கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திய பௌத்த பாரம்பரியம் குறித்த இரண்டு ஆவணப்படங்கள் - தேசிய அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுத் திரையிடப்பட்டது
Posted On:
08 APR 2025 8:00PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகமும், நவ நாளந்தா மகாவிகாரை, நாளந்தா புத்ததர்ம அறக்கட்டளை ஆகியவையும் இணைந்து, இரண்டு முக்கியமான ஆவணப்படங்களை வெளியிட்டு, சிறப்புத் திரையிடல் நிகழ்வைப் புது தில்லியின் தேசிய அருங்காட்சியக கலையரங்கத்தில் நேற்று (2025 ஏப்ரல் 08) நடத்தின.
நவ நாளந்தா மகாவிகாரையின் துணைவேந்தர் பேராசிரியர் சித்தார்த் சிங் தனது தொடக்கவுரையில் புத்தரின் அடிச்சுவடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தங்கள் பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இந்த ஆவணப்படங்கள் அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் புத்த ரஷ்மி மணி தலைமை உரையாற்றினார். பேராசிரியர் மணி தனது உரையில், இந்தியாவின் பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். புத்த மதத்தின் வளமான வரலாறு, அதன் கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதில் இந்த ஆவணப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார்.
ஆவணப்படங்களைப் பற்றி:
1) நாளந்தா: எ ஜர்னி த்ரூ டைம்
நாளந்தா: எ ஜர்னி த்ரூ டைம் என்ற ஆவணப்படம் பௌத்த இலக்கியம், தத்துவம், கலை, கட்டடக்கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு நாளந்தா மகாவிகாரையின் (பழங்கால நாளந்தா பல்கலைக்கழகம்) இணையற்ற பங்களிப்புகளைக் காட்டும் ஒரு அற்புதமான ஆவணப் படமாகும். பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை, ஆசியா முழுவதும் பௌத்த மதம் பரவுவதில் நாளந்தா முக்கிய பங்கு வகித்தது. சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பௌத்த சிந்தனை, கலைச் சின்னங்களில் செல்வாக்கு செலுத்தும் உலகளாவிய கருத்துப் பரிமாற்றத்திற்கான மையமாக இது இருந்தது. பௌத்த மரபுகள், தத்துவங்களை வடிவமைப்பதில் நாளந்தா வகித்த முக்கிய பங்கை ஆவணப்படுத்துவதை இந்தப் படம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2) குர்பா: மகாகாஸ்யபாவின் கடைசி அடிச்சுவடுகள் (Gurpã: The Last Footsteps of Mahakasyapa)
குர்பா: மகாகாஸ்யபாவின் கடைசி அடிச்சுவடுகள் (Gurpã: The Last Footsteps of Mahakasyapa), என்ற இந்தப் படம் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து 25 சர்வதேச துறவிகளின் யாத்திரையைப் பற்றி எடுத்துரைக்கிறது.
இந்த ஆவணப்படம் மகாகாஸ்யபாவின் வாழ்க்கை வரலாறு, தீர்க்கதரிசனம், ஆன்மீக அம்சங்கள், பௌத்தத்தின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றான குர்பா மலையின் புனிதத்தன்மை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
இயக்குனர் சுரிந்தர் எம் தல்வார் ஒலி-ஒளி துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்திய ஆவணப்பட இயக்குநர் ஆவார். ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படங்கள், குறும்படங்கள், ஆவண நாடகங்கள், கார்ப்பரேட் படங்கள், விருது பெற்ற இசை வீடியோக்கள் உட்பட பரந்த அளவிலான திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரது படங்கள் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு சர்வதேச மன்றங்களில் திரையிடப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், தல்வார் பௌத்தம், இந்திய பௌத்த பாரம்பரியம் தொடர்பான ஆவணப் படத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தக் குறிப்பிடத்தக்க ஆவணப்படம் எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் வெசாக் கொண்டாட்டம் 2025-ல் திரையிடப்படும்.
***
(Release ID: 2120275)
TS/PLM/AG/KR
(Release ID: 2120305)