ஜவுளித்துறை அமைச்சகம்
பாரத் டெக்ஸ் 2025 சர்வதேச அளவில் உத்வேகம் பெற்று வருகிறது : மத்திய ஜவுளி அமைச்சகம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் கலந்துரையாடல் அமர்வுக்கு ஏற்பாடு
Posted On:
22 OCT 2024 2:07PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகம், பாரத் டெக்ஸ் 2025 மாநாட்டிற்காக, புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் கலந்துரையாடல் அமர்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆஸ்திரேலியா, அஜர்பைஜான். பிரேசில், கொலம்பியா, சிலி, டென்மார்க், எகிப்து, பின்லாந்து, இந்தோனேசியா, இத்தாலி, கஜகஸ்தான், கென்யா, லெசோதோ, மான்டிநெக்ரோ, மலேசியா, மங்கோலியா, மெக்சிகோ, பெரு, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ரஷ்யா, இலங்கை, சோமாலியா, தைவான், டோகோ, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டன.
மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார். மத்திய ஜவுளித்துறை செயலாளர் திருமதி ரச்சனா ஷா, வெளியுறவுத்துறை சிறப்பு செயலாளர் திரு பி குமரன், ஜவுளித்துறை கூடுதல் செயலாளர் திரு ரோஹித் கன்சால், ஜவுளித்துறை வர்த்தக ஆலோசகர் திருமதி சுப்ரா மற்றும் தொழில்துறை நிர்வாகிகள், உயர் அதிகாரிகளும் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மார்கரிட்டா, வெளிநாட்டுத் தூதர்களும், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பாரத் டெக்ஸ் 2025-ல் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சி இதுவரை நடந்திராத அளவிற்கு மிகப்பெரியதாகவும், மிக விரிவானதாகவும் அமையும் என்று குறிப்பிட்ட அவர், பாரத் டெக்ஸ், ஜவுளித்துறை சார்ந்த ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலியையும் ஓரிடத்தில் திரட்டும் தனித்துவமான முயற்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டார். உலகளாவிய அளவில் ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான முறையில் தீர்வு காண்பதில் இந்திய ஜவுளி நிறுவனங்களின் தொழில்முனைவு உணர்வை அவர் எடுத்துரைத்தார். நம்பகமான நீடித்த வளமுடைய இடமாகவும், பெரிய அளவிலான ஜவுளித் தொழிலில் முதலீட்டுக்கு உகந்த நாடாகவும் இந்தியாவை உலக நாடுகள் நாடி வருவதை பாரத் டெக்ஸ் உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். மதிப்புக்கூட்டு சங்கிலித் தொடர் முழுவதும் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் திறன் ஜவுளித் தொழிலுக்கு இருப்பதோடு, அது சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மக்களின் வாழ்க்கைக்கு உதவிகரமாகவும் இருக்கிறது. புதுமையான கண்டுபிடிப்புகள், ஒத்துழைப்புகள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற உணர்வை மையக் கருத்தாக கொண்டு, பண்ணை, நூல், தொழிற்சாலை, நவநாகரீக ஆடை, வெளிநாடு ஆகிய பிரதமரின் இந்த வரிசைக்கிரமமான 5F தொலைநோக்கின் உருவகமாகவும் இந்த நிகழ்ச்சி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067001
***
TS/MM/AG/KV
(Release ID: 2067048)