பங்கை வகிப்பார்கள் என்றார். பொருளாதார மேம்பாடு, புதுமை மற்றும் தேசிய முன்னேற்றம் பற்றிய நேர்மறையான செய்திகளுக்கு ஊடகங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொழில்நுட்பமும் தளங்களும் தொடர்ந்து வளர்ச்சியடையும் அதே வேளையில், பத்திரிகையின் முக்கிய மதிப்புகளான துல்லியம், நியாயத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை சமரசமற்றதாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். மாணவர்கள் உண்மைக்கான தங்கள் உறுதிப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்,
ஐஐஎம்சியின் புதிய கல்விக் கட்டிடம் மற்றும் விடுதிக்கும் குடியரசு துணைத்தலைவர் அடிக்கல் நாட்டினார். புதிய வசதிகள் டிஜிட்டல் ஆய்வகங்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல், இதழியல் மற்றும் நவீன ஸ்டுடியோக்களை வலுப்படுத்துவதுடன், மாணவர்கள் புதுமைகளை மேற்கொள்ள உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 2233710)
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233796)
வருகையாளர் எண்ணிக்கை : 63