தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ட்ரோன் அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஏற்ற குவாண்டம் விசை விநியோக தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி-டாட் மற்றும் சினெர்ஜி குவாண்டம் கையெழுத்திட்டுள்ளன
Posted On:
12 MAY 2025 11:38AM by PIB Chennai
குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்களில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு எதிர்கால முயற்சியாக, மத்திய தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கீழ் உள்ள முதன்மைத் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) நிறுவனமும், குவாண்டம் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப நிறுவனமான சினெர்ஜி குவாண்டம் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
தொழில்நுட்பத் தயார்நிலை 6 அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில், துருவமுனைப்பு குறியாக்கத்துடன் டிகோய் அடிப்படையிலான பிபி84 நெறிமுறையைப் பயன்படுத்தி, ட்ரோன் அடிப்படையிலான குவாண்டம் விசை விநியோக அமைப்புகளின் மேம்பாட்டில் சி - டாட் நிறுவனம் மற்றும் சினெர்ஜி குவாண்டம் நிறுவனம் இடையேயான ஒத்துழைப்பை முறைப்படுத்துவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். "தற்சார்பு இந்தியா" முன்முயற்சியின் கீழ் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும், வளர்ந்து வரும் பாதுகாப்பான தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, சி-டாட் மற்றும் சினர்ஜி குவாண்டம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ட்ரோன் அடிப்படையிலான பயன்பாட்டிற்கு உகந்த குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும். தேசிய, சர்வதேச அளவில் பெரிய ஆராய்ச்சித் திட்டங்களை இணைந்து உருவாக்குதல், அறிவுசார் ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீடுகள், வெள்ளை அறிக்கைகள் மற்றும் பிற தளங்கள் வாயிலாக ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் இந்தக் கூட்டு நடவடிக்கைகளில் அடங்கும். இந்த இரு நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள், துறை சார்ந்த நிபுணர்களும் சந்தித்து பேச்சுவார்த்தைகள், குறுகிய கால பாடத்திட்டங்களை வழங்குதல் மற்றும் குறித்த நேரத்தில் ஆராய்ச்சி கருப்பொருள்கள் தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் ஈடுபடவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சி-டாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உபாத்யாய், "இந்தியாவிற்கு பாதுகாப்பான, தன்னம்பிக்கை கொண்ட டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு ஏதுவாக பொது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தனியார் கண்டுபிடிப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம் என்று தெரிவித்தார். அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதற்கு குவாண்டம் தொழில்நுட்பங்கள் உறுதியான நிலைப்பட்டைக் கொண்டுள்ளதாகவும், மேலும் சினெர்ஜி குவாண்டம் நிறுவனத்துடனான இந்த ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழில்நுட்ப களத்தில் உள்நாட்டு திறன்களை விரைவுபடுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். வலுவான ஆராய்ச்சி நடவடிக்கைகளை தொழில்துறையுடன் இணைப்பதன் மூலம், தேசிய அளவிலான முதன்மைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், குவாண்டம் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில், அது தொடர்பான தீர்வுகளை கூட்டாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
சினெர்ஜி குவாண்டம் நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஜெய் ஓபராய், சி-டாட் நிறுவனத்துடன் பணிபுரியும் வாய்ப்பு உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது என்று கூறினார். "இந்த ஒப்பந்தம் ட்ரோன் அடிப்படையிலான குவாண்டம் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான தகவல்தொடர்பு சாதனங்களுக்கான உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128211
***
SM/SV/DL
(Release ID: 2128227)
Visitor Counter : 2