மக்களவை செயலகம்
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வலுவான மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நட்புறவு, உலகம் பின்பற்றுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் ராஜதந்திரத்தின் பிரகாசமான எடுத்துக்காட்டு: மக்களவை சபாநாயகர்
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2025 6:24PM by PIB Chennai
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வலுவான மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நட்புறவு, உலகம் பின்பற்றுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் ராஜதந்திரத்திற்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆழமான நட்பை எடுத்துரைத்த அவர், இந்திய-ரஷ்ய இருதரப்பு உறவுகள் உலக அரங்கில் மிகவும் சிறப்பானதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது என்றும், சுதந்திரம் பெற்றதில் இருந்து ரஷ்யா இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்ய கூட்டமைப்பின் கூட்டாட்சி சட்டமன்றத்தின் டூமாசபையின் தலைவர் மேதகு திரு. வியாசெஸ்லாவ் வோலோடின் தலைமையிலான ரஷ்ய நாடாளுமன்ற தூதுக்குழு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தபோது திரு. பிர்லா இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
2024-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்புக்கு மிகவும் பயனுள்ள மற்றும் கணிசமான தலைமைப் பொறுப்பை வழங்கியதற்காக ரஷ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த திரு பிர்லா, 2024-இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடாளுமன்ற உச்சிமாநாட்டிற்கு தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு பிர்லா, நாடாளுமன்ற செயல்முறைகளை வலுப்படுத்துவதிலும், உறவுகளை ஆழப்படுத்துவதிலும் இத்தகைய பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தியாவின் நாடாளுமன்றக் குழு அமைப்பு பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் திரு பிர்லா முன் வைத்தார். அவற்றை "சிறிய நாடாளுமன்றம்" என்று விவரித்து, அங்கு பட்ஜெட் விஷயங்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் விரிவாக ஆராயப்படுவதாகக் குறிப்பிட்டார். குடியரசாக இந்தியா 75-வது ஆண்டை நிறைவு செய்ததை குறிப்பிட்ட திரு பிர்லா, சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் பயணம் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்வதில் அரசியலமைப்பின் நிறுவனர்களின் தொலைநோக்கு முயற்சிகள் குறித்து அவர் விளக்கினார். அரசியலமைப்பு மாண்புகளை வலுப்படுத்துவதில் இந்த ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து வருகை தந்த குழுவினரிடம் அவர் எடுத்துரைத்தார்.
சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்திசார் கூட்டாண்மையாக உருவெடுத்துள்ள இந்திய-ரஷ்ய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியாவும் ரஷ்யாவும் பலதரப்பு களத்தில் துடிப்பான உறவுகளை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான மக்களுக்கு இடையேயான உறவுகள் இந்த விரிவான கூட்டாண்மைக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியுள்ளன என்று குறிப்பிட்டார். தற்போதைய பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை வளர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேதகு திரு. வியாசெஸ்லாவ் வோலோடின் தனது தூதுக்குழுவிற்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக திரு பிர்லாவுக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புட்டின் ஆகியோரின் நெருங்கிய உறவுகள் மூலம் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வரும் இந்திய-ரஷ்ய கூட்டாண்மையை அவர் பாராட்டினார். இந்தியக் குடியரசின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்தியாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த திரு. வோலோடின், கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா உலக வல்லரசாக உருவெடுத்ததைக் குறிப்பிட்டு, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2099246®=3&lang=1
****************
BR/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2099364)
வருகையாளர் எண்ணிக்கை : 81