புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலை குறியீடு குறித்து முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2024 9:17AM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், செப்டம்பர் 24, 2024 அன்று மும்பையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (சி.பி.ஐ) குறித்து முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இந்தக் கலந்துரையாடலில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு நிலேஷ் ஷா, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர் திரு கணேஷ் குமார், முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் திருமதி இலா பட்நாயக், ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர் இயக்குநர் திரு தீபக் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இந்திய ரிசர்வ் வங்கி, சிட்டி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏ.எம்.சி, சுனிதி செக்யூரிட்டீஸ் & ஃபைனான்ஸ் லிமிடெட், ப்ளூம்பெர்க் எக்கனாமிக்ஸ், நிர்மல் பேங் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ், நிர்மல் பேங், ஆர்.பி.எல் வங்கி, மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள், மோர்கன் ஸ்டான்லி, நோமுரா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் 50 க்கும் மேற்பட்ட முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சவுரப் கார்க், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட பல்வேறு பாரிய பொருளாதார குறியீடுகளை எடுத்துரைத்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோர் மற்றும் தொழில் விலைக் குறியீடு ஆகியவற்றில் தொடங்கப்பட்ட அடிப்படை ஆண்டு திருத்தம் குறித்தும் விளக்கினார். வெளியிடப்பட்ட குறியீடுகள் குறித்த நேரத் தொடர் தரவுகளை எளிதாக அணுகுவதற்காக புதிதாக தொடங்கப்பட்ட இ-சங்க்யிகி வலைத்தளம் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு அவர் விளக்கினார். தனியார் துறை முதலீட்டில் உள்ள இடைவெளியை நிரப்ப கூட்டு அடிப்படையிலான மூலதன செலவீன கணக்கெடுப்பைத் தொடங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சி.பி.ஐ ஆகியவற்றிற்காக மேற்கொள்ளப்பட்ட அடிப்படை திருத்த நடவடிக்கைகள் குறித்த தற்போதைய வழிமுறை மற்றும் புதுப்பிப்புகளை விவரிக்கும் விளக்கக்காட்சிகள் முன்வைக்கப்பட்டன. தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன், மூலதன செலவீன கணக்கெடுப்புக்கான மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் முன்முயற்சியைப் பாராட்டினார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், கோடக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான திரு. நிலேஷ் ஷா, தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்யவும், வெளியீட்டின் கால தாமதத்தைக் குறைக்கவும் மேம்பாட்டுக்கான வழிகளைக் கண்டறியுமாறு யோசனை கூறினார்.
மேம்பட்ட தெளிவு, முதலீடு, வர்த்தகம் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு சரியான நேரத்தில் நிலையான தரவு கிடைக்க வேண்டும் என்று இந்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு அஜய் சேத் பரிந்துரைத்தார். சிறந்த தரவு நிர்வாகத்திற்கு, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2058437)
BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2058485)
வருகையாளர் எண்ணிக்கை : 107