தேசிய மனித உரிமைகள் ஆணையம்
பீகார் மாநிலம், பி.எம்.சி.எச். மருத்துவமனையின் தாமதமான சிகிச்சை காரணமாக பாலியல் வன்கொடுமையுடன் கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளான சிறுமி உயிரிழந்ததாக வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது
Posted On:
02 JUN 2025 5:43PM by PIB Chennai
பீகார் மாநிலம் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (பி.எம்.சி.எச்.) பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளான ஒன்பது வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்க தொடங்குவதற்கு முன்பே பல மணி நேரம் அவசர ஊர்தியில் காத்திருந்து, பின்னர் பல மணி நேரம் படுக்கையில் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இடையே அச்சிறுமி 2025 ஜூன் 1, அன்று உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. 2025 மே 26, அன்று அம்மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் அச்சிறுமி பாதிக்கப்பட்டு 2025 மே 30 அன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஊடகங்களில் வெளியான செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், மனித உரிமைகள் மீறல் தொடர்பான கடுமையான பிரச்சனையை இது எழுப்புகின்றது என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2025 ஜூன் 1 அன்று ஊடகங்களில் வெளியான செய்தியின்படி அதே குற்றவாளி ஏற்கனவே மற்றொரு 12 வயது சிறுமிக்கு எதிராக அதே குற்றத்தில் ஈடுபட்டு அவளைக் கொல்ல முயன்றுள்ளார்.
***
(Release ID: 2133327)
AD/TS/IR/RR/DL
(Release ID: 2133354)