சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மாதிரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
Posted On:
29 JUN 2025 5:20PM by PIB Chennai
மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், வேளாண் காடுகள் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 'விவசாய நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான மாதிரி விதிகளை' வெளியிட்டுள்ளது. கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மரங்களின் பரப்பை அதிகரித்தல், நீர் பாதுகாப்பு, பருவநிலை மீள்தன்மைக்கு பங்களித்தல், இயற்கைக் காடுகள் மீதான அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல நன்மைகளை வேளாண் காடுகள் வழங்குகின்றன.
வேளாண் காடுகள் தொடர்பான நிலங்களைப் பதிவு செய்வதற்கும், மரங்களை வெட்டுதல், போக்குவரத்தை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை வழங்குவதன் மூலம் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதே மாதிரி விதிகளின் நோக்கமாகும். இந்த முயற்சி விவசாயிகள் மற்றும் பிற தரப்பினர் வேளாண் காடுகள் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கும் என்றும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மரம் சார்ந்த விவசாய முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் மாதிரி விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேளாண் காடுகளின் மூலம் உள்நாட்டு மர உற்பத்தியை ஊக்குவிக்கும் அணுகுமுறை தேவை-விநியோக இடைவெளியை குறைக்கும். உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு மர அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் இது உதவும்.
மரம் சார்ந்த தொழில்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள்- 2016-ன் கீழ் நிறுவப்பட்ட மாநில அளவிலான குழு இந்த மாதிரி விதிகளை செயல்படுத்துவதற்குப் பொறுப்பான அமைப்பாகும். மரம் வெட்டுதல் மற்றும் மர போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம், வணிக ரீதியாக மதிப்புமிக்க மர வகைகளின் உற்பத்தியை விவசாய நிலங்களில் மேம்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுவதே இதன் பங்காகும்.
மாதிரி விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் தோட்டங்களை தேசிய மர மேலாண்மை அமைப்பான என்டிஎம்எஸ்-ன் (NTMS) போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. நில உரிமைத் தகவல், பண்ணையின் இருப்பிடம், இனங்கள், தோட்ட காலம் போன்ற அடிப்படை தோட்டத் தரவைச் சமர்ப்பிப்பது இதில் அடங்கும். விண்ணப்பதாரர்கள் தோட்டத் தகவலை அவ்வப்போது புதுப்பித்து அதன் தன்மையை உறுதிசெய்ய தோட்டத்தின் புவிசார் அம்சங்கள் கொண்ட புகைப்படங்களைப் பதிவேற்றலாம். பதிவுசெய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து மரங்களை வெட்ட விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய மர மேலாண்மை அமைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சரிபார்ப்பு நிறுவனங்கள் கள ஆய்வுகளை மேற்கொள்ளும். அவர்களின் சரிபார்ப்பு அறிக்கைகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் மரம் வெட்ட அனுமதிகள் வழங்கப்படும். பிரதேச வன அதிகாரிகள் இந்த நிறுவனங்களின் செயல்திறனை அவ்வப்போது மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு மூலம் ஆய்வு செய்வார்கள்.
வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், தேவையற்ற நடைமுறை தடைகளில் இருந்து விவசாயிகளைக் காக்கவும் இந்த மாதிரி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதிரி விதிகளை ஆராய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதைப் பரிசீலிக்குமாறு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
விவசாய நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான மாதிரி விதிகளை இந்த இணையதள இணைப்பில் காணலாம்:- https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc2025629578501.pdf
*****
(Release ID: 2140599)
AD/TS/PLM/RJ
(Release ID: 2140615)