மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
புதிதாக அறிவிக்கப்பட்ட ஐந்து செம்மொழிகளின் அறிஞர்களுடன் திரு தர்மேந்திர பிரதான் உரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 OCT 2024 5:32PM by PIB Chennai
அண்மையில் புதிதாக செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட பிராகிருதம், பாலி, மராத்தி, வங்கமொழி மற்றும் அசாமிய மொழிகளின் அறிஞர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார். பாரதிய மொழி சமிதியின் தலைவர் திரு சாமு கிருஷ்ண சாஸ்திரி, பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் திரு எம் ஜெகதீஷ் குமார், கல்வியாளர்கள், அறிஞர்கள் மற்றும் அமைச்சகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு அறிஞர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தினர். இந்த அழகான இந்திய மொழிகளை செம்மொழி பட்டியலில் சேர்த்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த மொழிகளை மேம்படுத்துவதற்கும், வளப்படுத்துவதற்கும் அவர்கள் தங்கள் ஆதரவை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை 2020-ன் உணர்விற்கு ஏற்ப, இந்திய மொழிகளில் கற்றலை ஊக்குவிக்கவும், நாட்டின் மொழியியல் பாரம்பரியத்தைக் கொண்டாடவும், கௌரவிக்கவும், பாதுகாக்கவும் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
நாட்டின் அனைத்து மொழிகளும் இந்திய மொழிகள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் கூறி வருவதையும் திரு பிரதான் சுட்டிக்காட்டினார். அனைத்து இந்திய மொழிகளிலும் கற்பதை வலுப்படுத்தவும், எளிதாக்கவும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார் அவர். தாய்மொழியில் கற்கும் வசதி, அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து பன்மொழிப் புலமையை உயர்த்துதல், சர்வதேச அளவில் தங்கள் இருப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் தாம் உறுதியாக உள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவின் ஆன்மா அதன் மொழிகளில் வாழ்கிறது என்றும் திரு பிரதான் கூறினார். இந்திய மொழிகளின் சர்வதேச இருப்பைக் கட்டியெழுப்பவும் அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
***
PKV/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2066154)
வருகையாளர் எண்ணிக்கை : 397