தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சென்னை ஐஐடி-யில் முதலாவது தொலை தகவல் தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் பயிலரங்கு 2025-ஐ தொலை தகவல் தொடர்புத் துறை நடத்துகிறது
Posted On:
19 JUN 2025 3:07PM by PIB Chennai
சென்னை ஐஐடி-யில் முதலாவது தொலை தகவல் தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் பயிலரங்கு 2025-ஐ தொலை தகவல் தொடர்புத் துறை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் இன்று தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பயிலரங்கில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, தொலைத் தொடர்புத் துறை கூடுதல் செயலாளர் திரு குல்சார் நடராஜன், சென்னை ஐஐடி பேராசிரியர் ஆர் கே காந்தி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
இந்தப் பயிலரங்கின் தொடக்க அமர்வில் உரையாற்றிய நீரஜ் மிட்டல், புதிய கண்டுபிடிப்பில் பாய்ச்சல் வேக வாய்ப்புக்கு இந்தியப் பயணத்தில் தற்போது முக்கியமான தருணம் என்பதை வலியுறுத்தினார். தொழில்நுட்ப முன்னேற்றத்தை துரிதப்படுத்த பல்வேறு திட்டங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய டாக்டர் மிட்டல், இந்தியாவின் வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய பங்குதாரர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பொதுவான ஆதார வளங்களை அனைத்து பங்குதாரர்களுக்கும் தடையின்றி பகிர்வதை நோக்கமாக கொண்ட இணையப்பக்கம் உருவாக்கப்பட்டிருப்பது பற்றியும் அவர் விவரித்தார்.
நிர்வாக நடைமுறைகள் முதல் திறன் விரிவாக்கம் மற்றும் தொலை தகவல் தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் திறன் மற்றும் பயன்பாடு வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்தப் பயிலரங்கில் உரையாற்றிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, தொலை தகவல் தொடர்பு துறையிலிருந்து பெறப்பட்ட குறிப்பிடத்தக்க ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிதியத்தின் கீழ் பல முக்கியமான திட்டங்கள் பெறப்பட்டிருப்பதாக கூறினார். மிகவும் பயனுள்ள வகையில் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று பங்குதாரர்களையும். நிறுவனங்களையும் அவர் வலியுறுத்தினார்.
தொலைத் தகவல் தொடர்புத் துறையின் இணை இயக்குநர் திரு குல்சார் நடராஜன் உரையாற்றுகையில், தொலைத் தகவல் தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் என்பது வெறுமனே நிதியுதவி செய்யும் அமைப்பு மட்டுமல்ல என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத் துறைகளின் சுயேச்சையான திறன்களை கட்டமைப்பதில் இத்துறையில் முக்கியமான முன்முயற்சியும் ஆகும் என்றும் கூறினார்.
இந்தப் பயிலரங்கில் முதன்மை கண்டுபிடிப்பாளர்கள், கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், தொழில்துறை, புத்தொழில்கள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொலைத் தகவல் தொடர்புத் துறை மற்றும் இதர அரசு துறைகளின் மூத்த அதிகாரிகள் உட்பட சுமார் 500 பேர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2137640
***
AD/SMB/RR/KR
(Release ID: 2137714)