எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் இந்தியா மற்றும் பிரேசில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 2:35PM by PIB Chennai

மத்திய எஃகு அமைச்சகமும், பிரேசிலின் சுரங்கம் மற்றும் எரிசக்தி அமைச்சகமும் எஃகுத் துறைக்குத் தேவையான சுரங்கம் மற்றும் தாதுக்கள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர்  லூயிஸ் இனாகியோ லூலா டா சில்வா ஆகியோரின் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், எஃகு உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களின் நம்பகமான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, எஃகு மதிப்புச் சங்கிலி முழுவதும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு நிறுவன கட்டமைப்பை வழங்குகிறது.

இந்த ஒப்பந்தம் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தும்:

 •    உருக்குத் துறையில் ஆய்வு, சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான முதலீட்டை ஈர்ப்பது

•     கனிமங்களுக்கான பதப்படுத்தும் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பங்கள்

•     ஆய்வு மற்றும் சுரங்கத் தொழிலில் தானியங்கி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடு

•     ஆய்வு செயல்முறைகளை மேம்படுத்துவதற்காக புவி அறிவியல் தரவுப் பகுப்பாய்வில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

•     கனிமப் பிரித்தெடுத்தல், பதப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் சிறந்த நடைமுறைகள்

பிரேசில் உலகின் முன்னணி இரும்புத் தாது உற்பத்தியாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் மாங்கனீஸ், நிக்கல் மற்றும் நயோபியம் உள்ளிட்ட எஃகு உற்பத்திக்கு முக்கியமான தாதுக்களின் குறிப்பிடத்தக்க இருப்புகளைக் கொண்டுள்ளது. பிரேசிலுடனான மேம்பட்ட ஒத்துழைப்பு, இந்தியாவின் எஃகுத் துறையின் நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைக்கத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான அணுகலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தற்போது 218 மில்லியன் டன் எஃகு உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்துறை வளர்ச்சியால் தூண்டப்பட்ட அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய, இந்திய நிறுவனங்கள் எஃகு உற்பத்தித் திறனில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், எஃகு உற்பத்திக்குத் தேவையான கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், கனிமச் செயலாக்கம், செறிவூட்டல், மறுசுழற்சி மற்றும் தரவு சார்ந்த ஆய்வு ஆகியவற்றில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை எளிதில் அணுகுவதற்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முக்கிய படியாகும். இந்தக் கூட்டாண்மை, எஃகு உற்பத்தி உள்ளீடுகளை திறமையாகத் தயாரிக்கவும், எஃகு மதிப்புச் சங்கிலி முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளைச் சாத்தியமாக்கவும், இந்தியா-பிரேசில் எஃகு விநியோகச் சங்கிலியின் மீள்தன்மையையும் நிலைத்தன்மையையும் வலுப்படுத்தவும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231166&reg=3&lang=1

***

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231376) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam