சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகளுடன் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது

Posted On: 05 JUL 2025 5:43PM by PIB Chennai

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, மத்திய காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவர் திரு ராஜேஷ் வர்மா தலைமையில், ஆணையத்தின் உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் முன்னிலையில், ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் 2025 ஜூலை 03 அன்று சண்டிகரில் நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

ஹரியானா மாநில அரசு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, ​​அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின்படி, 2025-ம் ஆண்டில் பயிர்க்கழிவுகள் எரிப்பை தடுப்பது, செங்கல் சூளைகளில் பரிந்துரைக்கப்பட்ட பொருள்களை மட்டும் பயன்படுத்துதல், அனல் மின் நிலையங்கள் பரிந்துரைக்கப்பட்ட உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக செயல்படுதல் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 பஞ்சாப் மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் இதே அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, ஆணையத்தால் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது. இரு மாநில அரசுகளும் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளை ஆணையம் பாராட்டியது. குறிப்பாக குளிர்காலம் நெருங்கி வருவதால், இப்பகுதியில் காற்றின் தரத்தில் ஏற்படும் சூழல்கள் குறித்த மாற்றங்களையும் அது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்களையும் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டது.

****

 

(Release ID: 2142501)

AD/TS/PLM/SG

 

 


(Release ID: 2142520)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi