பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு துறை அமைச்சர், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2024 6:01PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2024 அக்டோபர் 29 அன்று புதுதில்லியில் உள்ள சவுத் பிளாக்கில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை ஆய்வு செய்தார். பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரித்தல் ஆகியவற்றின் புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஆயுதப் படைகளை தயார்படுத்துவதில் பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டிலேயே தயாரித்தல் ஆகியவற்றில் அர்ப்பணிப்பு முயற்சிகள் மற்றும் வளங்களை ஈடுபடுத்துமாறு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். உற்பத்தி திறன், பொருட்களின் தரம் ஆகியவற்றை அதிகரிக்கவும், ஆயுதப்படைகளுக்கு சரியான நேரத்தில் வழங்கவும் அவர் வலியுறுத்தினார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) மகாரத்னா அந்தஸ்து பெற்றதற்கும், நாட்டின் 14-வது மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாகவும், பொதுத்துறை நிறுவனங்களில் முதலாவதாகவும் ஆனதற்கு நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குநருக்கு திரு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். மற்ற பொதுத்துறை நிறுவனங்களை மகாரத்னா மற்றும் நவரத்னாவாக வளர அவர் ஊக்குவித்தார். பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் திரு. சஞ்சீவ் குமார், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் நிதி செயல்திறன், தற்போதைய நிலை, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வகை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உள்நாட்டுமயமாக்கல் ஆகிய துறைகளில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.
இந்த ஆய்வின் முடிவில், எச்ஏஎல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பிஇஎம்எல் லிமிடெட், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட் மற்றும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.1620 கோடிக்கான ஈவுத்தொகை காசோலைகளை பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்கின.
***
AD/IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2069367)
வருகையாளர் எண்ணிக்கை : 63