ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: தமிழகத்தில் ஜல் ஜீவன் இயக்கம்
Posted On:
17 MAR 2025 4:54PM by PIB Chennai
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கம் – இல்லந்தோறும் குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 15.08.2019 நிலவரப்படி, 21.76 லட்சம் (17.37%) கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அன்றிலிருந்து கூடுதலாக, சுமார் 89.08 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, 13.03.2025 நிலவரப்படி, அம்மாநிலத்தில் உள்ள 1.25 கோடி கிராமப்புற வீடுகளில், சுமார் 1.10 கோடி (88.48%) கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைக்கிறது.
ஊரகப் பகுதிகளில் உள்ள குடிநீர் வழங்கல் அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்ய, குறிப்பாக பராமரிப்பு மற்றும் தரக் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைக்கோடியில் உள்ள குடியிருப்புகளுக்கு உரிய அளவு நீரை முறையாக பராமரித்து வழங்குவதை உறுதி செய்வதற்காக செயல்பாட்டு அடிப்படையிலான இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தத்தின்படி, ரசாயனங்கள் உள்ளிட்ட சி.டபிள்யூ.எஸ்.எஸ் பராமரிப்பு, கசிவுகள், வெடிப்புகளை சரிசெய்தல் மற்றும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட அளவு வழங்குவதை உறுதி செய்தல் ஆகியவை ஒப்பந்ததாரரின் பொறுப்பாகும்.
இயக்குதல் மற்றும் பராமரிப்பு திட்டங்களில் அன்றாடம் நீரேற்று அளவு, பயனாளிகள் வாரியாக வழங்கப்படும் மின்சாரம், கசிவு மற்றும் வெடிப்புகள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அலுவல் மற்றும் மேலாண்மை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, நாள்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கிராம ஊராட்சிகளிடமிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, குடிநீர்த் திட்டங்களின் பராமரிப்பில் உள்ள கள விவரங்களை அறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மொத்த குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் அவசரக் கால தகவல் செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு. வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111864
***
TS/SV/RJ/DL
(Release ID: 2111978)