அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விண்வெளித் துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விருந்தளித்தார்
Posted On:
28 FEB 2025 7:07PM by PIB Chennai
விண்வெளித் துறை நிபுணர்களுடன், ஆணையர் ஆண்ட்ரியஸ் குபிலியஸ் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுக் குழுவினருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் இன்று விருந்தளித்தார். விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான தற்போதைய மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து தூதுக்குழு விவாதங்களில் ஈடுபட்டது. இந்திய தரப்பில், இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலாளருமான திரு.வி.நாராயணன் மற்றும் மூத்த விண்வெளி விஞ்ஞானிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரிடயே உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், "விண்வெளித் துறையில் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய இடைவினைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது, அது வலுவாக வளர்ந்து வருகிறது" என்று கூறினார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்தை ஆராய்ந்த அவர், விண்வெளியில் இந்தியாவின் சாதனைகளை உலகளாவிய அளவுகோலாகப் பாராட்டினார், கடந்த தசாப்தத்தில் விண்வெளித் துறையில் அதன் வளர்ச்சியைக் குறிப்பிட்டார்.
"செயற்கைக்கோள்களை உருவாக்குதல், ஏவுதல் மற்றும் இயக்குவதில் இந்தியா சுயாதீன திறன்களைப் பெற்றுள்ளது, அத்துடன் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் இந்த செயற்கைக்கோள்களிலிருந்து பயன்பாடுகளைப் பெறுகிறது" என்று டாக்டர் சிங் கூறினார். சந்திரயான்-3 திட்டம், ஸ்பாடெக்ஸ் திட்டம் மற்றும் ககன்யான் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் போன்ற சமீபத்திய செயல்பாடுகளை அவர் விளக்கினார். 21-ஆம் நூற்றாண்டின் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா ஒரு முக்கிய நாடாக இருக்கும் என்று டாக்டர் சிங் அறிவித்தார்.
2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பரந்த இலக்குடன் இணைந்துள்ள இந்தியாவின் மாறிவரும் விண்வெளி பார்வையை அவர் எடுத்துரைத்தார். ககன்யான் திட்டத்தின் தொடர்ச்சி, இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம், இந்தியாவின் விண்வெளி நிலையம் மற்றும் நிலவில் இந்தியா தரை இறங்கியது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் லட்சிய விண்வெளி திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்ததற்காக பிரதமரின் தலைமைக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளி கூட்டமைப்புடன் இணைந்து விண்வெளி ஆய்வு குறித்த உலகளாவிய மாநாட்டை (ஜி.எல்.இ.எக்ஸ்) வரும் மே மாதம் புதுதில்லியில் இஸ்ரோ நடத்தும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்குமாறு ஐரோப்பிய விண்வெளித்துறையின் பங்குதாரர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107054
*****
RB/DL
(Release ID: 2107156)