மக்களவை செயலகம்
தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாக கொண்ட ஆளுகை மூலம் நிதி மேற்பார்வை செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
Posted On:
23 JUN 2025 5:03PM by PIB Chennai
தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை மூலம், நிதிசார் கண்காணிப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுச் செலவினங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள், செயல்திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதன் மூலம், நிதிசார் ஒழுங்குமுறை பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக நடைமுறைகள் இருக்க வேண்டும் என்றும், நிதிசார் கண்காணிப்பு வழிமுறைகள் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இன்று மும்பையில் உள்ள மகாராஷ்டிரா விதான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடாளுமன்றம் மற்றும் மாநில / யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் மதிப்பீட்டுக் குழுக்களின் தலைவர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்திய நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 75 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் விழா மலரையும் திரு பிர்லா வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 75 ஆண்டுகள் சாதனைகளைக் கொண்டாடுவதுடன் நிதிசார் ஒழுங்குமுறை, நிர்வாகத் திறன், முறையான சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் அதிகரித்து வரும் இந்தக் குழுவின் பங்களிப்பும் எடுத்துக்காட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார். பல தசாப்தங்களாக, பட்ஜெட் மதிப்பீடுகளை ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகளை மதிப்பிடுவது, அரசின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவது போன்றவை இக்குழுவின் முக்கிய பொறுப்புகளாகும் என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற செயலக மறுசீரமைப்பு, ரயில்வே மற்றும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுத்திறன், கங்கை நதி புனரமைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இந்தக் குழுவின் பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார். நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு வழங்கிய பரிந்துரைகளில் 90 முதல் 95 சதவீத பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
விரிவான விவாதங்கள், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள், நிர்வாக பொறுப்புணர்வை உறுதி செய்தல் ஆகியவற்றில் நாடாளுமன்றக் குழு திறம்பட செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அரசியல் எல்லைகளைக் கடந்து, ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஜனநாயக முறையில் மேற்கொள்வதற்கு இந்தக் குழுவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று திரு ஓம் பிர்லா கூறினார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138925
AD/TS/SV/LDN/KR/DL
(Release ID: 2138999)