புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
உள்நாட்டு சுற்றுலா செலவின கணக்கெடுப்பு, தேசிய தனிநபர் உள்நாட்டுப் பயண கணக்கெடுப்பு பயிற்சியாளர்களுக்கு அகில இந்தியப் பயிலரங்கம்
Posted On:
29 MAY 2025 1:37PM by PIB Chennai
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம், உள்நாட்டு சுற்றுலா செலவின கணக்கெடுப்பு (DTES -டிடிஇஎஸ்), தேசிய தனிநபர் உள்நாட்டுப் பயண கணக்கெடுப்பு (NHTS- என்ஹெச்டிஎஸ்) ஆகியவற்றின் பயிற்சியாளர்களுக்கான அகில இந்திய பயிலரங்கு (AIWOT - ஏஐடபிள்யூஓடி), தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள இந்திய வணிகப் பள்ளியில் 2025 மே 28-29 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பு 2025 ஜூலை முதல் ஒரு வருட காலத்திற்கு தேசிய மாதிரி ஆய்வின் (என்எஸ்எஸ் -NSS) 80-வது சுற்றின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வுக்கான களப்பணி தொடங்குவதற்கு முன் ஏஐடபிள்யூஓடி எனப்படும் இந்தப் பயிலரங்கு ஒரு ஆயத்த பயிற்சித் திட்டமாக நடத்தப்பட்டது.
2025 மே 28 அன்று தேசிய மாதிரி ஆய்வு திட்ட (என்எஸ்எஸ்) தலைமை இயக்குநர் திருமதி கீதா சிங் ரத்தோர் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில், என்ஹெச்டிஎஸ், டிடிஇஎஸ் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சான்றுகள் அடிப்படையிலான கொள்கை வகுப்பில் கணக்கெடுப்புகளின் முக்கிய பங்கை அவர் குறிப்பிட்டார். சரியான நேரத்தில் தரவுகள் கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தரவு சேகரிப்பிலும் அதன் செயலாக்கத்திலும் பங்கேற்பாளர்கள் கடுமையான தரநிலைகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கள செயல்பாட்டுப் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி சுனிதா பாஸ்கர் பேசுகையில், முக்கியமான தரவுகளை சேகரிப்பதில் கள அதிகாரிகள் ஆற்றும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். தரவு சேகரிப்பின் போது மிகுந்த கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார். எந்தவொரு கணக்கெடுப்பின் வெற்றியும் பெரும்பாலும் கள அதிகாரிகள் பயன்படுத்தும் நுட்பங்களையும் அதன் விளைவாக பதிலளிப்பவர்களின் ஒத்துழைப்பையும் சார்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் பல்வேறு தேசிய மாதிரி ஆய்வு திட்ட (என்எஸ்எஸ் -NSS) பிரிவுகளைச் சேர்ந்த கூடுதல் தலைமை இயக்குநர்கள், துணைத் தலைமை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். சுற்றுலா அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், பங்கேற்கும் மாநிலங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
உள்நாட்டு சுற்றுலா செலவின கணக்கெடுப்பானது உள்நாட்டுப் பயணங்களுக்கு மக்கள் செய்யும் செலவுகள் குறித்த விரிவான தரவுகளையும், சுற்றுலா அமைச்சகத்திற்குத் தேவையான பிற முக்கிய தகவல்களையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, உள்நாட்டு ஒரு நாள் பயணங்கள் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்படும்.
ரயில்வே அமைச்சகத்தின் தேவைகளின் அடிப்படையில் இந்தியாவில் முதன்முறையாக ஒரு பிரத்யேக தேசிய அளவிலான உள்நாட்டு தனிநபர் பயண கணக்கெடுப்பு (NHTS-என்ஹெச்டிஎஸ்) நடத்தப்பட உள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்கள், பொது போக்குவரத்து அமைப்புகள் குறித்து சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் முக்கியமான தகவல்களை இது வழங்கும். இந்தியாவிற்குள் மக்கள் எப்படி, எங்கு, எந்த நோக்கத்திற்காக பயணிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை சேகரிப்பதை இந்தக் கணக்கெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட முக்கியமான தரவுகள், கொள்கை மேம்பாட்டுக்கும் உள்கட்டமைப்பு திட்டமிடலுக்கும் உதவும்.
ஆண்டு முழுவதும் அணுகக் கடினமாக உள்ள அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் உள்ள சில கிராமங்களைத் தவிர, இந்தியா முழுவதும் இந்த கணக்கெடுப்பு நடைபெறும்.
---
(Release ID 2132274)
AD/TS/PLM/KPG/RR
(Release ID: 2132407)