சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று': 80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன

ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!

Posted On: 27 SEP 2024 10:58AM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தைத் தொடங்கினார். இது சுற்றுச்சூழல் பொறுப்பை, தாய்மார்களுக்கு இதயபூர்வமான அஞ்சலியுடன் இணைக்கும் ஒரு தனித்துவ முயற்சியாகும். இந்த இயக்கம்  2024, ஜூன் 5  அன்று தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றினை நட்டதன் மூலம் பிரதமரால் தொடங்கப்பட்டது.

2024, செப்டம்பருக்குள் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தின்  கீழ் 80 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கான லட்சிய இலக்கை சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் வெற்றிகரமாக எட்டியது. இந்த இலக்கு 2024,  செப்டம்பர் 25 அன்று, காலக்கெடுவுக்கு 5 நாட்கள் முன்னதாகவே  எட்டப்பட்டது. அரசு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளால் இந்த சாதனை சாத்தியமானது.

2024,  செப்டம்பர்  22 அன்று, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள பிராந்திய ராணுவத்தின் 128 காலாட்படை பிரிவுகளும் சுற்றுச்சூழல் பணிக்குழுவும்  ஜெய்சால்மரில் ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியது. இந்த மகத்தான சாதனை, லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது . அவற்றில் சில புதிய உலக சாதனைகள்:

* ஒரு மணி நேரத்தில் ஒரு குழுவால் பெரும் எண்ணிக்கையில் நடப்பட்ட  மரக்கன்றுகள்.

* ஒரு மணி நேரத்தில் பெண்கள் குழுவால் பெரும் எண்ணிக்கையில் நடப்பட்ட  மரக்கன்றுகள்.

* ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மரக்கன்றுகளை நட்டது

பிரதமர் மோடியின் அழைப்புக்கு இணங்க, சுதந்திர தினமான 2024, ஆகஸ்ட் 15 அன்று 15 லட்சம் மரக்கன்றுகளை  நடுவதற்கான நாடு தழுவிய முயற்சியை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.  தகவல், ஒளிபரப்பு அமைச்சகமும் மரக்கன்றுகள்  நடும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் சுமார் 7,000 மரக்கன்றுகளை இத்துறை நட்டுள்ளது.

இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, திரு ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான திறன் மேம்பாடுதொழில்முனைவோர் அமைச்சகம், அதன் நிறுவனங்கள் முழுவதும் பரவலான மரக்கன்றுகள்  நடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்களில்  11,778 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதைத் தொடர்ந்து குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் தலைமையிலான  தூய்மையே சேவை  2024 இயக்கம், தூய்மை மற்றும் பசுமைப் பரப்பு விரிவாக்கத்தை வலியுறுத்தியது.

 

இந்த இயக்கத்தின் வெற்றி அதன் எளிமையிலும்  உணர்ச்சிபூர்வமான முறையீட்டிலும் உள்ளது. தங்கள் தாய்மார்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு மரத்தை நடவு செய்ய நாடு முழுவதும் உள்ள மக்களை ஊக்குவிக்கிறது. இவ்வாறு செய்யும்போது, அவர்கள் இயற்கை, தாய்மை ஆகிய இரண்டின் வளர்ப்பு சக்தியை மதிக்கிறார்கள்.  ஆரோக்கியமான மற்றும் நிலையான உலகத்தை எதிர்கால சந்ததியினர் மரபுரிமையாக பெறுவதை உறுதி செய்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2059326  

***

SMB/AG/KR



(Release ID: 2059463) Visitor Counter : 14