உள்துறை அமைச்சகம்
மகாராஷ்டிராவின் மும்பை மாதவ்பாக்கில் ஸ்ரீ லட்சுமி நாராயண் கோவிலின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
Posted On:
27 MAY 2025 5:09PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று மகாராஷ்டிராவின் மும்பை மாதவ்பாக்கில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண் கோவிலின் 150-வது ஆண்டு விழாவில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திரு அமித் ஷா, கடந்த 150 ஆண்டுகளாக, அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களும் மக்களிடையே நம்பிக்கையையும், சமூக சேவைக்கான வலுவான உணர்வையும் ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். அக்காலங்களில், ஸ்ரீ வர்ஜீவன்தாஸ், ஸ்ரீ நரோத்தம்பாய் ஆகியோர் இந்த நிறுவனத்தை சமூகத்தின் மீது தாராள மனப்பான்மை என்ற அடிப்படையில் நிறுவினர் என்று அவர் கூறினார். 1875-ம் ஆண்டு அந்நியர் ஆட்சிக் காலத்தில் ஒரு கோவிலைக் கட்டியது என்பது சிறந்த மனிதர்களால் மட்டுமே சமூக உணர்வை மீட்டெடுக்க முடியும் என்று காட்டியுள்ளது என அவர் கூறினார்.
லட்சுமிநாராயண் கோவிலில் பல வகையான சமூக நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், கல்விப் பணிகள், கீதை பயிற்சி தொடர்வதாகவும் ஒரு காலத்தில் ஒரு சமஸ்கிருதப் பள்ளி இங்கு இயங்கி வந்ததாகவும் திரு அமித் ஷா கூறினார். மாதவ்பாக் அறக்கட்டளையானது தூய்மை, சமநிலை மற்றும் நல்ல செயல்களின் சங்கமத்திலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்தப் பாரம்பரியம் 150 ஆண்டுகளாக நடந்து வருகிறது, இது நம் அனைவருக்கும் மிகவும் பெருமைக்குரிய அம்சம் என்றும் 200 ஆண்டு நிறைவைக் கொண்டாடும்போது, இந்த அறக்கட்டளையின் வடிவம் எப்படி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் திரு ஷா கூறினார். நடுத்தர வர்க்க சமூகத்தின் அனைத்து கவலைகளையும் நீக்கும் ஒரு மத மையமாக இந்த அறக்கட்டளையை மாற்ற முடியுமா என்று யோசித்து பார்க்குமாறு அவர் கூறினார். பல வகையான சுகாதார வசதிகளை வழங்குவதன் மூலம், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நோய்வாய்ப்பட்ட குடிமக்களுக்காக ஒரு சஞ்சீவனி மையத்தையும் இங்கு கட்ட முடியும் என்று அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.
நேற்று முன்தினம், திரு. நரேந்திர மோடி பிரதமராக 11 ஆண்டுகளை நிறைவு செய்ததாகவும், கடந்த 11 ஆண்டுகளாக, பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை முன்னோக்கி எடுத்துச் சென்று வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்தியராக இருப்பதில் மக்கள் பெருமைப்படும் அளவுக்கு பிரதமர் மோடி பணிகளைச் செய்துள்ளார் என்றும் அவர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக, நாட்டில் அரசியல் மன உறுதி இல்லாததால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. 550 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு வலுவான அரசியல் மன உறுதி தேவை என்று திரு ஷா கூறினார். இது பிரதமர் மோடியால் கட்டப்பட்டது. ஔரங்கசீப்பால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதரின் வழித்தடத்தை தற்போது கட்டுவதன் மூலம் காசி விஸ்வநாதரின் மகிமையை அதிகரிக்கும் பணி அதே வலுவான அரசியல் மன உறுதியின் விளைவாகும் என்று அவர் கூறினார். உலகின் ஒவ்வொரு வீட்டிற்கும் யோகாவை எடுத்துச் செல்லும் பணியை திரு நரேந்திர மோடி செய்துள்ளார் என்று திரு ஷா கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சியடையச் செய்து, ஒவ்வொரு துறையையும் தலைமைத்துவமாக மாற்ற பிரதமர் மோடி நம்பிக்கை அளித்துள்ளார் என்று அவர் கூறினார்.
சமீபத்திய ராணுவத் தாக்குதலை ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டதன் மூலம், மோடி சிந்தூரின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். பயங்கரவாதிகளின் பிரதேசத்திற்குள் நுழைந்து அவர்களின் தலைமையகத்தை அழித்ததன் மூலம் இந்தியா தனது மகளிர் சக்தியை பெருமையுடன் உயர்த்தியது என்று அவர் கூறினார்.
**
(Release ID 2131659)
AD/TS/IR/KPG/DL
(Release ID: 2131714)