பாதுகாப்பு அமைச்சகம்
தென்மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு செயல்பாடுகள் குறித்த பயிற்சியை ஐ.என்.எஸ். டெக் போர்க்கப்பல், மொரிஷியஸின் போர்ட் லூயிஸ் துறைமுகத்தில் நிறைவு செய்தது
Posted On:
23 JUN 2025 3:53PM by PIB Chennai
மேற்கு கடற்படைப் பிரிவின் முன்னணி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். டெக் ஜூன் 22-ம் தேதி மொரிஷியஸின் போர்ட் லூயிஸ் துறைமுகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்தது. தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் செயல்பாட்டுப் பணியமர்த்தலின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்தது. இந்தியா - மொரிஷியஸ் நாடுகளிடையே கடல்சார் ஒத்துழைப்பு, தொழில்முறை, சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இந்தப் பயணம் இருந்தது.
மொரிஷியஸின் தேசிய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் இணைந்து அந்நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் ஒருங்கிணைந்த கண்காணிப்பு பயிற்சியை ஐ.என்.எஸ். டெக் போர்க்கப்பல் மேற்கொண்டது. கடல்சார் வளங்களை பாதுகாப்பது, சட்ட விரோத மீன்பிடித்தலை தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த கூட்டுப் பயிற்சி உதவிடும்.
ஐ.என்.எஸ். டெக் போர்க்கப்பலின் கேப்டன் விகாஸ் குலேரியா, அந்நாட்டு காவல்துறை ஆணையர் திரு. ராம்பிரசாத் சூரூஜேபள்ளி, அமைச்சரவைச் செயலாளர் திரு. சுரேஷ் சீபாலக், இந்திய தூதரக அதிகாரி திரு. அனுராக் ஸ்ரீவஸ்தவா, உள்துறைச் செயலாளர் திருமதி. கான் ஓயே ஃபாங் வெங் பூருன் உள்ளிட்ட அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பரஸ்பரம் இருதரப்பு நட்புறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
திறன் மேம்பாடு, சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளுதல், வீரர்களுக்கு பயிற்சி அளித்தல், தீயணைப்பு சேதக் கட்டுப்பாடு, பாலங்கள் மற்றும் இயந்திர அறைகளை கண்காணித்தல், மின் அமைப்புக்கள் மற்றும் சிறு அளவிலான ஆயுதங்களை கையாளுதல் போன்ற பயிற்சிகள் இதில் இடம்பெற்று இருந்தன.
*
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138898
----
(Release ID: 2138898)
AD/TS/SV/LDN/KR/DL
(Release ID: 2139027)