வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-கத்தார் கூட்டு வர்த்தக மன்றக் கூட்டம்: புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது
Posted On:
17 FEB 2025 6:52PM by PIB Chennai
இந்தியா-கத்தார் கூட்டு வர்த்தக மன்றக் கூட்டம் நாளை (18.02.2025) புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்தியாவும் கத்தாரும் தங்கள் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் - உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையும் (DPIIT) இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்தியா – கர்த்தார் இடையே முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர் இதில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
2025 பிப்ரவரி 17-18 ஆகிய தேதிகளில் கத்தார் அமீர் திரு ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த வர்த்தக மன்றக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயலும், கத்தாரின் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு ஷேக் பைசல் பின் தானி பின் பைசல் அல் தானியும் பங்கேற்கின்றனர். இரு அமைச்சர்கள் தலைமையிலான இருநாட்டுப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். எரிசக்தி, உள்கட்டமைப்பு, நிதி, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, சரக்கு போக்குவரத்து, உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
-----
TS/PLM/KPG/DL
(Release ID: 2104203)