தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அமராவதி குவாண்டம் வேலி திட்டத்தில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச அரசுடன் சி டாட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
18 NOV 2025 2:06PM by PIB Chennai
அமராவதி குவாண்டம் வேலி திட்டத்தில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச அரசுடன், சி டாட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சி டாட் நிறுவனம் என்பது நாட்டின் உத்திசார்ந்த சமூகப் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்வதற்காக தொலைத்தொடர்புத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது, தொலைத்தொடர்பு சம்பந்தமான தீர்வுகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்துவது ஆகியவற்றில் ஈடுபடும் முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும். இந்த நிறுவனம் முதன்மையான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் ஏற்கனவே குவாண்டம் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவியுள்ளது.
அமராவதி குவாண்டம் வேலி அமைப்பதன் மூலம் இந்தியாவின் குவாண்டம் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் மிகப் பெரும் முயற்சியை ஆந்திரப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது. அமராவதியில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் மாநில அளவிலான கூட்டாண்மைகள், அடிப்படைக் கட்டமைப்பு, பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. கணினி வன்பொருள் தயாரிப்பு, மென்பொருள் உருவாக்கம், திறன் வளர்ப்பு, ஆராய்ச்சி மேன்மை ஆகியவற்றை ஒருங்கிணைத்து குவாண்டம் சூழல் அமைப்பை உருவாக்குவது அமராவதி குவாண்டம் வேலித் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி டாட் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக துணைத்தலைவர் டாக்டர் பங்கஜ் குமார் தலேலா கையெழுத்திட்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சியில், ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு நாரா லோகேஷ், தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் திரு பாஸ்கர் கட்டம்நேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191157
***
SS/SMB/KPG/SH
(Release ID: 2191380)
Visitor Counter : 4