இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் - பந்தர்பூரில் 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

Posted On: 22 JUN 2025 6:14PM by PIB Chennai

ஆன்மீக பக்தி, உடல் தகுதி, சுற்றுச்சூழல் உணர்வு ஆகியவற்றின் இணைப்பாக 4வது அகில மகாராஷ்டிரா பந்தர்பூர் சைக்கிள் சம்மேளனம் - 2025 நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் நடைபெற்றது. இதில், ஃபிட் இந்தியா எனப்படும் உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியான ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வை இந்திய விளையாட்டு ஆணையத்தின் மும்பை பிராந்திய மையம், பந்தர்பூர் சைக்கிள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 90- க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுதல் கிளப்புகளைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மிதிவண்டி ஓட்டுநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இவர்கள், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள புனித நகரமான பந்தர்பூரை அடைய 3 முதல் 4 நாட்களுக்கு முன்பே 400 முதல் 450 கிலோமீட்டர் வரையிலான பயணத்தைத் தொடங்கினர். அவர்கள் ஆன்மீக நிகழ்வுகளிலும் பங்கேற்று முன்மாதிரியான உறுதிப்பாடு, பக்தி மற்றும் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகள்  இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே, மகாராஷ்டிரா அரசின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. ஜே.பி. கோர் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கௌரவித்தனர்.  இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய இயக்குநர் திரு பாண்டுரங் சேட், புகழ்பெற்ற சைக்கிள் ஓட்டுநர் டாக்டர் அமித் சமர்த் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

 இந்த நிகழ்வு நிலையான போக்குவரத்து, சமூக ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு சக்திவாய்ந்த செய்தியை வெளிப்படுத்தியது. மிதிவண்டி ஓட்டுதல் என்பது, ஆரோக்கியமான மற்றும் பசுமையான இந்தியாவுடன் இணைந்த வாழ்க்கை முறை என்பதை இது எடுத்துக் காட்டியது.

****

(Release ID: 2138728)

AD/TS/PLM/RJ


(Release ID: 2138740)
Read this release in: English , Urdu , Hindi , Marathi