பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின மக்களுக்கான வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்வதில் உள்ள இடைவெளிகளை களைவதற்கான நடவடிக்கைகள்
Posted On:
19 SEP 2025 1:21PM by PIB Chennai
நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியின மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளில் உள்ள இடைவெளிகளை களையும் வகையில், மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் புதுதில்லியில் பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
பழங்குடியின சமுதாயத்தின் வளர்ச்சிக்கான செயல் திட்டத்தின் கீழ், கல்வி, சுகாதாரம், விவசாயம், பாசனம், சாலைகள், வீட்டுவசதி, மின்சாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு உள்ளிட்ட 41 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 4.3 சதவீதம் முதல் 17.5 சதவீதம் வரை குறிப்பிட்ட அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நித்தி ஆயோக்கின் வழிகாட்டுதல் நெறிமுறையின்படி, பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்துவது மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பல்வேறு சவால்கள் குறித்து விரிவாக விவாதிப்பதற்கான தளமாக இந்தப் பயிலரங்கு அமைந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியின மக்களின் நலனுக்கான திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 2024 நவம்பர் 15-ம் தேதி முதல் 2025 நவம்பர் 15-ம் தேதி வரை பழங்குடியின கௌரவ ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளதுடன் பழங்குடியின கர்மயோகி இயக்கத்தையும் அந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது.
---
SS/SV/KPG/KR/SH
(Release ID: 2168803)